செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

திங்கள், பிப்ரவரி 06, 2012

வள்ளலார் என்னும் வாழ்வியல் சகாப்தம் !


வள்ளலார் பிறந்த பிறகுதான் பயிர்ச் செடிகளுக்கும் ஒரு பாசமுள்ள அன்னை உண்டு என்று உலகுக்குத் தெரிந்தது. அகத்தே கருத்தும், புறத்தே வெளுத்த மனிதர்களை சகத்தே திருத்த தெய்வமாக பிறந்தவர்தான் வள்ளலார். ‘ஜுவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு, பசி நெருப்பை அணைப்பதே ஜுவகாருண்யம்’ என்ற புதிய வேதத்தை தோற்றுவித்தவர். இந்தியாவில் 7 லட்சம் கிராமங்களில் வாழும் உயிர்களை காக்க தமிழகத்தில் அன்னதானம், சம்போஜனம் என்ற விதைகளை முதலில் விதைத்தவர் வள்ளலார்தான். பொருளை அள்ளி அள்ளிக் கொடுத்த வள்ளல்களை விட அருளை அள்ளி அள்ளி வழங்கிய அருட்பிரகாசரை உலகமே வியப்புடன் பார்த்தது, பார்க்கிறது!

ஆன்மிகப் பேரொளி வள்ளலார் ராமலிங்கர் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி மாலை ஐந்தரை மணிக்கு, தென்ஆற்காடு மாவட்டம் மருதூரில் வசித்த இராமையா-சின்னம்மை தம்பதியருக்கு தோன்றினார். வள்ளலார் என்று அழைக்கப் படும் இராமலிங்க சுவாமிகள் ஞானி மட்டுமல்ல. சமுதாயத்தில் புரட்சிகரமான மாறுதல்கள் செய்யவே அவதரித்தார்.

இராமலிங்கர் குழந்தையாக இருந்த போதே, பெற்றோர் இறந்து விட்டனர். எனவே, இராமலிங்கரை அவருடைய தமையனார் சபாபதி வளர்த்தார். இராமலிங்கருக்கு பள்ளிப் படிப்பில் நாட்டம் இல்லை. சிறு வயதிலேயே இராமலிங்கருக்கு ஆன்மிக நாட்டம் அதிகம் இருந்தது. ஐந்து வயதிலேயே சந்தநயம் மிக்க பக்திப் பாடல்களை இனிய குரலில் பாட தொடங்கினார். சென்னை கந்தர் கோட்டத்தில் சரமாரி பொழியும் பாடலைக் கேட்டு, “ படிக்காதவன், முரட்டுப்பிள்ளை” என்று கருதிய சபாபதி இவற்றைக் கண்டு வியந்தார்.


வீட்டு மாடி அறையில் கண்ணாடி முன் விளக்கை ஏற்றிவைத்து அந்த வெளிச்சத்தில் படித்து வந்தார் இராமலிங்கர். அங்குதான், ஒன்பது வயதில் இராமலிங்கருக்கு ‘ஞானோதயம்’ கிடைத்தது. ‘ஒருநாள், கண்ணாடியில் இருந்து அருட்சோதி கிளம்பி என்னை சூழ்ந்தது. இறையருளின் ஈடு இணையற்ற கருணையில் பரவசப்பட்டேன்’ என்று பக்தர்களிடம் தெரிவித்துள்ளார், இராமலிங்கர்.

அண்ணன் சபாபதியின் ஆன்மிக சொற் பொழிவுகளின் போது உதவியாளராக செயல்பட்டு வந்தார் இராமலிங்கர். ஒருநாள் இராமலிங்கரை சொற் பொழிவாற்றக் கூறினார் சபாபதி. திருஞான சம்பந்தர் பற்றி இராமலிங்கர் சொற் பொழிவாற்றினார். மெய்மறந்த கூட்டம் ‘12 வயதிலேயே அந்த ஞானமா!’ என போற்றி துதித்தது. பல பகுதிகளிலும் இராமலிங்கரின் அருளுரைகள் தொடர்ந்தன.

வள்ளலார் பாதை: மக்கள் மனதில் வள்ளல் வள்ளலார் ஆனார். அவர் அருள்மனம் பல மதத்தினரும் கூடி வழிபடும் ஞானசபை ஆயிற்று. வடலூரில் வசிக்க ஆரம்பித்த இராமலிங்கர், 1867 மே 23 ல் ‘தர்மசாலை’ யைத் தொடங்கி ஏழை எளியோர்க்கு உணவு, மருத்துவ சேவை அளித்து அருளுரைகளையும் நிகழ்த்தி வந்தார். அங்குதான், இராமலிங்கரின் தெய்வீக சக்தி சித்து வேலைகளாகப் பொங்கி பிரவாகித்தது.

கவிஞர், சமூக சீர்திருத்தவாதி, மறுமுறை கண்ட வாசகம், ஜுவகாருண்ய ஒழுக்கம் என்ற நூல்களை இயற்றிய நூலாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர், போதாகாசிரியர், சித்த மருத்துவர், அருள்ஞானி, கல்வெட்டு ஆராய்ச்சியாளர், தமிழகத்தில் முதல் திருக்குறள் வகுப்பு நடத்தியவர், மும்மொழி கல்வியை கொண்டுவந்தவர், முதல் முதியோர் கல்விக்கு வித்திட்டவர் என்று பல சிறப்பு பெயர்களை பெற்றார்.

ஆழ்மன வழிபாடு, தியானம் பற்றிய வழி காட்டுதல்கள் போன்றவை ‘வள்ளலார் பாதை’ என்று பிரசித்தி பெற ஆரம்பித்தது. அவரது பன்முக ஞானமும், முதன்மையும் நம்மை வியக்க வைக்கின்றன. 1867 ல் இராமலிங்க அடிகளாரின் பாடல்களை ‘திருஅருட்பா’ என்ற பெயரில் வெளியிட்டார் அவரது முதல் சீடரான வேலாயுத முதலியார்.

வள்ளலாரின் கொள்கைகள்: மதங்களின் மூன்று முக்கிய அம்சங்கள் தத்துவம், ஒழுக்கம், சடங்குகள். இவற்றில் மக்களிடம் மதவெறியைத் தூண்டுவது சடங்குகளே எனக் கண்டு அவற்றை ஒதுக்கி, மனித இனங்களை இணைப்பது ஒழுக்க நெறியே என்பதை உணர்ந்து 1865 ஆம் ஆண்டு சமரச சன்மார்க்க சங்கத்தை வள்ளலார் நிறுவினார். அதன்படி எல்லோரும் பின்பற்றக்கூடிய கொள்கைகளையும், வாழ்க்கையின் ரகசியங்களையும் கூறினார்.

“நாம் எல்லா உயிர்களிடமும் அன்பாக இருக்க வேண்டும். உயிர்க் கொலை செய்தலும், புலால் உண்ணுதலும் கூடாது. சாதி, மதம், குலம் என்ற வேற்றுமைகளை பார்க்கக் கூடாது. மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். கொலை, கோபம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் கூடாது, பதட்டப்படக்கூடாது” என்பவை, இராமலிங்கரின் முக்கிய கொள்கைகள்.

அருட்பெருஞ்சோதி: இராமலிங்க சுவாமிகள் வடலூரில் தருமசாலை ஒன்றை அமைத்தார். அங்கே தினமும் அன்னதானம் செய்யும் வழக்கத்தைத் தொடங்கி வைத்தார். அது இன்றும் தொடர்கிறது.

1870ல் வடலூரில் மேட்டுக்குப்பம் கிராமத்தில், “சத்திய ஞான சபை” என்னும் கோவிலைப் புது முறையில் கட்டினார். அதனுள், விளக்கு ஒன்றும், விளக்கின் முன் கண்ணாடி ஒன்றையும் கட்டினார். விளக்கின் முன் ஏழு திரைகள் வைத்து மறைக்கப்பட்டிருக்கும். இதனை ஒவ்வொன்றாக நீக்கிய பிறகு தோன்றும் விளக்கொளியை “அருட்பெருஞ்சோதி” ஆண்டவராகக் கருதி வழிபடுமாறு மக்களை இராமலிங்க அடிகள் கேட்டுக் கொண்டார்.



1872 ஜனவரி 25 ல் ‘ஞானசபை’ துவக்கப்பட்டது. அதனுள்தான் இந்த “அருட்பெருஞ்சோதி” உள்ளது. ஏழு மாயைகளை அகற்றினால் தெய்வீகப் பேரொளியைக் காணலாம் என்பதே தத்துவ விளக்கம்.

சத்மார்க்கம் என்ற வடமொழிச் சொல்லே தமிழில் சன்மார்க்கம் என உருமாறிற்று. சத் என்றால் நிலைத்திருப்பது, உண்மை என்று பொருள்படும். சன்மார்க்கம் என்பது எல்லா மதங்களும் கூறும் நிலையான, உண்மையான ஒழுக்கம். இச்சன்மார்க்க சமயம் கலப்பதற்கு, சுத்தமானது. எனவேதான் வள்ளலாரின் இயக்கம் சமரச, சுத்த சன்மார்க்க, சத்திய சங்கமாக மலர்ந்தது.

அதனால்தான் திருமணம் நடந்தும் முதலிரவு அன்றே மனைவியிடம் “உடல் மீதான ஆசையை ஒழித்து விடு. நான் சன்மார்க்கத்தை நாடுபவன். சிற்றின்பத்துக்கு அடிமையாக மாட்டேன்” என்றார். சன்மார்க்கத்தின் இரு கண்கள் அன்பும், அறிவும்தான். அன்பு முற்றிய நிலையில் அருளாகவும், அறிவு முற்றிய நிலையில் அறியாமை இருளை அகற்றும் சோதியாகவும் மலர்கிறது. இதுவே அருட்பெருஞ்சோதியாகும். இந்த அருட்பெருட்சோதியை வழிபடத் தேவையானது தனிப்பெருங்கருணை, தயவு, தொண்டு, உயிர் இரக்கம் மட்டுமே.

மண்ணில் பிறந்த விருட்சம்: விக்கிரகங்களுக்கு முன்நின்று பரவசமாகப் பாடி, அதற்காகப் படையல் செய்து, தான் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரமாக காசுகளை கொட்டிக் குவிப்பதுதான் பக்தி என்று இருக்கும் இக்காலத்தில் எல்லா உயிர்களிடத்திலும் கடவுள் இருப்பதை அறிவதே ஈசுவர பக்தியாகும் என்று பக்திக்கு புதிய பரிணாமத்தை கொடுத்தவர் வள்ளலார்.

வள்ளல் பெருமான் வறட்டு ஆத்திகரும் அல்ல. முரட்டு நாத்திகரும் அல்ல. இரண்டிற்கும் இடைப்பட்டவர். மனிதனை தினம் தினம் வதைக்கும், பயமுறுத்தும் பிணிகளில் ஒன்று பசிப்பினி, மற்றொன்று மரணப்பினி. இந்த இரண்டையும் எதிர்த்து குரல் கொடுத்தவர் வள்ளலார்.

ஜோதியில் கலந்தார்: தாம் 51 ஆவது வயதில் உலக வாழ்வை விட்டுச் செல்லப் போவதாக சீடர்களிடம் கூறி, அவர்களைப் பக்குவப்படுத்தினார். மறைவதற்கு 3 மாதங்களுக்கு முன்பிருந்தே சாப்பிடும் உணவின் அளவைப் படிப்படியாக குறைக்கலானார். முடிவில் தேன் மட்டும் அருந்தினார்.

1874 ஜனவரி 30... அது, நள்ளிரவில் புனிதமான பூச நட்சத்திரம் உதிக்கும் புனிதநாள். இராமலிங்கர் அன்று நிகழ்த்திய சொற்பொழிவில், “அன்பர்களே! அருட்பெருஞ்சோதி எப்போதும் எரியும் படி பார்த்துக் கொள்ளுங்கள். இறை ஜோதியுடன் ஐக்கியமாகப் போகிறேன். அறையை வெளியில் தாழ்ப்பாள் போட்டு விடுங்கள். மீண்டும் கதவைத் திறக்கும் போது அறை காலியாக(இருந்தது) இருக்கும்” என அறிவித்தார். அறைக்குள் புகுந்து கதவை உட்புறமாகப் பூட்டிக்கொண்டார். அதிர்ந்த பக்தர்கள், சிறிது நேரம் கழித்து அறையைத் திறந்தனர். உள்ளே அவர் இல்லை. மாயமாக மறைந்திருந்தார்.

அடிகளாரின் மறைவு பற்றி அரசாங்கத்துக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அப்போது தென் ஆற்காடு மாவட்டக் கலெக்டராக இருந்த ஜே. எச். கார்டின்ஸ் மற்றும் சில அதிகாரிகள், டாக்டர் ஆகியோருடன் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் அவர் அரசாங்கத்துக்கு அவர் அனுப்பிய அறிக்கையில், “இராமலிங்கர், இறைவனோடு ஐக்கியமாகி விட்டதாக அவர் மீது பக்தி கொண்டவர்கள் நம்புகிறார்கள். ஒரு மதத் தலைவர் பற்றி கருத்து வேற்றுமை எழுதுவது இயற்கை என்றாலும், அவருடைய பாடல்களைப் பொறுத்தவரை, அவை மிக உயர்தரமானவை” என்று குறிப்பிட்டுள்ளார்.

வள்ளலார் ஏற்றிவைத்த அருட்பெருஞ்சோதியும் அவர் தொடங்கிய ஆன்மிக மறுமலர்ச்சி சேவைகளும் இன்றும் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றன. இவரது சேவையை கருத்தில் கொண்டு 2007 ஆகஸ்ட் 17 ல் அரசு வள்ளலார் தபால் தலையை வெளியிட்டு சிறப்பித்தது.

முடிவுரை: இறைவனுக்கு எப்படி முடிவுரை எழுத முடியும். இந்த சிறிய கட்டுரைக்கு மட்டுமே இது முடிவுரை. வள்ளலார் ஒவ்வோர் இதயத்திலும் நீக்கமற வாழ்ந்து வருகிறார். வீதி தோறும் தர்ம சாலைகள் தோற்றுவிதார். மரணத்தை ஒழுக்கத்தால், நித்திய கரும விதிகளால், சாகாக் கல்வியால், தத்துவ நிக்கிரகத்தால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உதயமாகி இருக்கிறது வள்ளலார் என்ற சகாப்தத்தால்.! மாணிக்க வாசகரிடம் உருகி ஞானப் பாதையில் நடந்து, சைவ சித்தாந்த எல்லைகளைக் கடந்து, சன் மார்க்கம் என்னும் சிகரத்தை தொட்டவர் வள்ளலார்.

சிந்தைக்கு அருட்பெருஞ்சோதி என்றார். செயலுக்கு தனிப்பெருங்கருணை என்றார். சிந்தையின் ஞானத்தை செயலின் சக்தியாக மாற்ற அவர் அமைத்தது சத்திய ஞானசபை. ஜுவகாருண்யமே கடவுள் வழிபாடு என்ற சத்தியவாக்கின் பிரதிபலிப்பே அவரது சத்திய தருமச் சாலை. சாதி, மத, சமயம் கடந்த சன் மார்க்கப் பாதையே சமரச, சுத்த, சன்மார்க்க சத்திய சங்கம். இந்த சரணத்தை இயற்றியது வள்ளலார். இதுவரை யாரும் கூறாதது; வாழ்ந்து காட்டாதது.

உயிர்களிடத்து அன்பு செய், பசிபோக்கு, தயவுகாட்டு அவற்றுக்கு மனதாலும் தீங்கு நினைக்காதே என்ற வள்ளலாரின் புதிய சிந்தனைகள், புதிய கண்ணோட்டங்கள் உலகம் முழுவதும் பரவினால் தீவிரவாதம் மறையும்; பயங்கரவாதம் அழியும்; உலகம் செழிப்படையும்.!

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

1 கருத்து: