செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

ஞாயிறு, ஜனவரி 30, 2011

யார் இந்த ஜெகத் கஸ்பர்?


விபசாரிக்கும் நியாயம் வேண்டும் என்றார் ஏசு பிரான். ஆனால், ஆ.ராசாவை ஊடகங்கள் வேட்டை நாய்களாக துறத்துகின்றன என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் ஜெகத் கஸ்பர். வார்த்தைகளை கோர்த்து மேடைகளில் விளையாடுவதில் ஜெகத் கஸ்பர் கைதேர்ந்தவர். அப்படிப்பட்ட இவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கேள்விகளால் துளைத்து எடுத்த போது கைகட்டி, விழிபிதுங்கி நின்றராம். ஆம், ஸ்பெக்ட்ரம் ஊழலில் இவருக்கும் தொடர்பிருக்கிறது என்று சி.பி.ஐ. கூடராத்தில் அள்ளிப் போடப்பட்டவர்களில் ஜெகத் கஸ்பரும் ஒருவர்.

ஓர் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த பாதிரியார் ஜெகத் கஸ்பரின் சொத்து மதிப்பு, இப்போது கோடிகளில் கொழிப்பதாக சொல்லப்படுகிறது! சில பல தன்னார்வக் குழுக்கள் என நிறுவனமயமாகி, தமிழகத்தின் புதிய அரசியல் அதிகார தரகர்களில் ஒருவராக உருமாறி இருக்கிறார். இவரின் கடந்த கால வரலாறு என்ன?

ஜெகத் கஸ்பார்
குமரி மாவட்டத்தின் கேரள எல்லையை ஒட்டிய காஞ்சாம்புரம் என்னும் கிராமத்தில் பிறந்த கஸ்பர் ராஜை, அவரது தாயார் ஒரு நேர்த்திக் கடனுக்காக பாதிரியார் படிப்புக்கு அனுப்பினாராம். அதற்கான படிப்பை முடித்ததும், முளகுமூடு என்னும் ஊரில் உதவிப் பங்குத் தந்தை பணி கிடைத்தது. மணலிக் குலுவிளை என்னும் ஊரில் வழிபாடு தொடர்பாக கிறிஸ்துவர்களுக்கும் இந்துக்களுக்கும் சிறு பிரச்னை ஏற்பட்ட போது, இவர் தலையிட்ட விதத்தால், பிரச்னை இன்னும் பெரிதாகி...ஊரே இரண்டு பட்டதாகச் சொல்வார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த கோட்டாறு மறை மாவட்ட ஆயர், உடனடியாக ஜெகத் கஸ்பரை பங்கில் இருந்து தூக்கினார்.

பின்னர், சென்னை மயிலை மறை மாவட்டத்துக்குச் சொந்தமான சாந்தோம் கலைத் தொடர்பு நிலையத்தில் சேர்ந்தார். அதன் பின்னர், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருக்கிற வெரித்தாஸ் வானொலியின் தமிழ்ப் பிரிவுக்கு பொறுப்பாளராக சேர்ந்தார். இதற்கெல்லாம் உதவியவர் வின்சென்ட் சின்னத்துரை.
உலகெங்கிலும் உள்ள மக்கள் போராட்டங்களை மனித உரிமை ரீதியாக ஆதரிக்கும் வெரித்தாஸ் வானொலியின் தமிழ்ப்பிரிவு, ஈழப் போராட்டங்களையும் ஆதரித்தது. ஏராளமான ஈழ மக்கள், வெரித்தாஸ் வானொலிக்கு கடிதம் எழுதுவார்கள். அதை வைத்து ‘உறவுப் பாலம்’ என்ற ஒரு நிகழ்ச்சியை கஸ்பர் நடத்தினார். இதனால் புலம் பெயர்ந்த தமிழர்கள் நடுவில் அறிமுகம் ஆனார்.

1995 ஆம் ஆண்டு வன்னிக்கு சென்று பிரபாகரனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிரான்ஸ§க்குப் போன கஸ்பர், ‘அகதிகளுக்கு உதவுவோம்’ என்னும் பெயரில் ப்ராஜெக்ட்டுகளைத் தயாரித்தார். மக்களுக்கு உதவினால் சரி என்று புலிகளும் கண்டு கொள்ளவில்லை. உலகம் முழுவதும் உள்ள ஈழத்தமிழ் அனுதாபிகளிடம் இருந்து பணம் ஏராளமாக வந்தது. இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு மணிலாவுக்குத் திரும்பும் வழியில், நான் கொண்டுவந்த பணத்தை, பிரான்ஸ் விமான நிலையத்தில் தொலைத்து விட்டேன் என்று ஜெகத் சொன்னபோது பெரும் அதிர்ச்சி அலை கிளம்பியது. இதைத் தொடர்ந்து கஸ்பரை புலிகள் ஒதுக்க தொடங்கினர். இந்த நிலையில் வெரித்தாஸ் வானொலியிலும் இவருக்கு தடங்கல். இதற்கு அரசல் புரசலாகப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

இதற்கடுத்து, பெட்டிகளுடன் சென்னையில் வந்து இறங்கினார் கஸ்பர். அதிரடியாக குட்வில் கம்யூனிகேஷன்ஸ், நாம், தமிழ் மையம், கிவ் லைஃப் என்று நான்கு அமைப்புகளைத் தொடங்கினார். புலிகள் ஆதரவு என்பதை வைத்து வைகோவுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டார். இவர் இளையராஜாவின் திருவாசகம் வெளியிட்டு தன்னை தமிழகத்தில் ஒரு முக்கியமானப் பிரமுகராகக் காட்டிக் கொண்டார். அதோடு மட்டுமில்லாமல் ஈழத் தமிழ்ப் பிரச்னையை மையமாக கொண்டு பிரபல வாரமிருமுறை இதழில் தொடர் கட்டுரைகளை எழுதி தன்னை பிரபல எழுத்தாளராகவும் காட்டிக் கொண்டார்.

இதையெல்லாம் தக்கவைத்துக் கொள்ள ஆளுங்கட்சியின் ஆதரவு தேவை என்பதை உணர்ந்த ஜெகத் கஸ்பர் கட்சிகளின் செல்வாக்கை பிடிக்க படாத பாடு பட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அதிலும் தி.மு.க.வின் ஆதரவை பிடிப்தில் காட்டிய ஆர்வம் இருக்கிறதே...? ஒருவழியாக கனிமொழியின் நட்பை பிடித்தார். அதற்குப் பிறகு இவரின் ராஜலீலைகள் தொடர ஆரம்பித்தன.

பின்னர் கனிமொழியோடு சேர்ந்து சென்னை மராத்தான், சங்கமம் நிகழ்ச்சி போன்றவற்றை நடத்திப் பணத்தை குவித்தார். புலிகளை ஆதரிப்பது போல் பாவனை காட்டுவது... புலி ஆதரவாளர்களாக இருக்கும் வைகோ, நெடுமாறன் போன்றவர்களை எதிர்ப்பது என கஸ்பரின் காரியக்கார அரசியல் குழப்பங்களுக்கு அளவே இல்லை.

பலவிதமான சர்ச்சைகளில் தொடர்ந்து அடிப்பட்ட இவரைப் பார்த்து, சென்னை மயிலை பேராயர் ஜெகத்தை இடத்தை காலி பண்ணும் படி சொல்ல ‘நான் யார் தெரியுமா?’ என்று பிஷபுக்கு ரூபம் காட்டியதைப் பார்த்து திருச்சபையே மிரண்டுதான் போனது. இதற்கொல்லாம் பதில் சொல்வதோடு மட்டுமில்லாமல், ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும் வாயைத் திறக்க வேண்டும் என்பதால், ஜெகத் கஸ்பர் மிகவும் விரக்தியில் இருக்கிறராம். இவரை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து தி.மு.க. யோசித்து கொண்டிருக்கிறது குழப்பத்தோடு!

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன?

எங்கு திரும்பினாலும் ஸ்பெக்ட்ரம் என்ற சொல் திரும்பத் திரும்ப காதில் விழுகிறதே! அப்படி என்றால் என்ன?


மின்சாரத்தை கம்பி மூலம் கடத்தமுடியும் என்று நமக்கொல்லாம் தெரியும். அதேபோல, கம்பி ஏதும் இல்லாமல் குறிப்பிட்ட தூரத்திலிருந்தே இரும்பைக் கவர்ந்து தன்னை நோக்கி இழுக்கும் காந்தத்தையும் பற்றி நாம் அறிவோம். ஒரு கம்பியில் பாயும் மின்சாரம் தன்னைச் சுற்றி மின்புலத்தையும், காந்தம் தன்னைச் சுற்றி காந்தப் புலத்தையும் உருவாக்குகிறது. இந்த மின்புலம் அல்லது காந்தப்புலம் தன்னைச் சுற்றியுள்ள பொருள்கள் மீது ஒரு விசையைச் செலுத்துகிறது.

மின்சாரத்துக்கும்,காந்தத்துக்கும் உள்ள ஒற்றுமையை அறிந்த விஞ்ஞானிகள், இவற்றை இணைத்தே பேசுகிறார்கள். மின்காந்தப் புலம், மின்காந்த விசை என்றே இவற்றைக் குறிப்பிடுகிறார்கள். இந்த மின்காந்தப் புலத்தில் பரவும் ஆற்றல், அலை வடிவம் உடையதாக இருக்கும். நாம் கண்ணால் பார்க்கும் ஒளியே (சிவப்பு, நீலம்) இந்த மின்காந்த அலைகள்தான். இப்படிப்பட்ட அலைகள் (ஒளியும் சேர்த்து) அனைத்தும் வெற்றிடத்தில் மிக மிக வேகமாகச் செல்லக்கூடியவை. இவற்றின் வேகம் விநாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர். நீங்கள் ‘ம்’ என்று சொல்வதற்குள் இந்த மின்காந்த அலைகள் 3 லட்சம் கிலோமீட்டர் சென்றிருக்கும்!

இந்த மின்காந்த அலைகளைக் கொண்டுதான் வானொலி இயங்குகிறது. அது ஏ.எம். ரேடியோவாக இருந்தாலும் சரி, பண்பலை எனப்படும் எஃப்.எம். ரேடியோவாக இருந்தாலும் சரி. இதே மின்காந்த அலைகளைக் கொண்டு தான் தூர்தர்ஷன் போன்ற தரைவழித் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பா கின்றன. நாம் தினசரி பயன்படுத்தும் மொபைல்கள், நம் வீட்டில் தொலைக் காட்சி சானல்களை மாற்றப் பயன்படுத்தும் ரிமோட், வாக்கி டாக்கிகள், எலெக்ட்ரானிக் பொம்மைகள், ப்ளூ-டூத், வை-ஃபை என எதை எடுத்தாலும் அவை எல்லாம் மின்காந்த அலைகளால் இயங்குபவையே.

எல்லா மின்காந்த அலைகளும் ஒன்றா? நிச்சயம் ஒன்றல்ல என்பது நமது அனுபவத்திலிருந்தே தொரிகிறதே? சிகப்பு வண்ண ஒளி வேறு, நீல வண்ண ஒளி வேறு. ஏதோ ஒரு பண்பு, ஒரு மின்காந்த அலையை சிகப்பாகவும், மற்றொன்றை நீலமாகவும் காட்டுகிறது. அந்தப் பண்பு என்ன? அதற்குப் பெயர்தான் ஃப்ரீக்வன்சி அல்லது அதிர்வெண். ஒரு குறிப்பிட்ட விநாடியில் ஓர் அலை எவ்வளவு முறை அதிர்கிறது என்பதைத்தான் இந்த எண் குறிக்கிறது. இதனை ஹெர்ட்ஸ் என்ற அலகால் குறிப்பிடுவோம். நம் வீட்டு கடிகாரத்தில் உள்ள பெண்டுலம் ஒரு வினாடிக்கு ஒரே ஒரு முறைதான் தொடங்கிய இடத்துக்கு மீண்டும் வருகிறது. இந்த பெண்டுலத்தின் அதிர் வெண் ஒரு ஹெர்ட்ஸ் எனப்படும். இதே பெண்டுலத்தில் சில மாற்றங்கள் செய்தால், அதனை விநாடிக்கு இரு முறை புறப்பட்ட இடத்துக்கே வரச் செய்யலாம். அப்போது அதன் அதிர்வெண் 2 ஹெர்ட்ஸ்.

அதிர்வெண் 1000 ஹெர்ட்ஸ் என்றால், அதனை 1 கிலோ ஹெர்ட்ஸ் என்கிறோம். 1000 கிலோ ஹெர்ட்ஸ் என்பது 1 மெகா ஹெர்ட்ஸ். 1000 மெகா ஹெர்ட்ஸ் என்பது 1கிகா ஹெர்ட்ஸ். 1000 கிகா ஹெர்ட்ஸ் என்பது ஒரு டெரா ஹெர்ட்ஸ். ஒளி அலைகளையே எடுத்துக்கொள்வோம். காற்றில் எளிதாகச் செல்லும் இவை, ஒரு மரமோ, சுவரோ இடையில் வந்தால் தாண்டி செல்வதில்லை. கண்ணாடி என்றால் அதை ஓரளவுக்கு ஊடுருவிச் செல்கின்றன. நாம் கண்ணால் காணும் ஒளி அலைகளின் அதிர்வெண் 430 டெரா ஹெர்ட்ஸ் முதல் 750 டெரா ஹெர்ட்ஸ் வரை.

ஆனால், இதைவிடக் குறைவான அதிர்வெண் கொண்ட மின்காந்த அலைகளால், ஒளியால் ஊடுருவ முடியாத இடங்களையும் ஊடுருவ முடியும். பண்பலை (எஃப்.எம்) வானொலி அலைகள் அப்படிப்பட்டவை. 85 மெஹா ஹெர்ட்ஸ் முதல் 110 மெகா ஹெர்ட்ஸ் வரையிலான இந்த அலைகளில்தான் பண்பலை வானொலிச் சேவை வழங்கப்படுகிறது. இந்த முழு ரேஞ்ச், அதாவது 110-85 வரை உள்ள 25 மெகா ஹெர்ட்ஸ் அகலம் கொண்ட இந்தப் பகுதியை எஃப்.எம். ஸ்பெக்ட்ரம், அதாவது பண்பலை பரவல் என்கிறார்கள். இந்த அலைப்பரவலுக்கு வெளியே பண்பலை வானொலி நிகழ்ச்சிகளைத் தரமுடியாது.

அதேபோல, செல்பேசிச் சேவையை எடுத்துக்கொண்டால், சாதாரணக் குரல் வழிச் சேவையான 2ஜி (2G- என்றால் 2nd Generation- இரண்டாம் தலைமுறை) என்பதை 1710 மெகா ஹெர்ட்ஸ் முதல் 1880 ஹெர்ட்ஸ் என்ற 170 அலைப்பரவலில்தான் தரமுடியும். அதேபோல குரல், டேட்டா, வீடியோ ஆகியவற்றை எடுத்துச் செல்லக்கூடிய 3ஜி சேவைகளை 1920 மெகா ஹெர்ட்ஸ் முதல் 2170 மெகா ஹெர்ட்ஸ் என்ற அலைப்பரவலில் மட்டுமே தரமுடியும்.

அலைப்பரவலின் அகலம் குறைவாக இருப்பதால் அதைக் கொஞ்சம் பேர்தான் பகிர்ந்து கொள்ள முடியும். சான்றாக 10 ஏக்கர் நிலம் இருக்கிறது என்று வைத்துக் கொண்டால் அதைப் பத்துப் பேர் பகிர்ந்து கொள்கிறார்கள். அப்போது, தலைக்கு ஒரு ஏக்கர் நிலம் கிடைக்கும். அதையே 100 பேர் பகிர்ந்து கொண்டால் 0.1 ஏக்கர் நிலம்தான் கிடைக்கும். நிலத்தைப் போலவேதான் ஸ்பெக்ட்ரமும்! (அதனால்தான் இத்தனை போட்டியும், முறைகேடுகளும்!)

ஸ்பெக்ட்ரத்தைப் பகிர்ந்து கொள்வதில் வேறு சில அம்சங்களும் இருக்கின்றன. சான்றாக, எஃப்.எம். வானொலியை எடுத்துக்கொண்டால், ஒரு வானொலி நிலையத்துக்கும் மற்றொன்றுக்கும் இடையில் 0.8 மெகா ஹெர்ட்ஸ் இடைவெளி இருக்கவேண்டும். அப்போதுதான் இரு நிலையங் களின் நிகழ்ச்சிகளும் ஒன்றோடு ஒன்று குழம்பாமல் நம்மை வந்தடையும். ஆக, மொத்தம் உள்ள 25 மெகா ஹெர்ட்ஸ் என்பதை 0.8 கொண்ட இடை வெளிகளாகப் பிரித்தால், சுமார் 30 நிலையங்கள்தான் ஒரு குறிப்பிட்ட ஊரில் சாத்தியம்.

அதேபோல, 2ஜி சேவையை வழங்க வேண்டும் என்றால், ஒரு குறிப்பிட்ட பகுதியில் சுமார் 10 சேவை நிறுவனங்கள்தான் 1800 மெகா ஹெர்ட்ஸ் என்ற அதிர்வெண்ணை ஒட்டி இருக்கமுடியும். 3ஜி சேவையை எடுத்துக் கொண்டால் 7-8 பேர்தான் இருக்கலாம். இதன் காரணமாக ஸ்பெக்ட்ரத்தைப் பயன்படுத்துவதில் போட்டிகள் அதிகம். இன்னும் சிறப்பான தொழில் நுட்பங்கள் தோன்றத் தோன்ற, குறிப்பிட்ட ஸ்பெக்ட்ரத்தை, அதிகம் பேர் பயன்படுத்தும் நிலை நாளை ஏற்படலாம். அல்லது மேலே சொன்ன அதிர் வெண்கள் தாண்டி, பிற அதிர்வெண் பரவல்களையும் பயன்படுத்தும் தொழில் நுட்பம் வரலாம். அதுவரை பற்றாக்குறை இருக்கவே செய்யும்.

நன்றி: புதிய தலைமுறை-டிசம்பர் 2, 2010

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

பார்லிமென்ட் கூட்டுக்குழு எப்படி அமைக்கப்படும்?



2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடந்த ஊழலை கண்டுபிடிக்க, பார்லிமென்டின் கூட்டுக்குழு நடவடிக்கை தேவை என்று எதிர்க்கட்சிகளும், தேவை இல்லை என்று அரசும் கூறிவருகின்றன. ஒருவேளை கூட்டுக்குழு அமைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டால், எப்படி அமைக்கப்படும்?

ஊழல் நடந்துள்ள துறை அமைச்சர், இதற்கான தீர்மானத்தை லோக் சபாவில் முன்மொழிந்து பேசுவார். அப்படி இல்லையெனில், பொதுவாக பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சரே கூட, இதற்கான தீர்மானத்தை முன்மொழி வாய்ப்புள்ளது. அத்தீர்மானத்திலேயே கூட, கூட்டுக்குழு குறித்த அனைத்து தகவல்களும் இடம் பெறும். பொதுவாக அக்குழுவில் எத்தனை உறுப்பினர்கள், அவர்களில் எத்தனை பேர் ராஜ்யசபா, எத்தனை பேர் லோக்சபா என்பன உள்ளிட்ட விவரங்கள் இடம் பெறும். பெரும்பாலும் ஒவ்வொரு கட்சியின் மொத்த எம்.பி.க்களின் எண்ணிகைக்கு ஏற்ப உறுப்பினர் ஒதுக்கீடு இக்குழுவில் இருக்கும். இந்த உறுப்பினர்களில் ஒருவரை தலைவராக லோக்சபா சபாநாயகர் அறிவிக்கக்கூடும்.

கூட்டுக்குழு அமைக்கப்பட்ட தேதியில் இருந்தே பணிகள் தொடங்கிவிட்டதாக கருதப்படும். குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு, அதற்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும். கூட்டுக்குழுவை ஒரு முறை கூட்ட வேண்டுமென்றால், கோரம் முறை கடைபிடிக்கப்படும். அதாவது அக்குழுவில் உள்ள உறுப்பினர் களில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கை உறுப்பினர்கள் கலந்து கொண்டால் மட்டுமே கூட்டம் நடத்த முடியும். ஏதாவது ஒரு சிக்கலான தருணங்கள் வரும்போது, அதில் முடிவெடுக்கும் முன் சபாநாயகரின் ஒப்புதலை பெற வேண்டும்.

quvathrochi
முதன்முறையாக போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் குறித்து கூட்டுக்குழு அமைப்பது என முடிவெடுக்கப்பட்டு, இதற்கான தீர்மானத்தை 1987 ஆகஸ்ட் 6 ஆம் தேதி அன்று லோக்சபாவில், அப்போதைய ராணுவ அமைச்சர் கே.சி. பந்த்தால் முன்மொழியப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே ஆண்டில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி அன்று கூட்டுக்குழு அமைக்கப்பட்டு, லோக்சபாவில் இருந்து 20 பேரும், ராஜ்யசபாவில் இருந்து 10 பேரும் இதில் அங்கம் வகித்தனர். இந்த குழுவின் தலைவராக சங்கரானந்த் இருந்தார். மொத்தம் 50 முறை கூட்டம் நடைபெற்றது. இறுதியாக 1998 ஏப்ரல் 26 ஆம் தேதி இந்த குழு தனது அறிக்கையை அளித்தது.

இரண்டாவது முறையாக பணபத்திரங்கள் மற்றும் வங்கி பரிவர்த்தனைகளில் ஏற்பட்ட முறைகேடுகளை விசாரிக்க கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இதற்கான தீர்மானம் 1992 ஆகஸ்ட் 6 ஆம் தேதி லோக்சபாவில், அப்போதைய பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத்தால் முன்மொழியப் பட்டு நிறைவேற்றப்பட்டது. அதே ஆண்டில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி அன்று கூட்டுக்குழு அமைக்கப்பட்டு, 20 லோக்சபா எம்.பி.க்களும், 10 ராஜ்யசபா எம்.பி.க்களும் அந்த குழுவில் அங்கம் வகித்தனர். இதன் தலைவராக ராம்நிவாஸ் மிர்தா இருந்தார். மொத்தம் 96 முறை இக்குழு கூடி, விசாரணை நடத்திவிட்டு இறுதியாக 1993 டிசம்பர் 21 ஆம் தேதி அன்று தனது அறிக்கையை அரசிடம் அளித்தது.

gulamnabi asath
மூன்றாவது முறையாக பங்குச்சந்தை ஊழலை விசாரிப்பதற்காக கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இதற்கான தீர்மானம் 2001 ஏப்ரல் 26 ஆம் தேதி அன்று லோக்சபாவில் அப்போதைய பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜனால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதே ஆண்டில் ஏப்ரல் 27 ஆம் தேதி அன்று அமைக்கப்பட்ட கூட்டுக்குழுவில் 20 லோக்சபா எம்.பி.க்களும், 10 ராஜ்யசபா எம்.பி.க்களும் அங்கம் வகித்தனர். இதன் தலைவராக எஸ்.பி.எம்.திரிபாதி இருந்தார். மொத்தம் 105 முறை இந்த குழு கூடி விசாரணை நடத்திவிட்டு, இறுதியாக 2002 டிசம்பர் 19 ஆம் தேதி தனது அறிக்கையை அரசிடம் அளித்தது.

குளிர்பானங்களில் பூச்சிக்கொல்லி கலக்கப்படுவதாக எழுந்த பிரச்னையை விசாரிக்க, நான்காவது முறையாக கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இதற்கான தீர்மானத்தை 2003 ஆகஸ்ட் 22 ஆம் தேதி அன்று லோக்சபாவில் அப்போதையை சுகாதாரத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜால் முன்மொழியப் பட்டு நிறைவேற்றப்பட்டது. அன்றே கூட்டுக்குழுவும் அமைக்கப்பட்டது. அதில், லோக்சபா எம்.பி.க்கள் 10 பேரும், ராஜ்யசபா எம்.பி.க்கள் 5 பேரும் அங்கம் வகித்தனர். இக்குழுவிற்கு சரத்பவார் தலைவராக இருந்தார். மொத்தம் 17 முறை இந்த குழு கூடி விவாதம் நடத்திவிட்டு, இறுதியாக 2004 பிப்ரவரி 4 ஆம் தேதி அன்று தனது அறிக்கையை அரசிடம் சமர்பித்தது.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.