செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

ஞாயிறு, ஜனவரி 30, 2011

ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன?

எங்கு திரும்பினாலும் ஸ்பெக்ட்ரம் என்ற சொல் திரும்பத் திரும்ப காதில் விழுகிறதே! அப்படி என்றால் என்ன?


மின்சாரத்தை கம்பி மூலம் கடத்தமுடியும் என்று நமக்கொல்லாம் தெரியும். அதேபோல, கம்பி ஏதும் இல்லாமல் குறிப்பிட்ட தூரத்திலிருந்தே இரும்பைக் கவர்ந்து தன்னை நோக்கி இழுக்கும் காந்தத்தையும் பற்றி நாம் அறிவோம். ஒரு கம்பியில் பாயும் மின்சாரம் தன்னைச் சுற்றி மின்புலத்தையும், காந்தம் தன்னைச் சுற்றி காந்தப் புலத்தையும் உருவாக்குகிறது. இந்த மின்புலம் அல்லது காந்தப்புலம் தன்னைச் சுற்றியுள்ள பொருள்கள் மீது ஒரு விசையைச் செலுத்துகிறது.

மின்சாரத்துக்கும்,காந்தத்துக்கும் உள்ள ஒற்றுமையை அறிந்த விஞ்ஞானிகள், இவற்றை இணைத்தே பேசுகிறார்கள். மின்காந்தப் புலம், மின்காந்த விசை என்றே இவற்றைக் குறிப்பிடுகிறார்கள். இந்த மின்காந்தப் புலத்தில் பரவும் ஆற்றல், அலை வடிவம் உடையதாக இருக்கும். நாம் கண்ணால் பார்க்கும் ஒளியே (சிவப்பு, நீலம்) இந்த மின்காந்த அலைகள்தான். இப்படிப்பட்ட அலைகள் (ஒளியும் சேர்த்து) அனைத்தும் வெற்றிடத்தில் மிக மிக வேகமாகச் செல்லக்கூடியவை. இவற்றின் வேகம் விநாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர். நீங்கள் ‘ம்’ என்று சொல்வதற்குள் இந்த மின்காந்த அலைகள் 3 லட்சம் கிலோமீட்டர் சென்றிருக்கும்!

இந்த மின்காந்த அலைகளைக் கொண்டுதான் வானொலி இயங்குகிறது. அது ஏ.எம். ரேடியோவாக இருந்தாலும் சரி, பண்பலை எனப்படும் எஃப்.எம். ரேடியோவாக இருந்தாலும் சரி. இதே மின்காந்த அலைகளைக் கொண்டு தான் தூர்தர்ஷன் போன்ற தரைவழித் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பா கின்றன. நாம் தினசரி பயன்படுத்தும் மொபைல்கள், நம் வீட்டில் தொலைக் காட்சி சானல்களை மாற்றப் பயன்படுத்தும் ரிமோட், வாக்கி டாக்கிகள், எலெக்ட்ரானிக் பொம்மைகள், ப்ளூ-டூத், வை-ஃபை என எதை எடுத்தாலும் அவை எல்லாம் மின்காந்த அலைகளால் இயங்குபவையே.

எல்லா மின்காந்த அலைகளும் ஒன்றா? நிச்சயம் ஒன்றல்ல என்பது நமது அனுபவத்திலிருந்தே தொரிகிறதே? சிகப்பு வண்ண ஒளி வேறு, நீல வண்ண ஒளி வேறு. ஏதோ ஒரு பண்பு, ஒரு மின்காந்த அலையை சிகப்பாகவும், மற்றொன்றை நீலமாகவும் காட்டுகிறது. அந்தப் பண்பு என்ன? அதற்குப் பெயர்தான் ஃப்ரீக்வன்சி அல்லது அதிர்வெண். ஒரு குறிப்பிட்ட விநாடியில் ஓர் அலை எவ்வளவு முறை அதிர்கிறது என்பதைத்தான் இந்த எண் குறிக்கிறது. இதனை ஹெர்ட்ஸ் என்ற அலகால் குறிப்பிடுவோம். நம் வீட்டு கடிகாரத்தில் உள்ள பெண்டுலம் ஒரு வினாடிக்கு ஒரே ஒரு முறைதான் தொடங்கிய இடத்துக்கு மீண்டும் வருகிறது. இந்த பெண்டுலத்தின் அதிர் வெண் ஒரு ஹெர்ட்ஸ் எனப்படும். இதே பெண்டுலத்தில் சில மாற்றங்கள் செய்தால், அதனை விநாடிக்கு இரு முறை புறப்பட்ட இடத்துக்கே வரச் செய்யலாம். அப்போது அதன் அதிர்வெண் 2 ஹெர்ட்ஸ்.

அதிர்வெண் 1000 ஹெர்ட்ஸ் என்றால், அதனை 1 கிலோ ஹெர்ட்ஸ் என்கிறோம். 1000 கிலோ ஹெர்ட்ஸ் என்பது 1 மெகா ஹெர்ட்ஸ். 1000 மெகா ஹெர்ட்ஸ் என்பது 1கிகா ஹெர்ட்ஸ். 1000 கிகா ஹெர்ட்ஸ் என்பது ஒரு டெரா ஹெர்ட்ஸ். ஒளி அலைகளையே எடுத்துக்கொள்வோம். காற்றில் எளிதாகச் செல்லும் இவை, ஒரு மரமோ, சுவரோ இடையில் வந்தால் தாண்டி செல்வதில்லை. கண்ணாடி என்றால் அதை ஓரளவுக்கு ஊடுருவிச் செல்கின்றன. நாம் கண்ணால் காணும் ஒளி அலைகளின் அதிர்வெண் 430 டெரா ஹெர்ட்ஸ் முதல் 750 டெரா ஹெர்ட்ஸ் வரை.

ஆனால், இதைவிடக் குறைவான அதிர்வெண் கொண்ட மின்காந்த அலைகளால், ஒளியால் ஊடுருவ முடியாத இடங்களையும் ஊடுருவ முடியும். பண்பலை (எஃப்.எம்) வானொலி அலைகள் அப்படிப்பட்டவை. 85 மெஹா ஹெர்ட்ஸ் முதல் 110 மெகா ஹெர்ட்ஸ் வரையிலான இந்த அலைகளில்தான் பண்பலை வானொலிச் சேவை வழங்கப்படுகிறது. இந்த முழு ரேஞ்ச், அதாவது 110-85 வரை உள்ள 25 மெகா ஹெர்ட்ஸ் அகலம் கொண்ட இந்தப் பகுதியை எஃப்.எம். ஸ்பெக்ட்ரம், அதாவது பண்பலை பரவல் என்கிறார்கள். இந்த அலைப்பரவலுக்கு வெளியே பண்பலை வானொலி நிகழ்ச்சிகளைத் தரமுடியாது.

அதேபோல, செல்பேசிச் சேவையை எடுத்துக்கொண்டால், சாதாரணக் குரல் வழிச் சேவையான 2ஜி (2G- என்றால் 2nd Generation- இரண்டாம் தலைமுறை) என்பதை 1710 மெகா ஹெர்ட்ஸ் முதல் 1880 ஹெர்ட்ஸ் என்ற 170 அலைப்பரவலில்தான் தரமுடியும். அதேபோல குரல், டேட்டா, வீடியோ ஆகியவற்றை எடுத்துச் செல்லக்கூடிய 3ஜி சேவைகளை 1920 மெகா ஹெர்ட்ஸ் முதல் 2170 மெகா ஹெர்ட்ஸ் என்ற அலைப்பரவலில் மட்டுமே தரமுடியும்.

அலைப்பரவலின் அகலம் குறைவாக இருப்பதால் அதைக் கொஞ்சம் பேர்தான் பகிர்ந்து கொள்ள முடியும். சான்றாக 10 ஏக்கர் நிலம் இருக்கிறது என்று வைத்துக் கொண்டால் அதைப் பத்துப் பேர் பகிர்ந்து கொள்கிறார்கள். அப்போது, தலைக்கு ஒரு ஏக்கர் நிலம் கிடைக்கும். அதையே 100 பேர் பகிர்ந்து கொண்டால் 0.1 ஏக்கர் நிலம்தான் கிடைக்கும். நிலத்தைப் போலவேதான் ஸ்பெக்ட்ரமும்! (அதனால்தான் இத்தனை போட்டியும், முறைகேடுகளும்!)

ஸ்பெக்ட்ரத்தைப் பகிர்ந்து கொள்வதில் வேறு சில அம்சங்களும் இருக்கின்றன. சான்றாக, எஃப்.எம். வானொலியை எடுத்துக்கொண்டால், ஒரு வானொலி நிலையத்துக்கும் மற்றொன்றுக்கும் இடையில் 0.8 மெகா ஹெர்ட்ஸ் இடைவெளி இருக்கவேண்டும். அப்போதுதான் இரு நிலையங் களின் நிகழ்ச்சிகளும் ஒன்றோடு ஒன்று குழம்பாமல் நம்மை வந்தடையும். ஆக, மொத்தம் உள்ள 25 மெகா ஹெர்ட்ஸ் என்பதை 0.8 கொண்ட இடை வெளிகளாகப் பிரித்தால், சுமார் 30 நிலையங்கள்தான் ஒரு குறிப்பிட்ட ஊரில் சாத்தியம்.

அதேபோல, 2ஜி சேவையை வழங்க வேண்டும் என்றால், ஒரு குறிப்பிட்ட பகுதியில் சுமார் 10 சேவை நிறுவனங்கள்தான் 1800 மெகா ஹெர்ட்ஸ் என்ற அதிர்வெண்ணை ஒட்டி இருக்கமுடியும். 3ஜி சேவையை எடுத்துக் கொண்டால் 7-8 பேர்தான் இருக்கலாம். இதன் காரணமாக ஸ்பெக்ட்ரத்தைப் பயன்படுத்துவதில் போட்டிகள் அதிகம். இன்னும் சிறப்பான தொழில் நுட்பங்கள் தோன்றத் தோன்ற, குறிப்பிட்ட ஸ்பெக்ட்ரத்தை, அதிகம் பேர் பயன்படுத்தும் நிலை நாளை ஏற்படலாம். அல்லது மேலே சொன்ன அதிர் வெண்கள் தாண்டி, பிற அதிர்வெண் பரவல்களையும் பயன்படுத்தும் தொழில் நுட்பம் வரலாம். அதுவரை பற்றாக்குறை இருக்கவே செய்யும்.

நன்றி: புதிய தலைமுறை-டிசம்பர் 2, 2010

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக