அமெரிக்க நாடு கண்டுபிடிக்கப்பட்டு வெள்ளையர்கள் குடியேறிக் கொண்டிருந்த காலம். அதாவது 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கம். அப்போது விவசாயம் மட்டுமே அங்கு பிரதான தொழிலாக இருந்து வந்தது. ஒரு ஆணும் பெண்ணும் காதலிக்க அப்போது தடையில்லை. திருமணத்துக்கு முன்பே காதல் என்பது சகஜமான விசயம். அப்படி காதலில் ஈடுபடும் ஜோடிகளில், காதலன் தனது காதலியைத் தேடி தொலை தூரத்தில் இருக்கும் கிராமத்தில் இருந்து வருவான்.
இப்படி வரும் இளைஞர்கள் குதிரைகளில் வருவதே வழக்கம். வந்து சேருவது மாலை நேரம் என்றால் அந்த இளைஞனை இரவில் வீடு திரும்ப பெண்ணின் பெற்றோர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அப்போதெல்லாம் பயணம் என்பது அடர்ந்த காடுகள் நிறைந்த பாதையில் செல்வதாகத்தான் இருந்தது. வன விலங்குகள் தொந்தரவு அதிகமாக இருக்கும்.
இரவில் வெளிச்சம் தரும் ஒரே பொருளாக மெழுகுவர்த்தி மட்டுமே இருந்தது. அதுவும் செலவு அதிகமான ஒன்றாகவே இருந்தது. வீட்டில் இருக்கும் எல்லோரும் ஒரு அறையில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக் கொண்டு கும்பலாக தூங்குவார்கள். குளிர் அதிகமாக இருப்பதால் தரையில் படுத்து தூங்க முடியாது. கூடுதலாக படுக்கையும் இருக்காது.
அதனால் அந்த இளைஞனை தன் காதலியோடு சேர்ந்து ஒரே படுக்கையில் படுத்து கொள்ள அனுமதிப்பார்கள். ஒரே வகையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக தூங்க அதற்கு நடுவே காதல் ஜோடி கிசுகிசுத்த குரலில் ரகசியம் பேசிக் கொண்டிருக்கும். பக்கத்தில் காதலர்கள் படுத்திருந்தாலும் எல்லை மீறும் விசயத்துக்கு தடை இருந்தது. இரண்டு பேருக்கும் நடுவே கழுத்தில் இருந்து கால் வரை நீளமான, உயரமான ஒரு பலகையை தடுப்பாக நிற்க வைத்து விடுவார்கள்.
இந்த பலகையை தாண்டி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ளலாம். முத்த மிட்டுக் கொள்ளலாம். அவ்வளவுதான்.! வேறு எதுவும் செய்ய முடியாது.! இதுபோன்ற பலகைகள் அந்த காலத்தில் எல்லா வீட்டிலும் இருந்தது. இந்த பலகைக்கு ‘பண்டிங் போர்டு’ என்று பெயர். சில வீடுகளில் இந்த பலகையும் இல்லாமல் இருக்கும். அந்த வீடுகளில் இன்னொரு தடுப்பு முறையை கையாண்டார்கள்.
பெண்ணின் இடுப்பு வரை உயரமுள்ள சாக்குப்பையில் போட்டு பெண்ணை கட்டி வைத்து விடுவார்கள். அப்புறம் அந்த இளைஞனோடு தூங்க அனுமதிப்பார்கள். இந்த சாக்குப்பையை மீறி எதுவும் செய்துவிட முடியாது என்பது பெற்றோர்களின் கணிப்பு. ஆனால் நிறைய காதலர்கள் இந்த எல்லைகளை தாண்டியிருக்கிறார்கள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. அந்த காலத்திலேயே முப்பது விழுக்காடு பெண்கள் திருமணத்துக்கு முன்பே கர்ப்பமானதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக