செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

சனி, டிசம்பர் 31, 2011

அணுமின் நிலையங்களால் ஆபத்தா?


இந்தியாவில் 1948ல் பாபா அணு ஆராய்ச்சி நிலையமும், 1969ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் தாராப்பூரிலும் தொடங்கப்பட்டது. இந்தியாவில் தற்போது ஏழு அணு உலைகள் கட்டுமான நிலையில் உள்ளன. யுரேனியம், புளூட்டோனியம் அணுக்களின் கருவில் உள்ள சக்தியே அணுசக்தி ஆகும். அணு உலைக்குள் அணு எரிபொருள் பிளவுறுதல் மூலம் வெப்பம் உருவாகிறது. இந்த வெப்பத்தின் மூலமே மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

பாபா அணு ஆராய்ச்சி நிலையம்
இந்தியாவில் 1947ல் மின்சார உற்பத்தி 1300 மெகாவாட்டாக இருந்தது. தற்போது ஒரு லட்சத்து 73 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது. 2030ஆம் ஆண்டில் மின்சாரத்தின் தேவை 4 லட்சம் மெகாவாட்டாக இருக்கும் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் அடிப்படை மின்சாரத்தை உற்பத்தி செய்ய அனல்மின் நிலையம், நீர்மின்நிலையம், காற்றாலை மின்சாரம், சூரியசக்தி மின்சாரம் ஆகியவற்றை நம்பியிருக்கிறோம்.

அணு உலைகளை பொறுத்தவரை, சுனாமி, கடல்சீற்றம், வெள்ளம், கனமழை, சூறாவளி, நில நடுக்கம், பயங்கரவாதத் தாக்குதல், தொழில்நுட்ப செயலிழப்பு, தீவிபத்து போன்றவற்றால் பாதிக்கப்படும் அபாயம் உண்டு. இதை கருத்தில் கொண்டுதான், அணு மின்நிலையங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன.

கல்பாக்கம் அணுமின்நிலையம்
சென்னை கல்பாக்கம் அணுமின்நிலையம் இருந்த பகுதியில், 2004ல் சுனாமி தாக்குதல் ஏற்பட்டது. ஆனால், தானாக செயலிழக்கும் கருவிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் அணு உலைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இதேபோல், 1993ல் உத்திரப்பிரதேசம், நரோரா அணு மின்நிலையத்தில், ஏற்பட்ட கொதிகலன் தீவிபத்து, குஜராத் காக்ராபர் அணுமின் நிலையத்தில் 1994ல் வெள்ள பாதிப்பு போன்றவற்றால் கதிர்வீச்சு உள்ளிட்ட எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

அந்த அளவிற்கு இந்திய அணுமின் நிலையங்கள் மிக பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளன. அணுசக்தி பயன்பாட்டை பொறுத்தவரை இந்திய தொழில்நுட்பம் உலக அளவில், அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசுகளே பொறாமைப்படும் அளவுக்கு சிறப்பாக உள்ளது.

புகுஷிமாவால் பயந்த இந்தியா.

கடந்த மார்ச் மாதம், ஜப்பானில் புகுஷிமா அணுமின் உலை வெடித்து சிதறியதையடுத்து, உலகம் முழுவதும் அனைத்து அணு உலைகளுக்கும், கூடுதல் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ள, அனைத்து நாடுகளும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளன. இந்தியாவில் உள்ள 20 அணு மின் நிலையங்களில், இயக்கத்தில் உள்ள 18 நிலையங்களின் தன்மை குறித்து இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் (ஏ.இ.ஆர்.பி) ஆய்வு செய்யதது. 

இதில், பழமையான தாராப்பூர் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையம் ஆகியவை நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கலாம் என்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மற்றப்படி எந்த அணு உலைக்கும் பாதிப்பில்லை என்கிறது இந்த அமைப்பு. 


மேலும், இந்திய அணு உலைகள், கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்படும் பகுதியிலிருந்து, மேற்கு கடல் பகுதியில் 800 கிலோமீட்டர் தூரத்திலும், கிழக்கு கடல் பகுதியிலிருந்து, 1300 கிலோமீட்டர் தூரத்திலும், அமைந்துள்ளதால், சுனாமி அபாயம் இல்லை. எனவே, ஜப்பானை போன்ற நிலை இங்கு ஏற்படாது. ஆய்வு மதிப்பீடுகளை தாண்டி, இயற்கை பேரிடர் ஏற்பட்டால், சமாளிக்கக்கூடிய வகையில், அணு உலைகளின் கட்டடங்கள், அமைப்புகள், குளிர்விப்பான், வெப்பமூட்டும் கருவி, தொழில்நுட்ப கருவிகள் ஆகியவற்றை உயர்தரமான ஆய்வு செய்து அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கடலுக்கு அருகில் வைக்கப்படும் குளிர்விப்பான்களை பாதுகாக்க வேண்டும்.
இந்திய அணு உலைகள் ரிக்டர் அளவில், 6.7க்கும் மேல் நிலநடுக்கம் ஏற்பட்டால் தானாகவே செயலழிக்கும் வகையில் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. எந்த நிலையிலும், கதிர்வீச்சு வெளியேறாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடல் மட்டம் ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிட்ட அளவு உயர்ந்தால், நிலையம் தானாகவே செயலிழக்கும். இயற்கை பேரிடர் நேரத்தில் பேட்டரி மூலம் கண்காணித்து இயக்கும், நவீன தொழில்நுட்ப கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

அணு உலையை சுற்றி பொதுமக்களை பாதிக்காமல் இருப்பதற்கான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் உள்ளன. இதுதவிர இந்தியாவில் நிலநடுக்க அபாயம் உள்ள எந்த பகுதியிலோ அல்லது அதனால் விளைவுகள் ஏற்படும் பகுதியிலோ இந்திய அணு மின் நிலையங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

வியாழன், டிசம்பர் 29, 2011

எட்டு வகைப் பொய்கள்!


பொய் பேசுவது அன்றாட வாழ்க்கையில் இணைந்துள்ள ஒரு பகுதியாகி விட்டது. தங்கள் குழந்தைகளை மிகப் புத்திசாலிகள் என்று சொல்வதிலிருந்து அது தொடங்குகிறது. நமது வாழ்க்கையே உண்மைகளும், பொய்களும் கலந்து பின்னப்பட்டவை. அதேவேளையில் உண்மைகளைப் பொய்யிலிருந்து வேறு படுத்திப் பார்க்க முடியாமல் போகும் சந்தர்ப்பங்களும் நேரும் என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.

“பொய்மையும் வாய்மை இடத்த, புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின்” என்ற குறள் மூலம் “குற்றமில்லாத நன்மை விளைவிக்கும் எனில், பொய்யான சொல்லும் உண்மை என்றே கருதப்படும்” என்று திருவள்ளுவர் கூறி இருக்கிறார். இதைச் சொன்னபின், எந்தக் குறிப்பிட்ட ஒரு சந்தர்ப்பத்தில் பொய் சொல்லப்படலாம் என்பதற்குரிய நியாயங்களையும் அறிய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

ஹிப்போ அகஸ்டின் பொய்களை எட்டு விதமாக வகைப்படுத்துகிறார்.

1. மதபோதனையின் போது சொல்லப்படும் பொய்கள்.
2. யாருக்கும் உதவிடாமல் மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் பொய்கள்
3. மற்றவர்களுக்குத் தீங்கு விளைவித்து, ஒரு சிலருக்கு உதவிடும் பொய்கள்.
4. பொய் சொல்வதில் கிடைக்கும் மனமகிழ்ச்சிக்காகக் கூற்படும் பொய்கள்.


5. மற்றவர்களின் திருப்திக்காகக் சொல்லப்படும் பொய்கள்.
6. யாருக்கும் தீங்கிழைக்காத, ஆனால் யாருக்கோ உதவிடும் பொய்கள்.
7. யாருக்கும் தீங்கிழைக்காது ஆனால் யாரையோ காப்பாற்றுவதற்காகச் சொல்லப்படும் பொய்கள்.
8. யாருக்கும் தீங்கிழைக்காத ஆனால் யாருடைய தூய்மையையோ பாதுகாக்கச் சொல்லப்படும் பொய்கள்

பொய் என்ற வார்த்தை ஒரு சமூக ஆர்வலரைப் பொறுத்தவரை, “மிகைப் படுத்தப்  பட்ட நோக்கத்தைக்” குறிக்கிறது. ஒரு அரசியல்வாதியைப் பொறுத்தவரை, அவர் “தனது கனவுகளை, விற்பனை செய்வதைக்” குறிக்கிறது. சாதாரண மனிதனுக்கு, அது சந்தர்ப்பத்தின் தேவையைப் பொறுத்ததாக இருக்கிறது.

யாரும் பொய் சொல்லவே கூடாது எனத் தடை விதிக்கப்பட்டால் நமது அன்றாட வாழ்க்கை ஸ்தம்பித்துப் போகும். ஊடகங்களில் நாம் காணும் ஆபூர்வ விளம்பரங் களிலிருந்து, நமது சினிமா நட்சத்திரங்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்குச் சூட்டப்படும் புகழ் மாலைகள், பாராட்டுக்கள் எல்லாம் மாயமாகிவிடும்.

இலக்கியங்கள், மதங்கள், அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல்வாதிகள் தீட்டும் சொற் சித்திரங்கள் எல்லாம் வறட்சியைச் சந்திக்கும். இதனால் வாழ்க்கையே, சுவையும் சுறுசுறுப்பும் இல்லாமல் போய்விடும். ஆகவே, பொய் சொல்வது அல்ல பிரச்சினை. “எப்பொழுது, எந்த இடத்தில் பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று வரையறை செய்து கொள்வதுதான் பிரச்சினை” என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு தனிமனிதனின் மூளை அமைப்பில் உள்ள ஒரு கூறு சரியாகச் செயல்படாமல் போனால், தன்னை அறியாமலே அவர் பொய்யுரைகள் கூறுவதற்கு அது வழி வகுக்கும். இப்படிப்பட்ட நிலையை மருத்துவ அறிவியல் மைதோமேனியா Mythomania எனக் கூறுகிறது. அத்துடன் “பொய் சொல்லும் ஒருவர் எப்பொழுதுமே பொய் சொல்லிக் கொண்டிருப்பாரா? என்ற கேள்வி எழுகிறது. அது அவசியமில்லை.

பொய் சொல்வது ஒரு அறிவாற்றலின்படியான செயல். அதாவது ஒரு மனிதர் உணர்ந்தே அந்தப் பழக்கத்தை வைத்திருக்கிறார். அதன்படி அவர் எப்போது, எங்கே பொய் சொல்வது என்பதைத் தன் விருப்பத்திற்கேற்றபடி வைத்துக் கொள்கிறார். அது பெரும்பாலும் ஒரு தற்காப்பு நடவடிக்கையாகவே இருக்கும்.

நன்றி: மஞ்சரி மாத இதழ், டிசம்பர்-2010
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்களுக்காக பாலமுருகன்.

புதன், டிசம்பர் 28, 2011

"... அதுதான் அண்ணாயிசம்"


கடந்த, 1973 ஆம் ஆண்டு ஜுலை மாதம், சோவியத் யூனியனுக்கு போய் விட்டு திரும்பிய எம்.ஜி.ஆர்., ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்ட கம்யூனிசக் கொள்கையை பற்றி தீவிரமாய் சிந்தித்தார். அண்ணா துரையின் பெயரால், தாம் இயக்கம் தொடங்கியிருப்பது போல, கட்சியின் கொள்கைக்கும் ஏதாவது ஒரு பெயர் சூட்ட வேண்டும், அதிலும் அண்ணாதுரையின் பெயர் பொதிந்திருக்க வேண்டுமென எண்ணினார். அப்படி அவரது சிந்தனையில் உருவானதுதான், ‘அண்ணாயிசம்!’

தம் கட்சிக் கொள்கைக்கு ரத்தின சுருக்கமாக, ‘அண்ணாயிசம்’ என்று பெயர் சூட்டிய எம்.ஜி.ஆர்., அதை நாட்டு மக்களுக்கு அறிவிக்க விரும்பினார். 1973 ஆம் ஆண்டு, செப்டம்பர் 29 ஆம் தேதி இரவு, யு.என்.ஐ., மற்றும் பி.டி.ஐ., செய்தி நிறுவனங்களை தொடர்பு கொண்டு, நிருபர்களை அனுப்பி வைக்கு மாறு கூறினார். நிருபர்கள் வந்ததும், ‘அ.தி.மு.க.,வின் கொள்கை அண்ணா யிசம். இதை நாட்டு மக்களுக்கு தெரிவியுங்கள்’ என்றார்.


திடீரென அழைத்து, ஒரு வரியில் செய்தி சொல்லுகிறாரே என்று நிருபர் கள் திகைத்தனர். அதை கண்ட எம்.ஜி.ஆர்., ‘ஏன் மாவோயிசம், மார்க்சிசம் என்றெல்லாம் கொள்கைகள் இல்லையா? அவற்றை போன்றதுதான் அண்ணாயிசமும்’ என்றார். மறுநாள் இந்த செய்தி, பத்திரிகைகளில் வெளி யானது. உடனே மற்ற நிருபர்கள் எம்.ஜி.ஆரின் தி.நகர் அலுவலகத்திற்கு படையெடுத்தனர். ‘அண்ணாயிசம் என்றால் என்ன?’ என்று கேட்டனர்.

‘காந்தியிசம், கம்யூனிசம், கேபிடலிசம் ஆகிய மூன்று கொள்கை தத்துவங்களில் உள்ள நல்ல அம்சங்களை திரட்டினால் என்ன கிடைக் குமோ அதுதான் அண்ணாயிசம்’ என்று விளக்கமளித்தார் எம்.ஜி.ஆர். எம்.ஜி. ஆரின் அண்ணாயிசத்தை சிலர் பாராட்டினர்; சிலர் புரியவில்லை என்றனர்; சிலர் குறை கூறினர். ஆனால், தமிழக மக்களோ அண்ணாயிசத்தின் அடிப்படை என்று தங்களுக்கு தாங்களே ஒரு விளக்கம் கூறிக் கொண்டு அதை ஏற்றுக் கொண்டனர்.
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

ஞாயிறு, டிசம்பர் 25, 2011

"தங்க(ம்)மான தகவல்கள்.!"



கிறிஸ்து பிறப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் முதன் முதலில் தங்கத்தைப் பயன்படுத்த தொடங்கினர். ஆறாம் நூற்றாண்டிலேயே லிபியா நாட்டின் குரோசஸ் மன்னன் காலத்தில்தான் முதல் தங்க நாணயம் அச்சடிக்கப்பட்டது. தங்கம் உற்பத்தியில் முதல் இடத்தில் இருக்கும் நாடு அப்போதும் சரி, இப்போதும் சரி தென்னாப்பிரிக்காதான். பனி மூடிய அண்டார்டிகா கண்டம் தவிர அனைத்துக் கண்டங்களிலும் தங்கம் வெட்டி எடுக்கப்படுகிறது. உலக அளவில் தங்கம் டிராய் அவுன்ஸ் கணக்கில்தான் கணக்கிடப்படுகிறது. ஒரு டிராய் அவுன்ஸ் என்பது 28.35 கிராம்.

தங்கத்தாது கலந்துள்ள ஒருடன் மணலை அரைத்துச் சலித்தால் அதில் இருந்து 8 முதல் 10 கிராம் தங்கம் மட்டுமே கிடைக்கும். 3 டன் தங்கத் தாதில் இருந்து ஓர் அவுன்ஸ் தங்கம் கிடைக்கும். உலகின் மிகவும் ஆழமான தங்க சுரங்கம் தென் ஆப்பிரிக்காவில் உள்ள சுவுகாவில் உள்ளது. 3.7 கி.மீ. ஆழத்தில் அமைந்துள்ள இந்த சுரங்கத்தின் ஒரு டன் மணலில் 5.68 கிராம் தங்கம் உள்ளது.

தங்கம் துருப்பிடிக்காது. மனித உடலில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. எனவே உலகம் முழுவதும் தங்கப் பல் கட்டுவதற்காகவே மட்டும் மொத்த உற்பத்தியில் 2 விழுக்காடு தங்கம் பயன்படுத்தப்படுகிறது. முதன் முதலாக தங்கப்பல் கட்டியவர்கள் சீனர்கள் என்கிறது சரித்திரம். தங்கம் ஆபரணமாக மட்டுமில்லாமல் உடல் அழகுக்கும், இளமை நீடிப்பிற்கும், ஆரோக்கிய த்திற்கும் தங்க பஸ்பம் சாப்பிடுவது நல்லது என்று பழங்கால நூல்கள் கூறுகின்றன.

உடல் ஆரோக்கியத்துடன் ஆயுளும் அதிகரிக்கும் என்பது பல நாட்டு மக்களின் நம்பிக்கை. போட்டோ பிலிமில் கூட தங்கம் பயன் படுத்தப்படுகிறது. தங்கத்தின் உருகுநிலை 1064.43 டிகிரி செல்சியஸ். 24 காரட் தங்கத்தில் 100 விழுக்காடு தூய்மையும், 22-ல் 91.75 தூய்மையும், 18-ல் 75 விழுக்காடு தூய்மையும், 12 காரட்டில் 50.25 விழுக்காடு தூய்மையும், 10 காரட்டில் 42 விழுக்காடு தூய்மையும் உள்ளன.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியில்தான் உலகிலேயே அதிக தங்கம் கையிருப்பு உள்ளது. இதுவரை வெட்டி எடுக்கப்பட்ட தங்கத்தில் 3 விழுக்காட்டை அந்த வங்கி வைத்துள்ளது. பிற உலோகங்களை போல் இல்லாமல் தங்கம் அரிதான அளவில்தான் கிடைக்கிறது. அதாவது பூமியின் புறப்பரப்பில் ஒவ்வொரு 100 கோடி பாகத்தில் 3-ல் ஒரு பகுதியில்தான் தங்கம் உள்ளது. ஆனால் நாளுக்கு நாள் தேவை அதிகரித்துக் கொண்டே போகிறது. இதுதான் தங்கம் மதிப்புக்குரிய உலோகமாக இருப்பதற்கு காரணம். இன்று புழக்கத்தில் இருக்கும் தங்கத்தில் பெரும் பகுதி வரலாற்று காலத்தில் வெட்டி எடுக்கப்பட்டதுதான்.

தங்கத்தின் தரத்தை அறிய தற்போது ஹால்மார்க், பி.ஐ.எஸ். முத்திரைகள் உள்ளன. ஆனால் தொடக்க காலத்தில் தங்கத்தை பல்லால் கடித்து பார்த்து நம்பகத்தன்மையை சோதிக்கும் முறை இருந்தது. தங்கம் லேசான உலோகம் என்பதால் பல் அடையாளம் பதிந்து விடும். அந்த அடையாளத்தை வைத்து தங்கத்தை தரம் பார்த்துள்ளனர்.



இந்தியா, இலங்கை, அரபுநாடுகளில் 22 காரட் அளவு தரம் பயன்படுத்தப் படுகிறது. சீனா, தைவான், ஹாங்காங்-கில் 24 காரட், ரஷ்யாவில் 14 காரட் அளவிற்கு தரம் அறிந்து பயன்படுத்தப்படுகிறது. தங்கம் உற்பத்தியில் 1991 ஆம் ஆண்டு வரை சோவியத் யூனியன்தான் முதலிடத்தில் இருந்தது. சோவியத் பலநாடுகளாக உடைந்து சிதறிய பிறகு, தென்னாப்பிரிக்கா முதலிடத்தைப் பிடித்தது. 2008-ல் சீனா முதலிடத்தை எட்டிப் பிடித்தது.

நகைக்கு முன்னதாக தங்கம் கரன்சியாக துருக்கி மன்னர் குரோசெஸ் ஆட்சிக் காலத்தில் கி.மு.560 முதல் 547 ஆம் ஆண்டு வரை பயன்படுத்தப் பட்டது. கி.மு. 2000 க்கு முன்னதாக எகிப்தியர்கள் தங்க வேட்டை நடத்தியிருக்கிறார்கள். இதுவரை வெட்டி எடுக்கப்பட்டுள்ள சுமார் 1.58 லட்சம் டன் தங்கத்தில் 65 விழுக்காடு 1950 க்கு பின் கிடைத்தவைதான்.

உலகம் முழுவதும் தங்கம் விற்பனை செய்யப்பட்டாலும் லண்டன் உலோகச் சந்தையில்தான் தங்கத்தின் விலை முடிவு செய்யப்படுகிறது. லண்டனின் கரன்சி பவுண்ட் ஆக இருந்தாலும் டாலரில்தான் விலை நிரணயம் செய்யப்படுகிறது. தங்கத்துக்கான தேவை மற்றும் இருப்பின் அடிப்படையில்தான் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு அவுன்ஸ் விலை இவ்வளவுதான் என நிர்ணயம் செய்கின்றனர். அதை பவுனுக்கும், கிராமுக்கும் மாற்றி ஒவ்வொரு நாட்டிலும் விலையை முடிவு செய்கின்றனர்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

சனி, டிசம்பர் 24, 2011

‘தமிழ்நாடு தமிழருக்கே.!’


‘சலிப்பு, ஓய்வு இரண்டும் தற்கொலைக்குச் சமம்’-இந்த வார்த்தைகளைச் சொன்னவரும், இந்த வார்த்தைகளை வாழ்க்கையாகக் கொண்டவருமான பெரியார், செப்டம்பர் 17, 1879 ஆம் ஆண்டு பிறந்தார். இறப்பதற்குச் சில நாட்கள் முன்புவரை தனது கொள்கைகளுக்காகப் பிரசாரம் செய்தவர். தமிழக அரசியல், சமூகம் ஆகியவற்றில் இவர் ஏற்படுத்திய தாக்கத்திற்கு, இணையான தாக்கம் இதுவரை யாராலும் ஏற்படுத்தப்படவில்லை. ஈரோடு வேங்கட ராமசாமி என்கிற இயற்பெயரைக் கொண்ட பெரியார், சாதி மற்றும் மூட நம்பிக்கைகள் அழியவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர்.

காங்கிரஸில் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கியவர். மது ஒழிப்பு, தீண்டாமைக்கு எதிரான போராட்டங்கள் என காந்தியின் பல போராட்டங்களை தமிழகத்திலும், கேரளத்தில் உள்ள வைக்கத்திலும் முன்னெடுத்துச் சென்றவர். பின்னர் திராவிட கழகத்தைத் தோற்றுவித்ததோடு, சுயமரியாதை மற்றும் பகுத்தறிவை தன் வாழ்நாள் முழுக்க கொள்கைகளாகக் கடைபிடித்தவர். மூட நம்பிக்கைக்கு காரணமாக இருப்பது கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்க ளும்தான் என்பது அவரது கருத்து. அதனால் இறுதிவரை அவர் ஒரு தீவிர நாத்திகராகவே செயல் பட்டார்.


வசதியான வணிகக் குடும்பப் பின்னணியைக் கொண்ட பெரியார், மிக எளிமையாகவே வாழ்ந்தார். 1929ல் சுயமரியாதையை வலியுறுத்த செங்கல்பட்டில் நடத்திய மாநாட்டில் தன் பெயரின் பின்வரும் சாதிப்பெயரை நீக்கி, முன்னுதாரணமாக விளங்கினார். அவரது கருத்துகளைப் பரப்புவதற்காகவே, ‘குடியசு’ நாளிதழை நடத்தினார். ஆங்கிலத்தில், ‘ரிவோல்ட்’ என்ற நாளிதழ் மூலம் ஆங்கிலம் மட்டுமே தெரிந்த மக்களுக்காகப் பிரசாரம் செய்தார். ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று முழங்கிய தோடு இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார்.

ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி கற்றிருந்தாலும் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளைப் பேசும் ஆற்றல் கொண்டிருந்த பெரியார், இந்தியாவில் மட்டுமல்லாமல் மலேசியா, சிங்கப்பூர், ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், இலங்கை போன்ற நாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தன் கருத்துகளைப் பதித்தார். தமிழ் எழுத்துக்களின் சீரமைப்பில் பெரியாரின் பங்கு குறிப்பிடத்தக்கது. இவரின் சமுதாயப் பங்களிப்பிற்காக யுனெஸ்கோ நிறுவனம் விருது வழங்கி கௌரவித்துள்ளது. இறுதிக் காலத்தில் குடலிறக்க நோயினால் பாதிக்கப்பட்ட பெரியார், டிசம்பர் 24, 1973ல் தனது 94ம் வயதில் இயற்கை எய்தினார்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

வெள்ளி, டிசம்பர் 23, 2011

காதல் ஜோடியை பிரிக்கும் பலகை..!


அமெரிக்க நாடு கண்டுபிடிக்கப்பட்டு வெள்ளையர்கள் குடியேறிக் கொண்டிருந்த காலம். அதாவது 17 ஆம்  நூற்றாண்டின் தொடக்கம். அப்போது விவசாயம் மட்டுமே அங்கு பிரதான தொழிலாக இருந்து வந்தது. ஒரு ஆணும் பெண்ணும் காதலிக்க அப்போது தடையில்லை. திருமணத்துக்கு முன்பே காதல் என்பது சகஜமான விசயம். அப்படி காதலில் ஈடுபடும் ஜோடிகளில், காதலன் தனது காதலியைத் தேடி தொலை தூரத்தில் இருக்கும் கிராமத்தில் இருந்து வருவான்.


இப்படி வரும் இளைஞர்கள் குதிரைகளில் வருவதே வழக்கம். வந்து சேருவது மாலை நேரம் என்றால் அந்த இளைஞனை இரவில் வீடு திரும்ப பெண்ணின் பெற்றோர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அப்போதெல்லாம் பயணம் என்பது அடர்ந்த காடுகள் நிறைந்த பாதையில் செல்வதாகத்தான் இருந்தது. வன விலங்குகள் தொந்தரவு அதிகமாக இருக்கும்.

இரவில் வெளிச்சம் தரும் ஒரே பொருளாக மெழுகுவர்த்தி மட்டுமே இருந்தது. அதுவும் செலவு அதிகமான ஒன்றாகவே இருந்தது. வீட்டில் இருக்கும் எல்லோரும் ஒரு அறையில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக் கொண்டு கும்பலாக தூங்குவார்கள். குளிர் அதிகமாக இருப்பதால் தரையில் படுத்து தூங்க முடியாது. கூடுதலாக படுக்கையும் இருக்காது.


அதனால் அந்த இளைஞனை தன் காதலியோடு சேர்ந்து ஒரே படுக்கையில் படுத்து கொள்ள அனுமதிப்பார்கள். ஒரே வகையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக தூங்க அதற்கு நடுவே காதல் ஜோடி கிசுகிசுத்த குரலில் ரகசியம் பேசிக் கொண்டிருக்கும். பக்கத்தில் காதலர்கள் படுத்திருந்தாலும் எல்லை மீறும் விசயத்துக்கு தடை இருந்தது. இரண்டு பேருக்கும் நடுவே கழுத்தில் இருந்து கால் வரை நீளமான, உயரமான ஒரு பலகையை தடுப்பாக நிற்க வைத்து விடுவார்கள்.


இந்த பலகையை தாண்டி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ளலாம். முத்த மிட்டுக் கொள்ளலாம். அவ்வளவுதான்.! வேறு எதுவும் செய்ய முடியாது.! இதுபோன்ற பலகைகள் அந்த காலத்தில் எல்லா வீட்டிலும் இருந்தது. இந்த பலகைக்கு ‘பண்டிங் போர்டு’ என்று பெயர். சில வீடுகளில் இந்த பலகையும் இல்லாமல் இருக்கும். அந்த வீடுகளில் இன்னொரு தடுப்பு முறையை கையாண்டார்கள்.

பெண்ணின் இடுப்பு வரை உயரமுள்ள சாக்குப்பையில் போட்டு பெண்ணை கட்டி வைத்து விடுவார்கள். அப்புறம் அந்த இளைஞனோடு தூங்க அனுமதிப்பார்கள். இந்த சாக்குப்பையை மீறி எதுவும் செய்துவிட முடியாது என்பது பெற்றோர்களின் கணிப்பு. ஆனால் நிறைய காதலர்கள் இந்த எல்லைகளை தாண்டியிருக்கிறார்கள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. அந்த காலத்திலேயே முப்பது விழுக்காடு பெண்கள் திருமணத்துக்கு முன்பே கர்ப்பமானதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

திங்கள், டிசம்பர் 19, 2011

பாஸ்போர்ட் பெறுவது எப்படி?



ஆர்டினரி (Ordinary), அப்பிசியல் (Official), டிப்ளோமேட்டிக் (Diplomatic), ஜம்போ (Jumbo) என நான்கு விதமான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன. Ordinary பாஸ்போர்ட் சாதாரண குடிமக்களுக்கும், Official பாஸ்போர்ட் அரசாங்க ஊழியர்களுக்கும், Diplomatic பாஸ்போர்ட் முதல்வர், பிரதமர் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கும், Jumbo பாஸ்போர்ட் வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.

பாஸ்போர்ட் பெறுவதில் இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று ஆர்டினரி. மற்றொன்று தட்கல். இதில் எந்த வகையில் விண்ணப்பிப்பதாக இருந்தாலும், சென்னையைச் சேர்ந்தவர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை கைப்பட பூர்த்தி செய்து கொண்டுவந்தால் அது ஏற்கப்படமாட்டாது. ஆன்லைன் மூலமாக வரும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்வார்கள். ஆன்லைனில் விண்ணப்பித்து, அந்தப் படிவத்தை ‘பிரின்ட்-அவுட்‘ எடுத்து, அதை பாஸ்போர்ட் அலுவலகத்தில் அளிக்க வேண்டும். அவர்கள் குறிப்பிடும் ஒரு தேதியில் வந்து டோக்கன் எடுக்க வேண்டும். பின்னர், நிர்ணயிக்கப்பட்ட கவுன்ட்டர்களில் செக் இன் செய்ய வேண்டும்.

அதே சென்னைக்கு வெளியே பிற ஊர்களில் இருப்பவர்கள் தங்கள் கைப்பட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பாஸ்போர்ட் பிரிவுகளிலோ அல்லது ஸ்பீடு போஸ்ட் சென்டர்களிலோ சமர்பிக்க வேண்டும். சில மெட்ரோ நகரங்களில் காவல் துறை நிலையங்களில் பாஸ்போர்ட் நடுவங்கள் இருந்தால், அங்கு விண்ணப்பத்தைச் சமர்பிக்கலாம்.

தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெற கட்டாயம் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நேரடியாக வந்து விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன், அரசாங்கம் அங்கீகரித்த ஏதேனும் மூன்று அடையாளச் சான்றிதழ்களைச் சமர்பிக்க வேண்டும். அந்த மூன்றில், ஒன்று புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையாக இருக்க வேண்டும். பொதுவாக, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றின் நகல்களை இணைக்கலாம்.


ஆர்டினரிக்கு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, பிறந்த தேதி குறிப்பிடப்பட்டு இருக்கும் சான்றிதழ், குடியுரிமை ஆவணம் ஆகியவற்றின் நகல்கள் தலா இரண்டு இணைக்க வேண்டும். புதிய ஆர்டினரி பாஸ்போர்ட்டுக்கு 1000 ரூபாய், தட்கல் மூலம் என்றால் 2500 ரூபாய்.

ஆர்டினரி, தட்கல் என இரு முறைகளிலும் பெறப்படும் பாஸ்போர்ட்டுகள் பத்து ஆண்டுகளுக்குச் செல்லுபடி ஆகும். பத்து ஆண்டுகள் முடிவதற்கு ஓர் ஆண்டுக்கு முன்னாலோ அல்லது பத்தாவது ஆண்டிலோ நீங்கள் அதைப் புதுப்பிக்கலாம். புதுப்பிக்க ஆர்டினரிக்கு 1000 ரூபாய் மற்றும் தட்கலுக்கு 500 ரூபாய் கட்டணம்.

பெயர், முகவரி மாற்றம், திருமணம் ஆனவுடன் உங்கள் மனைவியின் பெயரை உங்கள் பாஸ்போர்டில் குறிப்பிடுதல் போன்ற சின்னச் சின்ன திருத்தங்கள் மேற்கொள்ளவும், பாஸ்போர்ட்டைப் புதுப்பித்துக்கொள்ளவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தேவை இல்லை. இவற்றில் ஆர்டினரி, தட்கல் இரண்டுக்கும் 1000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இவற்றுக்கு ஃபார்ம் 2 ஐப் பயன்படுத்த வேண்டும்.

பாஸ்போர்ட் தொலைந்து போனால் காவல் துறையினரிடம் புகார் செய்து, எஃப்.ஐ.ஆர். பெற வேண்டும். அவர்கள் “Non Traceable” சான்றிதழ் தருவார்கள். அதை ஒப்படைத்தால் டூப்ளிகேட் பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கு ஆர்டினரிக்கு 2500 ரூபாய் மற்றும் தட்கலுக்கு 5000 ரூபாய் கட்டணம்.
நன்றி: ஆனந்த விகடன்-24.11.10

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

ஞாயிறு, டிசம்பர் 18, 2011

சென்னையில் இசைமழை...!



சென்னை இசைவிழா உலகளவில் பிரபலமானது. குறுகிய காலத்தில் அதிக அளவிலான சபாக்கள் அல்லது இசை அமைப்புகள் அதிகமான நிகழ்ச்சி களைக் கொடுப்பது இங்குதான். அதனால்தான் சென்னை இசைவிழாவில் கச்சேரி செய்வது என்பது மிகவும் கௌரவம் நிறைந்ததாகக் கருதப்படுகிறது. இசைவிழாவில் கர்நாடக இசைக் கச்சேரிகள் மட்டுமில்லாமல், பரதநாட்டியம் சார்ந்த விசயங்கள், விவாதங்கள் அடங்கிய நிகழ்ச்சிகளும், லெக்சர் டெமான் ஸ்ட்ரேஷன் என்கிற பெயரில் இசை நிகழ்ச்சிகளும், ஹரிசுதா, சங்கீத உபன் யாசம், நடனங்கள், நாடகங்கள் மெல்லிசை கச்சேரிகளும் நடக்கின்றன.

ஹரிசுதாவும், பரதநாட்டியமும் இசைவிழா தொடங்கப்பட்டதிலிருந்தே இசை விழாவுடன் இணைந்தே நடத்தப்பட்டு வருகின்றன. ஹரிசுதாவிற்கென்றே சென்னை ஜார்ஜ் டவுனில் கோகலே ஹால் தொடங்கப்பட்டது என்கிற அளவுக்கு ஹரிசுதா முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. டிசம்பர் தொடங்கி ஜனவரி மாதம் வரை, ஒரு மாத காலம் நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சிகள் இசைப் பிரியர்களுக்கு உற்சாத்தைத் தரும் என்பதில் ஐயமில்லை. இது குறித்த ஒரு கட்டுரைத் தொகுப்பு...

சென்னையில் இசைவிழா தொடங்கி 83 ஆண்டுகள் முடிந்து விட்டன. 1927 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில்தான் அன்றைய மெட்ராசில் அனைந்திந்திய இசை மாநாடு நடத்த வேண்டும் என்று இசைப் பிரியரான காங்கிரஸ் தலைவர் எஸ்.சத்தியமூர்த்தி தலைமையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இசையுலக ஜாம்பவான்களுடன் நட்புறவுடன் இருந்த சத்தியமூர்த்தி இதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். பாரம்பரிய கர்நாடக இசையை வளர்ப்பதற்காகவும், இசை விழாவை நடத்துவதற்கெனவும் மெட்ராஸ் மியூசிக் அகடாமி தொடங்கப்பட்டது. 1929 லிருந்து கிறிஸ்துமஸ் விடுமுறை சமயத்தில் ஒரு வார காலத்திற்கு இசைவிழா நடக்க தொடங்கியது.


padmasri kathri gopalnath
 மியூசிக் அகாடமி தொடங்கப்படுவதற்கு முன்பே 1900ல் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஸ்வாமி சபா தொடங்கப்பட்டது. ஆனால் டிசம்பர் மாதத்தில் இசைவிழாவை முதலில் நடத்த தொடங்கியது மியூசிக் அகாடமிதான். அப்போது மியூசிக் அகாடமிக்கென தனியாக கட்டிடம் ஏதும் இல்லை. 1965ல் தான் ஜவர்ஹல்லால் நேரு தற்போது அகாடமி இருக்கும் டிடிகே சாலையில் அதற்கான அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் இசை ஆர்வலர்கள் தங்கள் சமூகத்தினருக்காவும் தங்கள் பகுதி இசை ரசிகர்களுக்காவும் சபாக்களை தொடங்கினார்கள். 1932ல் மெட்ராஸில் இருந்த தெலுங்கு பேசும் பிரிவினர் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியை மைலாப்பூரில் தொடங்கினார்கள். மாம்பலம் பகுதி மக்களின் இசை ஆர்வத்தை 1947ல் பிறந்த பிரம்ம கான சபாவும், 1950ல் உருவான கிருஷ்ணகான சபாவும் நிறைவேற்றின. 1958ல் நாரத காண சபா தொடங்கப்பட்டது.
1960களில் நான்கு ஐந்து என்று இருந்த சபாக்களின் எண்ணிக்கை வருடாவருடம் அதிகரித்து 90 களில் 40 ஆனது. கர்நாடக இசைப் பத்திரிகையான ஸ்ருதி இதழின் கணக்குப்படி 2002-2003 ல் 73 சபாக்கள் இருந்தன. ஆண்டுதோறும் சென்னை இசைவிழாவின் போது சபாக்களின் நிகழ்ச்சிகளை தொகுத்து சிறிய கையேடாக வெளியிடும் எஸ்.கண்ணனின் கணக்குப்படி இந்த ஆண்டு (2010) டிசம்பர் மாதத்தில் 117 சபாக்கள் உள்ளதாக தெரிவிக்கிறது.

karnatic Manasri prasth
 வெளிநாடு வாழ் இந்தியர்க்கென தனி சபாவும், சென்னையில் இருப்பது கூடுதல் சுவராசியம். 1990ல் அடையாறு, இந்திரா நகர், சாஸ்திரி நகர் பகுதி இசை ரசிகர்களுக்காக தொடங்கப்பட்ட ஹம்சத்வனி, 1994ல் வெளிநாட்டு இந்தியர்க்கான பிரத்யேக சபாவாக்கப்பட்டது. சென்னையின் கர்நாடக இசைவிழாவில் தமிழ்ப் பாடல்களும் பாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கும் விசயம். டிசம்பர் அல்லாத சீசன் கச்சேரிகளில் தமிழ்ப் பாடல்கள் தீமாட்டிக் கச்சேரியாக நடக்கிறது. ‘டிசம்பர் சீசனில் அனைத்து பாடகர்களுமே பாபநாசம் சிவன், பெரியசாமி தூரன் பாடல்கள் என்று தமிழ்ப் பாடல்களைப் பாடுகிறார்கள். இதனால் தமிழிசையை சாமானிய மக்களால் ரசிக்க முடியாத நிலை உள்ளது.

அதுமட்டுமில்லை! சென்னை இசைவிழாவில் கச்சேரி செய்வது கௌரவமான தாக கருதப்படுகிறது. ஒருவர் மேடை ஏறுவதற்கு முன் நிறைய கச்சேரிகளைக் கேட்கவேண்டும். அப்போதுதான் அவரால் சிறந்த கலைஞராக முடியும் என்கிறார்கள் சங்கீத விமர்சகர்கள். ஆனால் திறமையான வளரும் கலைஞர்கள் அனைவருக்குமே வாய்ப்பு கிடைக்கிறதா? என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பணம், செல்வாக்கு உள்ளவர்களுக்கே வாய்ப்பு அதிகம் என்பது இந்த இசைவிழாவின் ஒரு மைனஸ் பாயிண்ட்.
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

சனி, டிசம்பர் 17, 2011

சிலிர்த்து எழுபவர்கள் எழுத்தாளர்கள்!


நூல்கள் எப்போதும் ஒரு நாகரிகத்தின் சின்னம்; பண்பாட்டின் அடையாளம்; அறிவு வளர்ச்சியின் குறியீடு; வளர்ந்து வரும் சமுதாயத்தின் முன்னோடி; அந்தந்த காலச்சூழலை எடுத்துக்காட்டும் கண்ணாடி; இது வெறும் காகித மல்ல, ஆயுதம்; அதுவும் அறிவாயுதம். அத்தகைய அறிவை வளர்க் கவும், சிந்தனையைத் தூண்டவும் துணையாக இருப்பவை நூல்களே! மிகப் பெரிய சமுதாய மாற்றங்களுக்கும், பூமியையே புரட்டிப் போட்ட புரட்சி களுக்கும் நூல்களே ஆயுதங்களாகப் பயன்பட்டன.

பிளேட்டோ
புத்தகம் இல்லாத வீடு, ஜன்னல் இல்லாத அறை போன்றது. எந்த வீட்டில் நூலகம் இருக்கிறதோ அந்த வீட்டில் ஆன்மா இருக்கிறது என்று சிந்தனை யாளர் பிளேட்டோ கூறியுள்ளார். நாடும், வீடும் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 18-ஆம் நூற்றாண்டை ‘புரட்சியின் யுகம்’ என்று கூறுவர். இந்த நூற்றாண்டில்தான் ஐரோப்பாவில் மத்தியதர வர்க்கம் விழித் தெழிந்து செல்வத்தையும், செல்வாக்கையும் பெற முயன்றது. நிலப் பிரபுத்து வத்தின் ஆதிக்கத்திலிருந்து மத்தியதர வர்க்கத்தின் ஆளுகை க்குப் பொருளாதார, அரசியல் துறைகள் பெயரளவில் மாறுவதற்கு வால்டேர், ரூசோ ஆகிய சிந்தனை யாளர்களின் நூல்களே காரணம் ஆகும்.

‘‘பொதுமக்களே! விழித்து எழுங்கள். உங்கள் கைவிலங்குகளை உடைத் தெறியுங்கள்!’’ என்ற வால்டேரின் சுதந்திரக் குரல் பிரெஞ்சு மக்களைத் தட்டி எழுப்பியது. கொடுங்கோலர்களை எதிர்த்துப் போராடும் நெஞ் சுரத்தைப் பெற்றுத் தந்தது. மன்னர் ஆட்சியைத் தூக்கியெறிந்து மக்களாட் சியை உருவாக்கும் மாபெரும் பிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்டது. ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்ற அந்தப் புரட்சி முழக்கம் வானை முட்டி எங்கும் எதிரொலித்தது.

வால்டேர்
‘‘என்னுடைய தொழில் நான் சிந்திப்பதைச் சொல்வதுதான்!’’ என்றார் வால்டேர். அவர் சிந்தித்தவை நாடகங்கள், நவீனங்கள், கவிதைகள், கட்டுரைகள், அறிக்கைகள், கடிதங்கள் என 99 நூல்களில் இடம் பெற்றுள்ளன. இவை காலத்தை வென்று இன்றும் நின்று நிலவுகின்றன. பிரெஞ்சு மொழிக்கே இவை பெருமையைத் தேடித் தந்தன.

மனித சமுதாயத்தையே மாற்றியமைத்த ரூசோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’ அதிகார வெறியர்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. ‘‘அந்தப் புத்தகத்தில் சொல்லப் பட்டிருக்கும் வார்த்தைகளை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். ஆனால், அவைகளைச் சொல்வதற்கு உனக்குள்ள உரிமைக்காக நான் சாகும்வரை போராடுவேன்’’ என்று வால்டேர் குமுறி எழுந்து அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில் அவரே சுதந்திரத்தின் விடுதலைக்காகப் பாடுபட்டார்.

மாமேதை ராகுல்ஜி சமுதாயத்தின் தோற்றம், வளர்ச்சி, நாகரிகம் முதலியவைகளைப் பற்றி தத்துவரீதியாக ‘மனித சமுதாயம்’ என்ற பெரிய நூலைப் படைத்துள்ளார். அவரே கூறியிருப்பதுபோல, அந்த முக்கியப் பிரச்னைகளைச் சாதாரண மக்களும் புரிந்து கொள்வதற்காக, ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ எழுதியிருக்கிறார்.


ராகுல்ஜி அறிவைச் சேகரிப்பதற்காக உலகத்தின் மூலை முடுக்குகளை யெல்லாம் சுற்றியிருக்கிறார். உத்திரப் பிரதேச மாநிலத்தின் ஆஜம்கட் மாவட்ட த்தைச் சேர்ந்த ஒரு சிறு கிராமத்தில் பிறந்த இவர், காசி நகரிலே தொடங்கிய தமது அறிவு சேகரிக்கும் முயற்சியை, லெனின்கிராடு பல்கலைக் கழகப் பேராசிரியர் பதவியைப் பெற்ற பிறகும் தொடர்ந்து செய்து வருகிறார். ஆயுள் முழுவதும் உழைத்துச் சேகரித்த அறிவுக் கருவூலத்தை அவருடைய நூல்களிலே அள்ளித் தந்திருக்கிறார்.

‘‘இந்தக் கதைகள் ஒவ்வொன்றுக்கும் பின்னால் அந்தந்தக் காலத்தைப் பொறுத்த பலமான ஆதாரங்கள் இருக்கின்றன. உலகத்தில் எத்தனையோ மொழிகளில் உள்ள தர்க்கரீதியான, மொழியாராய்ச்சி, மண், கல், தாமிரம், பித்தளை, இரும்பு இவைகளில் எழுதப்பட்டும், செதுக்கப்பட்டும் உள்ள வரலாறு, இலக்கியங்கள் எழுத்து வடிவம் பெறாத பாடல்கள், கதைகள், பல நாட்டின் பழக்க வழக்கங்கள், புதை பொருள்கள் இவைகளில் இருந்தெல் லாம் ஆதாரங்கள் தேடப்பட்டிருக்கின்றன...’’ என்று கூறும் ராகுல்ஜி, இந்தக் கதைகளுக்கு ஆதாரமான நூல்கள் முதலியவற்றின் பட்டியலைச் சேர்த்தால் அது இந்நூலின் இணைப்பாக இல்லாமல் இதைவிடப் பெரியதோர் நூலாக ஆகிவிடும் என்பதால் சேர்க்கவில்லை என்று கூறியுள்ளதைப் பார்த்தால், அவரின் கடும் உழைப்பை புரிந்துகொள்ள முடியும்.

இவ்வாறு பலகாலம் முயன்று உருவாக்கப்பட்ட படைப்புகள் அந்தந்த காலத்தில் வரவேற்கப்பட்டிருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. பழமை வாதிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு ஆளாகியுள்ளன. அவற்றை எழுதிய குற்றத்துக்காகவே அவர்கள் தண்டிக்கப்பட்டனர்; நாடு கடத்தப் பட்டனர்; அவர்களது அரிய படைப்புகளும் எரியூட்டப்பட்டன. என்னே கொடுமை இது! ஆனால் அவர்களோ காலம் கடந்து பாராட்டப்படுகின்றனர்.

ரூசோ
பிரெஞ்சுப் புரட்சியின் பிதாமகர்களாகக் கருதப்படும் இரட்டையர்களான வால்டேர், ரூசோ இவர்களும் அக்கால ஆட்சியாளர்களால் பெரிதும் பாதிக்கப் பட்டவர்களே! வால்டேர் சமூக ஒழுக்கத்தைக் கெடுப்பவன் என அரசாங்கம் குற்றம் சாட்டியது; மத விரோதி என்று மதவெறியர்கள் பழி தூற்றினர்; ‘நரகத்தின் வாசற்படி’ என்று அவரை வைதீகர்கள் கண்டு நடுங்கினர். இறுதியில் சிறையில் தள்ளப்பட்டு, அங்கிருந்து நாடு கடத்தப்பட்டார்.

1791-ஆம் ஆண்டு வெடித்தெழுந்த பிரெஞ்சுப் புரட்சியின்போது, வால்டேரின் பூதவுடல் புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்டு பாரிஸ் நகருக்குள் மாபெரும் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. கொடுங்கோன்மையின் சின்னமாக விளங்கிய ‘பாஸ்டில்’ சிறைக்கோட்டத்தைத் தரைமட்டமாக்கி, அதன் அழிவுக் குவியல் மீது வால்டேரின் சடலம் வெற்றிச் சின்னமாக ஓர் இரவு முழுவதும் வைக்கப்பட்டிருந்தது. இவ்வாறு உலகம் முழுவதும் சிந்தனையாளர்கள் தங்கள் படைப்புகளுக்காகத் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலும் சரி, சுதந்திர இந்தியா விலும் சரி, எழுத்தாளர்களின் படைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. எழுத்தாளர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பாரதி தலைமறைவாகி புதுவை போகவில்லையா? இலங்கையில் நடந்த இனப்படுகொலையின் போது இலங்கை தமிழ்ப் பத்திரிகையாளர் ஜே.எஸ். திசை நாயகத்துக்கு இருபது ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கொழும்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவில்லையா? கடந்த சில ஆண்டுகளில் பல பத்திரிகையா ளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

எத்தனை அடக்கு முறைகள் வந்தால் என்ன, அடிக்க அடிக்கப் பந்து எழுவது போலவும், அரைக்க அரைக்கச் சந்தனம் மணப்பது போலவும் சிந்தனை யாளர்கள் சிலித்து எழுகின்றனர். அவர்களால் ஆக்கப்பட்ட நூல்கள் இப்போது உலகத்தையே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன.


‘‘அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்களைப் பற்றிய விழிப்புணர்வு பெறுவதற்கும், புரிதல், சகிப்புத் தன்மை போன்றவை மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும் புத்தகம் ஒரு சிறந்த கருவியாக இருப்பதால் ஏப்ரல்-23 உலகப் புத்தக தினமாகக் கருதப்படும்’’ என்று 1995-ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் நடந்த யுனெஸ்கோவின் 28-வது மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது; இதுவே படைப்பாளர்களுக்கான உலக அங்கீகார மாகும்.

‘புத்தகங்களுக்காகச் செலவிடுபவை செலவினங்கள் அல்ல. மூலதனம்’ என்றார் அறிஞர் எமர்சன். எல்லாச் செல்வங்களும் அழியும் தன்மை கொண்டவை; ஆனால், அறிவுச் செல்வம் மட்டுமே வளரும் தன்மை கொண்டது; அதற்கான கருவிகளாக இருப்பவை புத்தகங்களே!’ உலகில் தீமைகளை எதிர்த்துப் போராடும் போர்க்கருவிகளாகவே புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மனிதரின் கடமையாகும்.

நன்றி: தினமணி கட்டுரையாளர் உதயை மு.வீரையன்.17-01-2011
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

செவ்வாய், டிசம்பர் 13, 2011

மோடியா கொக்கா?


வாட்நகர் என்ற சின்னக் கிராமத்தில், மத்தியதரக் குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்தவர் நரேந்திர மோடி. இன்று நாடறிந்த முதலமைச்சர்களில் ஒருவர். பள்ளியில் படிக்கும் போதே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் கவரப் பட்டு அதன் மாணவர் அணியில் தீவிர உறுப்பினராக இயங்கி, கல்லூரியில் காலெடுத்து வைக்கும்போது ஆர்.எஸ்.எஸ்.சின் மாநிலக் குழு உறுப்பினரானார். குஜராத் பல்கலைக்கழகத்தில் பொலிட்டிகல் சயின்ஸ் பாடத்தை விரும்பி எடுத்து அதில் எம்.ஏ. பட்டம் வாங்கியவர்.


1975ல் படிப்பு முடிந்த காலத்தில் எமர்ஜென்சியை எதிர்த்து எழுந்த போராட்டத்தில் இவர் பல புதிய தொண்டர்களைச் சேர்த்து கட்டுக்கோப்பாக இயக்கிய திறமையைக் கவனித்த ஆர்.எஸ்.எஸ்.சின் மேலிடம், பா.ஜ.க.வின் உறுப்பினராக்கி பொறுப்புக்களை கவனிக்கப் பணித்தது. அப்போது தரப்பட்ட முக்கியப் பணிகளில் ஒன்று, சோம்நாத் திலிருந்து அயோத்திக்கான அத்வானியின் ரதயாத்திரை. அதைத் தொடர்ந்து கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரையிலான மற்றொரு ரதயாத்திரை. பயணத் திட்டங்களையும் கூட்டங்களையும் கச்சிதமாகத் திட்டமிட்டு வெற்றியாக்கிக் காட்டியதில் மகிழ்ந்த அத்வானி, 1995ல் இவருக்கு அளித்த பொறுப்பு, கட்சியின் தேசியச் செயலாளர்.

2001ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க.விற்கு ஏற்பட்ட தோல்வியையடுத்து குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த கேசுபாய் படேலைப் பதவி விலகச் சொல்லி, புதிய முதலமைச்சராக மோடியை நியமித்தது கட்சித் தலைமை. இவர் பதவியேற்ற நேரத்தில், சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக பொருளாதாரத்தில் மிக மோசமான நிலையில் இருந்தது குஜராத் மாநிலம். இன்று அது இந்தியா விலேயே பொருளாதார வளர்ச்சியில் (ஆண்டுக்கு 10 விழுக்காடு) முதல் மாநிலம். இந்த மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. மது விற்பனை மூலம் அரசுக்கு வருமானம் வருவதில்லை.


இவர் முதலமைச்சராக பதவியேற்ற ஆறு மாதங்களுக்குள் 2002 பிப்ரவரியில் குஜராத்தில் மதக்கலவரம் வெடித்தது. சிறுபான்மை சமூகத்தினர் மிக மோசமாக பாதிப்புக்குள்ளானபோது மோடி அரசு கை கட்டி வேடிக்கை பார்த்தது என்றும், அந்தக் கலவரத்தை மறைமுகமாக ஊக்குவித்ததென்றும் மற்ற கட்சிகள் இப்போதும் கூறி வருகின்றன. இதையடுத்து எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து பதவியை ராஜினாமா செய்தார். சட்டப்பேரவை கலைக்கப்பட்டு தேர்தல் நடந்தது. 182 இடங்கள் உள்ள சட்டப்பேரவையில் 127 இடங்களை மோடி தலைமையில் பா.ஜ.க. கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது.

இஸ்லாமியரின் எதிரியாகச் சித்தரிக்கப்படும் மோடி, அரசின் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட இந்துக் கோவில்களையும் இடிக்க உத்தரவிட்டவர் என்பது ஊடகங்கள் அதிகம் வெளியிடாத செய்தி. மூன்றே உதவியாளர் களை வைத்துக்கொண்டு பணியாற்றும் கடின உழைப்பாளி. குஜராத்தில் தொடர்ந்து நீண்டகாலம் முதலமைச்சர் பதவியில் இருந்து வருபவர் என்ற பெருமைக்குரியவர் மோடி. இந்த 61 வயது முதலமைச்சர் திருமணம் குறித்து சர்ச்சைகள் நிலவுகின்றன.

குழந்தைப் பருவத்தில் அவருக்கு மணம் செய்து வைக்கப்பட்டது என்றும் ஆனால் அவர் வளர்ந்தபின் மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்கிறார் என்றும் சில தகவல்கள் சொல்கின்றன. வலைப்பூவிலும் (www.narendramodi.com), ஃபேஸ்புக்கிலும் (www.facebook.com/narendramodi), டிவிட்டரிலும் (www.twitter.com/narendramodi) சந்திக்கக் கூடிய ஒரு மாடர்ன் முதலமைச்சர் மோடி.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

வெள்ளி, டிசம்பர் 02, 2011

லோக்பால் என்றால் என்ன?


அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மீது கூறப்படும் ஊழல், பாரபட்சம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஒரு அமைப்புதான், லோக்பால். ஊழலில் ஈடுபடுவோர் மீது, பொதுமக்கள், லோக்பாலிடம் நேரடியாக புகார் அளிக்கலாம். இதன் அடிப்படையில், ஊழல் புகார் கூறப்பட்டவர்கள் மீதான விசராணை, ஒரு ஆண்டுக்குள் முடிக்கப்படும். அடுத்த ஒரு ஆண்டில், வழக்கு விசாரணை முடிவடையும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஊழல் பெருச்சாளி, புகார் கொடுக்கப்பட்ட 2 ஆண்டுகளுக்குள், சிறைக்குள் அனுப்பப்படுவார். லோக்பாலின் அதிகாரங்கள், செயல்பாடுகள் ஆகியவற்றை நிர்ணயிக்கும் சட்டம்தான் லோக்பால் மசோதா சட்டம்.

ஜன்லோக்பால் என்றால் என்ன? 

அரசு தயாரித்த லோக்பால் மசோதாவில் ஓட்டைகள் இருப்பதாக கூறி, ஊழலை ஒழிக்கும், முழுமையான மசோதாவாக தயாரிக்கப்பட்டதுதான், ஜன்லோக்பால் மசோதா. பிரதமர், நீதித் துறையில் உயர் பொறுப்பில் இருப்பவர்கள், அரசு அதிகாரிகள் என ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும், இந்த சட்ட மசோதாவின் கீழ் விசாரிக்க முடியும். ஜன் என்ற வார்த்தைக்கு பொது மக்கள் என்று அர்த்தம். இந்த மசோதாவை நிறைவேற்றதான், ஹசாரே உண்ணாநிலையில் ஈடுபட்டார். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான நபரால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்து, அந்த இழப்புக்கான நஷ்ட ஈடு பெறலாம் என்பதும் இந்த சட்டத்தில் உள்ள அம்சமாகும்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.