உலக அரங்கில் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் முற்றுப் புள்ளியாகி விட்டதா என்ற பொதுக் கேள்வியிலிருந்து தொடங்குவோம். உலக அரசியல் பொருளாதார வல்லரசுகள் அவ்வப்போது புதிய அரசியல் ஒழுங்கைத் தோற்று வித்து வருகின்றன. உலகின் இயங்கு திசை வல்லரசுக் குழுக்களின் இயங்கு திசையாகவே உள்ளது. அதை மக்களின் இயங்கு திசையாக மாற்ற வேண்டிய கடப்பாடு நமக்குள்ளது.
தெற்கு சூடான் விடுதலை பெற்ற (2011) அண்மைக் காலம் வரை, உலக அரங்கில் தேசிய இன விடுதலைப் போராட்டம் முற்றுப் பெறாத நிகழ்வு என்பதையே காட்டுகிறது. 1990-களில் ஸ்லேவேனியா, கொசாவோ, மாசிடோனியா, உக்ரைன், ஜார்ஜியா, டிராண்டஸடிரியா, போஸ்னியா, எரித்ரியா, மால்டோவா, கிழக்கு திமோர் போன்ற நாடுகள், 2000-ங்களில் மாண்டிநிக்ரோ, தெற்கு ரேசடியா, தெற்கு சூடான் என்ற நாடுகள் தேசிய இன விடுதலைக்குச் சான்றாய் நின்றன.இன்றும் நடைபெறுகிற காஷ்மீர், நாகலாந்து, மணிப்பூர், மேற்கு இரியான், திபேத்து, ஈழம் போன்ற இவற்றுக்குள் கூர்மை பெற்று முன்னணியில் இருக்கும் போராட்டம் ஈழப் போராட்டம்.
தமிழீழம் சரியா, பிழையா என்ற விவாதத்தை வரலாறு கடந்து விட்டது. தமிழினத்தைப் படுகொலை செய்த சிங்கள அரசுடன் இனியொருபோதும் இணக்கப் போக்கு சாத்தியமில்லை. இனப் படுகொலைகளை நடத்திய இடத்திலிருந்து இன விடுதலையின் அடுத்த நகர்வைத் தொடங்க வேண்டும். இதுதொடர்பில்,``வரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது,இலங்கைத் தமிழர்களைப் போல் இனப்படுகொலைக்கு ஆளான எந்த மக்கள் குழுவும், தங்களுக்கென்று சுதந்திரமான ஒரு நாட்டை உருவாக்கிக் கொண்ட பிறகுதான், அதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர்.
கடந்த சில மாதங்களில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் வன்னியில் படுகொலை செய்யப்பட்டபோது எந்த ஒரு நாடும் அந்த வெறித்தனமான படுகொலை நிகழ்வைத் தடுக்க முயலவில்லை. 1948-இனஅழிப்பு எதிர்ப்பு ஒப்பந்தத்தின்படி, எல்லா நாடுகளும் தாங்கள் செய்ய வேண்டிய கடமையைச் செய்யத் தவறிவிட்டன. எனவே இலங்கை அரசிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, தனிநாடு ஒன்றை உருவாக்கிக் கொள்வதே இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்புடையது.,
பன்னாட்டுச் சட்ட திட்டங்களின்படி, இன அழிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் தனி நாடு ஒன்றை உருவாக்கிக் கொள்வதே பயனுள்ள தீர்வும், உரிய இழப்பீடும் ஆகும்’’ என்று பிராசிஸ் பாய்ல்ஸ் கூறியதை மனங்கொள்ளவேண்டும். (பேராசிரியர் பிரான்சிஸ் பாய்ல், உலக மனித உரிமைகள் அமைப்பின் (Amnesty International)) முன்னாள் உயர்மட்டக்குழு இயக்குநர், இல்லினாய்ஸ் பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர்)
நாம் ஏற்கிறோமோ இல்லையோ ஒரு உண்மையைப் பதிவு செய்தாக வேண்டும். எந்த ஒரு போராட்டமும் அறவழிப் பாதையில் இருக்கிறபோது உலகில் யாரும் கவனம் கொள்வதில்லை ஆயுதப் போராட்ட வடிவெடுக் கையில் மாத்திரமே சர்வதேச கவனமும் தலையீடும் பெறுகிறது.
|
பிரான்சிஸ் பாய்ல் |
ஈழத்தமிழர் விடுதலைப் போர், 30 ஆண்டுகள் அறவழியில் அதுவும் இந்தியாவின் காந்தி காட்டிய சத்தியாக்கிரக வழியிலேயே நடந்தது. மிகப் பெரிய சனநாயக பூமி என்று சொல்லப்பட்ட இந்தியாவும் அது காலம் வரை கண்டு கொள்ளவில்லை. காந்தீய வழிப் போராட்டத்தை அங்கீகரித்து, அப்போதே பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்தி தீர்வு காணும் முன்னெடுப்பை இந்தியா செய்திருக்க முடியும்.
1972-லும் அதன் பிறகும் ஆயுதம் ஏந்தி சிறு சிறு அளவில் போராட்டத்தைத் தொடங்கிய பின்னர்தான், 1983ல் இலங்கையில் நடந்த இனப்படுகொலையின் பின்தான் இந்தியா தலையிடத் தொடங்கியது. இந்தத் தலையீடும் சுயநலன் அடிப்படையிலேயே அமைந்தது.
``இலங்கைத் தீவு இரு அரசுகளாக இருப்பதைவிட, ஓர் அரசாக இருக்கவிட்டு, அதனைக் கையாளுவதே இந்தியாவின் எதிர்கால நலனுக்குச் சாதகமானது. எனவே இந்தியா தமிழீழக் கோரிக்கையை தமிழ் மக்களின் பிரச்சனைகளை தனது நலனுக்கு உகந்த அளவில் ஓரளவு தீர்த்து வைப்பதும், தனது தலைமையை இலங்கை அரசை ஏற்க வைப்பதுமே இந்தியாவின் பிரதான நோக்கமாய் இருக்கிறது.
தான் விடுதலைபெற்ற கையோடு, மக்களுக்கான விடுதலைஅரசியலிலிருந்து இந்தியா விடுதலை பெற்றுக்கொண்டது. ஒடுக்கப்பட்ட மக்கள், நாடுகள், எங்கெங்கு எழுச்சி பெறுகிறார்களோ அதற்குத் துணைசெய்வது என்ற நோக்கம் நேரு காலத்தில் குரல் அளவில் இருந்த ஆதரவும் பிற்காலத்தில் ஏறக்குறைய இல்லாமல் போய்விட்டது.
ஆனால் விடுதலை பெற்றதும்,பிடல் காஸ்ட்ரோ வின் தொடக்க கால கியூபா, போர்ச்சுகீசியக் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த ஆப்பிரிக்க நாடுகளான கினிபிஸ்ஸா, அங்கோலா ஆகிய நாடுகளின் விடுதலைக்கு பொருளாதார ஆயுத,மருத்துவ உதவிகள் செய்து துணை நின்றது.
அன்றைய கியூபாவுக்கும் மே 28, 2009-ல் ஐ.நா மனித உரிமை அவையில் இலங்கைக்கு ஆதவராய் தீர்மானத்தை முன்மொழிந்த கியூபாவுக்கும் இடையிலான வெளி 50 ஆண்டுகள் மட்டுமல்ல, இனக் கொலைக்குத் துணை போன தலைகீழ் மாற்றமும்தான்.
ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்தியா தொடர்ந்து கேடு தருகிற நிலைப் பாடுகளையே எடுத்துவந்துள்ளது.1983 இலங்கை இனப் படுகொலையைக் கண்டித்து, ஐ.நா.துணைக்குழுக் கூட்டத்தில் இதயமுள்ள நாடுகளின் தலை வர்கள் பலர் பேசினர். ஐ.நா.வின் இந்தியப் பிரதிநிதி சையத் மசூத்,
’’இலங்கையில் உள்ள நிலைமைகள் குறித்து ஐ.நா.அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்கக்கூடாது’’ என்று பேசினார். அப்போதைய உலக முக்கியத்துவமுள்ள பிரச்சினைகள் பற்றி ஐ.நா.அவையில் பேசிய பிரதமர் இந்திராகாந்தி 1983 படுகொலை பற்றிப் பேசவில்லை. பேசும் அளவுக்கு முக்கியத்துவமுடையவை அல்ல அப்படுகொலைகள் என்று கருதினார் போல.
தனக்கு வந்தால் தெரியும் தலைவலியும் காய்ச்சலும் என்பது போல இலங்கை அமெரிக்கச் சார்பு நிலை எடுத்ததும், அதிலிருந்து இலங்கையை நீக்கம் செய்வதற்காக ஜெ.ஆர்.ஜெயவர்த்தனா ஆட்சியில் உள்நாட்டு நெருக்கடி களைத் தோற்றுவிப்பதற்காக போராளிக் குழுக்களுக்கு பயிற்சியும் ஆயுதங் களும் அளித்தது இந்தியா.
இலங்கை அரசு இனவாதத்தை சாக்காகக் கொண்டு 1970-களில் மேலைத் தேசங்களுடன் கை கோர்த்து இந்திய எதிர்ப்பில் தீவிரமாக நின்றது. இலங்கையின் எதிர்க்கட்சிகளும் இனவாதத்தை மூலதனமாக்கியே அரசியலில் ஜீவிக்க முடிந்தன. இப்பிராந்தியத்தில் வல்லரசு ஆக உருவாகிக் கொண்டிருந்த இந்தியா தனது நோக்குநிலையிலிருந்து தீர்வுக்கு வர வேண்டியிருந்தது.
முரண்பாடுகள் இராணுவப் பரிமாணத்தினாலேயே தீர்க்கப்படக்கூடியவனவாக முறுகல்நிலை கொண்டன. பலாத்காரத்தைத் தவிர வேறு வழியில் தீர்க்க முடியாதெனக் கருதி, முன்னர் போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சியும் ஆயுதங்களும் அளித்த இந்தியா 1987-ல் இலங்கை மீது இராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. அமெரிக்கா முழு இலங்கையையும் இழந்துவிடத் தயாரில்லை.
இதுவரை காலமும் இருந்ததில் இருந்து சிறிய விட்டுக் கொடுப்பைச் செய்து பிரச்சினையை சமரசப்படுத்த அமெரிக்க தயாரானபோது, ஜெ.ஆர்.ஜெய வர்த்தனாவும் அதனைப் புரிந்துகொண்டார். சமரசத் தீர்வை சாகசமான வார்த்தைகளில் அமெரிக்கா வரவேற்றது என்பது இங்கு கூர்மையாகக் கவனிக்கப்படவேண்டியது.
’’இந்தியாவுக்கு வயது வந்துவிட்டது. இலங்கைப் பிரச்சினையில் இந்திய அரசு எடுத்த நிலைப்பாட்டால் அது தன்னை ஒரு பிராந்திய வல்லரசாக மாற்றிக் கொண்டுவிட்டது. இந்தியாவின் இந்த இராணுவ நடவடிக்கையை அமெரிக்கா வரவேற்கிறது’’ என்ற வார்த்தைதளில் வெளிப்படுத்தியது. அந்த நேரத்தில் வளைகுடா நாடுகளில் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட நெருக்கடியால் இலங்கைப் பிரச்சினையில் குறைந்தபட்ச உடன்பாட்டுக்குப் போக வேண்டிய தேவை ஏற்பட்டது.
ஆனால் இந்தியாவின் இராணுவ நடவடி.கைக்குப் பின் இலங்கை இந்திய அரசுகளுக்கிடையே இடம் பெற்ற ஒப்பந்தமானது, கைவிலங்கு உடைக்கப் புறப்பட்டவர்களுக்குக் கால் விலங்கும் மாட்டிய கதையாக ஆனதாக தமிழர்களால் சொல்லப்பட்டது.
பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களை நிரந்தமாக இணைக்கும் காலம் வரை தற்காலிகமாக அவை இணைக்கப்பட்டு ஓர் அலகாகச் செயற்படும் என இந்தியா இலங்கை ஒப்பந்தத்தில் காணப்பட்டது. தற்காலிகமாக அல்ல, நிரந்தரமான இணைப்பே என இதனை பிரபாகரன் வலியுறுத்தினார்.
அப்போது பிரபாகரகன் பக்கமாக நெருங்கி வந்து ராஜிவ் காந்தி காதோடு காது வைத்ததுபோல்`` இலங்கையின் சிங்கள தீவிர வாதிகளையும் சிங்கள மக்களையும் திருப்திப்படுத்துவதற்குத்தான் அப்படிச் சொல்ல வேண்டியிருக் கிறது. ஆனால் நிரந்தர இணைப்புத்தான்’’ என்று கூறினார்.
ராஜிவ் சொன்னதை அப்போதைக்கு ஏற்றுக்கொண்ட பிரபாகரன் தன் தளபதி களுக்கும், போராளிகளுக்கும் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார். விடுதலைப் புலிகள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து இரு போராளிகள் குப்பி கடித்து இறந்தார்கள். நிரந்தர இணைப்பு என்று உறுதியளித்த ராஜிவ் பின்னாளில் இதுபற்றி அக்கறை கொள்ளவில்லை.
இப்போது கூட இந்தியத் தலைமைகள் இந்த ஒப்பந்தம் பற்றிப் பேசுவதில்லை. வடக்கு கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாக இணைத்து ஒரு முதல்வரை நியமிக்கவேண்டியுள்ளது எனவும், 3 பெயர்களைப் பரிந்துரை செய்யுமாறும் இந்தியத் துhதராக அப்போதிருந்த தீட்சித் பிரபாகரனிடம் கேட்டுக் கொண்டார்.
``மூன்று பெயர்கள் அல்ல, ஒரு பெயர்தான் கொடுக்க முடியும் என்று பிரபாககரன் மறுப்புத் தெரிவித்தார்.`` மூன்று பெயர்கள் கொடுங்கள். அதில் முதலாவது பெயரையே தெரிவு செய்வோம்’’ என தீட்சித் உறுதியளிக்க புலிகள் அவ்வாறே செய்தார்கள்
முதலாவது பெயராக கிழக்கு மாகாண மட்டக்களப்பைச் சேர்ந்த, அரசின் உயர்நிலை அதிகாரியாக இருந்த பத்மநாதன், மூன்றாவதாக யாழ்ப் பாணத்தைச் சேர்ந்த சிவஞானம் பெயர்கள் குறித்துத் தரப்பட்டன. மூன்றாவதாக இருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவஞானத்தையே ஜே.ஆர். ஜெயவர்த்தனா முதல்வராக இராஜதந்திரமாகத் தேர்வு செய்தார். கிழக்கு மாகாணம் தொடர்ந்து புலிகளால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்பதை உறுதிப்படுத்த ஜே.ஆர்.செய்த திருவினையை இந்திய அரசும் ஏற்றுக் கொண்டது.
இப்படியான நிகழ்வுகள் இந்தியா மீதான நம்பிக்கையின்மையை பிரபாகரனுக்கும் புலிகளுக்கும் ஏற்படுத்தியது. புலிப் போராளிகள் மட்டுமல்ல, பிற போராளிக் குழுக்களும் இந்தியா ஏமாற்றிவிடும் என்று உணர்ந்தே இருந்தனர்.
இந்தியாவின் பிராந்திய முக்கியத்துவத்தை, அனைத்துப் போராளிக் குழுக்களும் விளங்கிக் கொண்டிருந்தனர். மறுத்தார்களில்லை. பிரச்னை என்னவென்றால் இந்தியாவின் ராஜதந்திரிகளும் கொள்கை வகுப்பாளர்களும் ஜே.ஆ.ரின் தந்திரமான சொற்களால் இழுபட்டுப் போய்விட்டனர்.
பிரச்னை இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது பற்றியது. ஒப்பந்த ஷரத்துக்களில் கூறப்பட்டதற்கு மாறாக ஜே.ஆர்.செய்துகொண்டு வந்த எல்லாவற்றையும் இந்தியா ஏற்றுக்கொண்டது. சண்டே லீடர் வார இதழுக்கு அளித்த பேட்டியில் இந்தியத் தூதர் தீட்சித்., ``நான் உண்மையைச் சொன்னால் நீங்கள் (சிங்களவர்கள்) எல்லோரும் என்னை எதிர்ப்பீர்கள். ஒப்பந்தத்தை முதலில் மீறியது இலங்கைதான். தமிழர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்று தெரிவித்தார்’’
Sunday Leader:Sep 4 1994
Tamil hopes not met.
Dixit blames the singalese for breaking of India Lanka accord.
இந்தியா தனது பிராந்திய நலன்களுக்காக ஜே.ஆர்.ஜெயவர்த்தானவும், இராஜ பக்ஷேக்களும் இழுத்த இழுப்புக்கெல்லாம் போய்க் கொண்டிருந்தார்கள் என்பதற்கு இதைவிடவேறு என்ன ஆதாரம் வேண்டும்?
தொடர்ச்சி நாளை மறுநாள்...,
கட்டுரையாளர் பா.செயப்பிரகாசம்.
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.