நினைத்தவுடன் பெட்ரோல் விலையை உயர்த்துவது இந்தியாவில் சகஜமான ஒன்று. ஆனால், உலகில் பல நாடுகள் பெட்ரோல், டீசல் விலையை தங்கள் கட்டுப்பாட்டுக் குள் வைத்திருக்கின்றன. அப்படி கட்டுக்குள் வைத்திருக்கும் நாடுகளில் பிரேசிலும் ஒன்று.
பெட்ரோலின் பயன்பாட்டை குறைக்கவும், அதில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்தவும், 1927-ம் ஆண்டே எத்தனாலை வாகன எரிபொருளாக விற்பனை செய்யத் தொடங்கிவிட்டது பிரேசில். இங்கு 1942-ல் எத்தனால் உற்பத்தி 16 ஆயிரம் டன்னாக இருந்தது. இன்று 2.5 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. 2019-ல் இதை 5 கோடி டன்னாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
உலகிலேயே கரும்பு உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்திலும், இந்தியா 2-ம் இடத்திலும் உள்ளன. இந்தியாவில் எத்தனால் உற்பத்தி 4.8 லட்சம் டன்தான். இதன் உற்பத்தியை பெருக்குவதற்கு இந்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் இந்த வருட இறுதிக்குள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.100 ஆகவும், டீசல் விலையை ரூ.70 ஆகவும் உயர்த்த திட்டமிட்டுள்ளது.
பிரேசிலில் ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் எத்தனால் பம்ப் இருக்கும். வாகன ஓட்டிகள் தங்கள் விருப்பம் போல் பெட்ரோலுடன் எத்தனால் கலந்து கொள்ளலாம். மேலும் அங்கு எத்தனாலில் மட்டுமே ஓடும் வாகனங்களும் உண்டு. எத்தனாலின் விலையும் லிட்டருக்கு ரூ.20 தான். இது மட்டுமன்றி எத்தனால் அல்லது பெட்ரோலில் ஓடும் வாகன என்ஜின்களையும் உற்பத்தி செய்கின்றனர்.
பெட்ரோலுடன் 24 % எத்தனால் கலந்து ஓட்டலாம். இதற்கு வாகனத்தில் என்ஜினில் எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை. இதேபோல் எத்தனால் 85 %, பெட்ரோல் 15 % கலந்து பயன்படுத்தலாம். இதற்கு என்ஜினில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். இதுபோக 100 % எத்தனாலில் ஓடும் வாகனங்களும் உண்டு. பிரேசிலில் உள்ள போர்டு நிறுவனம் 2 வகையான என்ஜின்களையும் தயாரித்து வருகிறது.
இந்தியாவில் எத்தனால் விலையை லிட்டர் ரூ.27 என்று அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் ஒரு டன் கரும்புக்கு ரூ.2,500 கொடுக்க வேண்டும் என்றால், எத்தனாலை லிட்டர் ரூ.32-க்கு விற்க வேண்டும் என்கிறார்கள். இதுதவிர மத்திய அரசின் வரி 16% விற்பனையாளர் கமிஷன் 5 %, போக்குவரத்து செலவு 50 பைசா இதர செலவுகள் 53 காசு ஆக மொத்தம் ஒரு லிட்டர் எத்தனால் ரூ.40 ஆகும்.
அமெரிக்கா போன்ற நாடுகள் ஒரு லிட்டர் எத்தனாலுக்கு ரூ.6 மானியமாக கொடுக்கின்றன. இந்தியாவிலும் இதுபோல் செய்தால், எத்தனால் உற்பத்தி அதிகமாகும். மக்களும் 70 ரூபாய்க்கு பெட்ரோல் போடுவதை விட 24 % எத்தனால் கலக்கும் போது லிட்டருக்கு ரூ.9 குறையும். 85 % எத்தனாலை கலந்தால், ரூ.30 குறையும். சுற்றுச்சூழல் சீர்படும்.
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக