எங்கும் ஒளிவெள்ளம்! உற்சாகம் பொங்க திரண்டிருந்த ரசிகர்கள்! கலை எழில் கொஞ்சிய ஏற்பாடுகள்! ஒலிம்பிக் போட்டியை 3ஆவது முறையாக நடத்தும் பெருமை பெற்றுள்ள லண்டன் மாநகரத்தில்தான் இந்த கவின்மிகு காட்சிகள்! குழந்தைகளின் பாடலுடன் தொடங்கிய விழாவில், ஒலிம்பிக் சின்னமான ஐந்து வட்டங்கள் ஒளிவெள்ளத்தில் வானில் ஒன்று சேர்ந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.
இதனையடுத்து பிரிட்டனின் எலிசபெத் அரசி மைதானத்துக்கு வருகை தந்ததும் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்கம் முறைப்படி அறிவிக்கப்பட்டது. அப்போது அரங்கத்துக்குள் பிரிட்டனின் தேசியக் கொடி எடுத்து வரப்பட்டு ஏற்றப்பட்டது. தொடர்ந்து ஏராளமான கலைஞர்களின் ஆடல், பாடல்களுடன் கலை நிகழ்ச்சிகளும் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சிறுவர்களையும் இளைஞர்களையும் கவரும் வகையில் நடைபெற்ற இக்கலை நிகழ்ச்சிகள் ரசிகர்களின் கண்களுக்கும் கருத்துக்கும் விருந்து படைத்தன.
அதன்பின்னர் போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளின் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மைதானத்துக்குள் அணிவகுத்துச் சென்றனர். முதலாவதாக, ஒலிம்பிக் போட்டிகளின் தாயகமான கிரீஸ் நாட்டு வீரர்கள் தங்கள் தேசியக் கொடியுடன் அணிவகுத்துச் செல்ல, பின்னர் ஒவ்வொரு நாட்டு வீரர்களாக கம்பீரமாக அணிவகுத்துச் சென்றனர். மல்யுத்த வீரர் சுஷில்குமார் நமது மூவர்ணக் கொடியை மிடுக்குடன் ஏந்திச் செல்ல, அவரது பின்னால் இந்திய வீரர்களும் வீராங்கனைகளும் அணிவகுத்து சென்றபோது, ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
முடிவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் பிரிட்டன் வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதனையடுத்து பன்னாட்டு ஒலிம்பிக் குழுத் தலைவர் ஜாக்குவஸ் ரோக் தொடக்க விழாவின் தலைமை உரையாற்றினார். பின்னர் பிரிட்டன் அரசி ஒலிம்பிக் போட்டிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, தேம்ஸ் நதியின் வழியாக ஒளிவெள்ளத்திற்கிடையே படகில் கொண்டுவரப்பட்ட ஒலிம்பிக் சுடரை இங்கிலாந்து கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் பெற்றுக் கொண்டார். இதன்பின்னர் ஒலிம்பிக் சுடர் வண்ணமயமான திடலின் நடுவே ஏற்றப்பட்டது.
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்
நீங்கள் மிகப் பெரிய அறிஞர், விஞ்ஞானி என்று இந்த வலைப்பூவுக்கு வந்தவுடனே தெரிந்துகொண்டேன். தாங்கள் உலகெங்கும் புகழ்பெற்று, பட்டொளி வீசிப் பறக்கும் நாளுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறேன். மேலே போகும்போது சொல்லிவிட்டுப் போங்கள், தங்களை ரோல் மாடலாகக் கொண்டு நானும் பின்னாலேயே வந்துவிடுகிறேன். வாழ்க நின் புகழ்...
பதிலளிநீக்கு