லண்டன் ஒலிம்பிக் போட்டி இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. 4 மணிநேரம் நடைபெற்ற தொடக்க விழாவின் போது ஒளி வெள்ளத்தில் மிதந்த மைதானத்தில் ஆடல், பாடல்களுடன் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் இசை நிகழ்ச்சிகளும் லட்சக் கணக்கான ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தின. அடுத்த மாதம் 12 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் நீண்ட நெடிய வரலாறு சுருக்கமாக...!
வரலாறு :
கிரேக்க நாட்டிலுள்ள ஒலிம்பியா நகரில் கி.மு. 776 ல் நடந்த விளையாட்டு போட்டியே முதலாவது ஒலிம்பிக். இப்போட்டியை அதிகார பூர்வமாக ஏற்றுக் கொள்ள 500 ஆண்டுகள் ஆனது. ஒலிம்பிக்கில் முதலில் தடகள போட்டிகள் மட்டுமே நடத்தப் பட்டன. பின்னர் மல்யுத்தம், குத்துச்சண்டை, குதிரை யேற்றம், போன்ற விளையாட்டுகளும் சேர்க்கப்பட்டன. பிற்காலத்தில், ரோம் மன்னர் முதலாம் தயோடோசியஸ் ஒலிம்பிக் போட்டிகளை தடை செய்தார்.
பல நூற்றாண்டுகள் நடத்தப்படாமல் இருந்த ஒலிம்பிக் போட்டிகளை மீண்டும் நடத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, 1894 ஆம் ஆண்டு ஒலிம்பிக் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு முதலாவது நவீன ஒலிம்பிக் போட்டி கிரேக்கத் தலைநகர் ஏதென்சில் 1896ம் ஆண்டு நடத்தப்பட்டது. தொடக்க காலங்களில், ஒலிம்பிக் போட்டிகள் உலக மக்களால் அறியப் படாமல் இருந்தது.
1924ம் ஆண்டு பாரீஸ் நகரில் நடைபெற்ற போட்டிகள்தான் முழுமையான ஒலிம்பிக் போட்டிகள் எனலாம். அதன் பின்னர், நடத்தப்பட்ட ஒலிம்பிக் போட்டிகளில் நிகழ்த்தப்பட்ட பல சாதனைகள் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தன. குறிப்பாக, கார்ல் லூயிஸ், செர்ஜி புப்கா, மைக்கேல் ஜான்சன், உசேன் போல்ட் ஆகிய வீரர்களின் சாதனைகள் மறக்க முடியாதவை. 1940 - 44 ஆண்டுகளில் உலகப்போர் காலத்தில் மட்டும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவில்லை.
மூன்றாவது முறையாக லண்டனில் :
2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி 3வது முறையாக லண்டனில் நேற்று (28-7-12) நள்ளிரவு தொடங்கியது. இதில் 204 நாடுகளை சேர்ந்த10 ஆயிரத்து 500 வீரர் வீராங்கனைகள் பதக்கங்களை வெல்லும் கனவுடன் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 81 பேர் பங்கேற்றுள்ளனர். லண்டன் ஒலிம்பிக்கை பிரிட்டன் ராணி 2 ஆம் எலிசபெத் தொடங்கி வைத்தார்.
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக