விகடன் இணையதளத்தில் வெளிவந்த எனது கட்டுரை
பொதுவாழ்வில் ஈடுபட்டு ஜனநாயகத்தை தழைத்தோங்க செய்யவேண்டும், சமூகத்திற்கும், மக்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணிய காலங்கள் மறைந்து, அரசியலில் காலடி எடுத்து வைத்தவுடன் ஊழல் செய்து கோடி கோடியாய் சம்பாதிக்க வேண்டும், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற மனநிலை இன்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையை இன்றைய தமிழக தேர்தல் களம் நமக்கு நன்கு உணர்த்துகிறது.
மக்கள் நலனுக்கான கூட்டணி என்று தொடக்கத்தில் கூறி வந்த, அதன் தலைவர்கள் தற்போது, எந்தப் பாதையை நோக்கிச் செல்கிறோம் என்பதை அறியாமல் ஒவ்வொரு நாளையும் கடந்து செல்கிறார்கள். அதிமுகவும், திமுக.வும் வேண்டாம் என்றும், தமிழகத்தில் நல்லாட்சி ஏற்பட வேண்டும் என்ற வேட்கையுடன் உருவான மக்கள் நலக் கூட்டணியையும், அதன் தலைவர்களையும் பொதுமக்களாகிய வாக்காளர்கள் விசித்திரமாக பார்க்கிறார்கள்.
கேப்டன் விஜயகாந்த் அணியின் ஒருங்கிணைப்பாளரான வைகோ, பெரியண்ணன் தோரணையில் எதிர்க்கட்சிகளை மிகவும் கீழ்த்தரமாக வசைப்பாடுகிறார். இதற்கு ஊடகங்களும் விதிவிலக்கல்ல. ஆதாரமில்லாமலும், அருவறுக்கத்தக்க வகையிலும் தொடர்ந்து கூறி வரும் வைகோவின் குற்றச்சாட்டுகளில் எந்தளவிற்கு காழ்ப்புணர்ச்சியும், சுயநலமும் கலந்திருக்கிறது என்பதை, சமூக வலைத்தளங்களில் பொதுமக்களால் விமர்சிக்கப்படுதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
பெரியார், அண்ணாவின் பாசறையில் வளர்ந்த வைகோ, ’கருணாநிதி நாகூசும் வகையில் பேசுகிறார் என்றால், வைகோ எப்படிப்பட்ட அரசியல்வாதியாக இருக்க முடியும் என்ற கேள்வி, அவரது கட்சியினர் இன்றி, பிற கட்சிக்காரர்களைத் தாண்டி, நடுநிலையாளர்களிடம் எழுகிறது.
திரு வைகோ அவர்களே, இந்த தேர்தல் களத்தில் நீங்கள் ஆற்றி வரும் அரும்பணிகளை பார்க்கும்போது,உங்களோடு கைகோர்த்துள்ள பிற கட்சிகளை நீங்கள் கூண்டோடு காலி செய்யப் போகிறீர்கள் என்பது, விஜயகாந்துக்கோ, இடதுசாரிகளுக்கோ, திருமாவளவனுக்கோ தெரியாமல் போகலாம். உண்மையை உணரும்போது, அவர்கள் உங்களை கைவிட்டுவிடுவார்கள்.
எல்லாவகையிலும் சாதகமான திமுக கூட்டணியை விட்டு விஜயகாந்தும், உங்களின் அனுபவம் நிர்வாகத்திறமை இவற்றை நம்பி மக்கள் நலக்கூட்டணியில் உள்ள இதர கட்சிகளும் உங்களுடன் கூட்டு சேர்ந்திருக்கின்றன. அவர்களுக்கு துரோகம் இழைக்காதீர்கள் வைகோ.
அரசியலில் வெற்றியோ, தோல்வியோ, தொழிலாளர் வர்க்கத்திற்காக, விளிம்பு நிலை மக்களுக்காக, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரலுக்கு குரல் கொடுத்து வரும் இடதுசாரிகளுக்கோ, திருமாவளவனுக்கோ விஜயகாந்துக்கோ வெற்றி தேவைப்படும். ஆனால் கடந்த காலங்களில் நீங்கள் அந்த இலக்கை நோக்கி ஓடியவரில்லை. உங்களின் பேச்சும் செயலும் உங்களை நம்பி வந்த அவர்களுக்கு வெற்றியை கடினமாக்குகிறது.
ஆனால் உங்களுக்கு வெற்றி இப்போதைக்கு தேவையில்லை. பக்குவமும், பிறரை மதித்து, அனுசரித்துப் போகும் குணமும்தான் தேவை. கால்போன போக்கில் போகாதீர்கள். மனம் போன போக்கில் செயல்படாதீர்கள். எதிர்க்கட்சிகளை கருத்து ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் விமர்சித்து தேர்தல் கால இலக்கையும், அரசியல் பயணத்தையும் தொடருங்கள் வைகோ. அதைவிடுத்து, ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதும், பிறர் மீது எரிந்து விழுவதும், இலக்கில்லாமல் பயணிப்பதும் எஞ்சிய அரசியல் வாழ்க்கைக்கு ஒத்து வராது.
-ஜி.எஸ்.பாலமுருகன், (மயிலாடுதுறை)
http://www.vikatan.com/news/vasagar-pakkam/62089-control-yourself-mr-vaiko.art
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக