செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

வியாழன், ஜனவரி 26, 2012

இலவச திட்டங்கள் நன்மையா-தீமையா?



வாய்ப்புகள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற அடிப் படையில் சமூகத்தில் நலிவடைந்த பிரிவினருக்காக உருவாக்கப்பட்ட வையே இலவச திட்டங்கள். அரசு வழங்கும் சலுகைகள், மானியங்கள் மற்றும் இடஒதுக்கீடுகள் போன்றவையும் இலவச திட்டத்தின் வேறு வடிவங்களே. இத்திட்டங்கள் ஏதோ இந்தியாவில் மட்டுமே நடைமுறையில் இருப்பதாக எண்ணிவிட வேண்டாம்.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் இலவச திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அங்குதான் வேலை வாய்ப்பற்றோருக்கு, முதியோருக்கு என இலவச திட்டங்கள் முதலில் அறிமுகமாயின. இன்னும் சொல்லப்போனால், வேளாண்மைக்கு இந்தியாவை விட அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் சலுகைகளும், மானியங்களும் வாரி வழங்கப்படுகின்றன.

நாட்டின் முதுகெலும்பாகவும், மனிதனுக்கு ஜீவாதாரமாகவும் விளங்கும் விவசாயம், அரசு வழங்கும் சலுகைகளாலும், மானியங்களாலும்தான் இன்று உயிர் பிழைத்திருக்கிறது. இலவச மின்சாரம், இலவச மோட்டார் , விதை, உரம் முதல் டிராக்டர் வாங்குவது வரை என அனைத்திற்கும் மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்பட்டாலும் விவசாயத்தால் தொழில்துறையுடன் போட்டியிட முடிய வில்லை.

நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழையை நம்பியே உள்ள விவசாயம், லாபம் தரும் தொழிலாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளாததால் நகரம் நோக்கிய மக்களின் படையெடுப்பைத் தடுக்க முடியவில்லை. இந்த நிலையில், சலுகைகளும், மானியங்களும் இல்லாத விவசாயத்தை கனவில் கூட நினைத்துப் பார்க்க இயலாது.



நியாயவிலைக் கடைகளில் அரசு வழங்கும் மலிவு விலை அரிசி, நாட்டில் பசிப்பிணியைப் போக்கி பட்டினிச் சாவுகளை குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. காமராஜரின் மதிய உணவுத்திட்டம் தமிழகத்தில் கல்விப் புரட்சியை உருவாக்கியது என்றால் அது மிகையாகாது. உண்மையில், மிகவும் பின்தங்கிய மக்களில் பலர் தங்களது குழந்தைகளை மதிய உணவுக்காகவே பள்ளிகளுக்கு அனுப்பினார்கள்.

இன்றைய சத்துணவுத் திட்டம் காமராஜர் கொண்டு வந்த மதிய உணவுத்திட்டத்தின் பரிணாம வளர்ச்சியே. இதைப் பின்பற்றியே, கல்வி உதவித்தொகை, இலவச பாடப்புத்தகங்கள், இலவச சீருடைகள் என பல்வேறு திட்டங்கள் மாணவர்களை பள்ளிகளை நோக்கி ஈர்க்க செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இடஒதுக்கீடு என்ற ஒன்று இல்லை யென்றால், சமூகத்தில் பின்தங்கிய ஏழை மக்களுக்கு மருத்துவம், பொறியியல் போன்ற உயர் படிப்புகள் எட்டாக் கனியாகவே இருந்திருக்கும். பேய், சாத்தான் போன்ற மூடநம்பிக்கைகளை ஓட்டியதில் பெரியாரின் சீர்திருத்தக் கருத்துகளைப் போல, அரசு மருத்துவ மனைகளுக்கும் முக்கிய பங்கு உண்டு.

இன்று ஒரு குழந்தை திடீரென மூச்சு, பேச்சின்றி அமைதியாக இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு விடுகிறது. யாரும் முதலில் சாமியார்களிடம் செல்வதில்லை. அதிர்ச்சியால் ஏற்படும் மனப்பிறழ்வு, பயம் போன்ற போபியாக் களுக்குக் கூட மக்கள் அரசு மருத்துவமனைகளை நாடத் தொடங்கியிருப்பது அது கட்டணமில்லா சேவை என்பதால்தான்.

இன்று அரசு வழங்கும் காப்பீட்டுத் திட்டங்களால் அப்பல்லோ போன்ற உயர்தர மருத்துவமனைகளில் ஏழைகளும் சிகிச்சை பெறுவது சாத்தியம் என்றாலும், இதற்காக தனியார் நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.500 கோடியை அள்ளி வழங்கும் தமிழக அரசு, அதற்குப் பதிலாக அரசு மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்தியிருக்கலாம். குறைந்தபட்சம், இத்திட்டத்தை பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் வாயிலாக செயல்படுத்தி இருக்கலாம்.


இன்று பெரும்பாலானோரின் விமர்சனத்திற்கு ஆளாகியிருப்பது இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் திட்டம். இத்திட்டம் கண்ணுக்குத் தெரியாமல் ஒரு சமூக மாற்றத்தை உருவாக்கி வருவதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. நமது குழந்தைக்கு போலியோ சொட்டுமருந்து கொடுக்க வேண்டியிருப்பதைக் கூட நமக்கு திரிஷா ஞாபகப்படுத்த வேண்டியுள்ள இன்றைய விளம்பர உலகில், அரசின் திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க தொலைக்காட்சி மிகவும் அவசியம்.

இலவச ஆம்புலன்ஸ் திட்டம் போன்ற நலத்திட்டங்களையும், விவசாயம் மற்றும் தொழில்துறை சார்ந்த ஆலோசனைகளையும், செயல் விளக்கங்களையும் படிக்காத பாமரன் மனதிலும் பசுமரத்தாணி போல் தொலைக்காட்சி பதிய வைக்கிறது.

அரசின் திட்டங்கள் மட்டுமின்றி ஊழல்களையும், முறைகேடுகளையும் தொலைக்காட்சி மக்களிடத்திலே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அடுத்த பத்தாண்டுகளில் ஊழலுக்கு எதிராக மக்களை திசைதிருப்புவதில் தொலைக்காட்சி சிறப்பான இடம் வகிக்கும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியால் மட்டுமே லஞ்சம், ஊழலை ஒழிக்க முடியும் என்பது திண்ணம்.

குழந்தைப் பருவத்தில் இருந்து வழங்கப்படும் உதவித் தொகைகள், திருமண உதவித் தொகை போன்றவற்றால் தான் பெண்சிசுக் கொலை கணிசமாகக் குறைந்துள்ளது. கல்வி பெற உதவித்தொகை, மக்கள் பிரதிநிதித்துவத்தில் இடஒதுக்கீடு போன்றவற்றால் பெண்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரித்து ள்ளது. உடல் ஊனமுற்றோரின் உள்ளம் ஊன முறாமல் அவர்கள் நம்பிக்கையுடன் வாழ்வை எதிர் கொள்ளச் செய்பவை அரசின் மறுவாழ்வுத் திட்டங்களே.

இதுபோன்ற பல்வேறு திட்டங்களால் நாட்டின் பெரும்பான்மை மக்கள் பலனடைந்துள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. அதேநேரத்தில், இதுபோன்ற கட்டுப்பாடற்ற இலவச திட்டங்களுக்கு அரசின் பெரும்பகுதி நிதி செலவாகிவிடுவதால் சாலை, மின்சாரம் போன்ற உள்கட்டமைப்புப் பணிகளுக்கு போதிய நிதி ஒதுக்க முடிவதில்லை.

இதனால், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் முடங்கும் அபாயம் உள்ளது. இதைவிட கொடுமை என்னவென்றால், கல்வி, மருத்துவம் போன்றவற்றை தனியார் வசம் ஒப்படைத்துள்ள அரசு, சமூகத்தை சீரழிக்கும் மது விற்பனையை தாமே முன்னின்று நடத்துவது வேதனை தருகிறது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நலிவடைந்த பிரிவினரிடம் கம்யூனிசம் செல்வாக்கு பெறுவதைத் தடுக்கவே இலவச திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. கம்யூனிச நாடுகளில் கல்வி, மருத்துவம் போன்றவை இலவசமாக அளிக்கப்பட்டாலும், தகுதிக்கேற்ப அனைவ ரிடமும் கட்டாய வேலை வாங்கப்படுவதால் அதனை இலவசமாகக் கருத முடியாது.

ஆனால், முதலாளித்துவமோ தான் வளர பிறரை பலி கேட்கிறது. பத்து பேரின் உழைப்பைச் சுரண்டினால் ஒருவன் லட்சாதிபதியாகலாம். பல நூறு பேரின் உழைப்பைச் சுரண்டுபவன் கோடீஸ்வரன். பல ஆயிரம் பேரின் உழைப்பைக் கொள்ளையடித்தால்தான் ஒருவர் அம்பானியாகலாம். முதலாளித்துவத்தால் சமூகத்தில் உருவாகும் ஏற்றத்தாழ்வுகளால், முதலாளித்துவம் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, நலிவடைந்த பிரிவினரை சமாதானப்படுத்த இலவசங்களை வழங்குவதைத் தொடரவே செய்யும். “எங்கள் நாட்டில் பணக்காரர்களே இல்லை. ஏனெனில் இங்கு ஏழைகளே இல்லை” என்ற வள்ளலாரின் வாக்கு நிறைவேறும் வரை இலவச திட்டங்களைத் தவிர்க்க இயலாது.
கட்டுரையாளர்: திரு.சிவக்குமார், ஊடகவியலாளர்.
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

புதன், ஜனவரி 11, 2012

2011ல் நோபல் பரிசு வென்றவர்கள்.!


இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய ஆறு பிரிவுகளில் 1901ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் வழங்கப்படும் பரிசுத் தொகை ரூ.7.25 கோடி. நோபல் பரிசை உருவாக்கியவர் சுவீடனைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல்.1833ஆம் ஆண்டில் பிறந்த இவர், வேதியியல், பொறியியல் ஆகியவற்றில் திறமை பெற்றவராகத் திகழ்ந்தார்.
டைனமைட் வெடிப்பொருளை கண்டுபிடித்தவர். பெரிய ஆயுதத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தியவர். தனது கடைசி உயில் மூலம் பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளைக் கொண்டு நோபல் பரிசு வழங்கும் அமைப்பை உருவாக்கினார். ஒவ்வோர் ஆண்டும் அவரது நினைவு நாளான டிசம்பர் 10 அன்று நோபல் பரிசுகள் வழங்கப் படுகின்றன. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் வைத்தும் மற்ற பிரிவுகளுக்கான பரிசுகள் சுவீடனிலும் வழங்கப்படுகின்றன. 2011ல் யார் யாருக்கு நோபல் பரிசு வென்றவர்கள் குறித்த ஒரு சிறப்பு தொகுப்பு.

மருத்துவம்:

மனித உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை தூண்டிவிடும் முக்கிய கொள்கைகள், அது பற்றிய தௌ¤வான புரிதலுக்கு வழிவகுத்த அமெரிக்காவைச் சேர்ந்த புரூஸ் பியூட்லர், லக்சம்பர்கைச் சேர்ந்த ஜூல்ஸ் ஹாஃப்மன் மற்றும் கனடாவைச் சேர்ந்த ரால்ஃப் ஸ்டெய்ன்மன் ஆகிய மூவருக்கு, இந்தாண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

இவர்களின் கண்டுபிடிப்பு மூலம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, ருமாட்டாய்ட் அர்த்ரைட்டிஸ் (முடக்குவாதம்), ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு புதிய மருந்துகள் கண்டுபிடிக்க வழி ஏற்பட்டுள்ளதாக நோபல் பரிசுக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நோய்த் தொற்றுகள், புற்றுநோய் வீக்க நோய்கள் போன்றவற்றுக்கான சிகிச்சைக் களை மேம்படுத்துவதற்கும் இந்தக் கண்டுபிடிப்புகள் உதவியாக இருக்கும் என்றும் அதில் கூறப் பட்டுள்ளது.

நோபல் பரிசு அறவிக்கப்படுவதற்கு முன்பே மூவரில் ஒருவரான ரால்ஃப் ஸ்டெய்ன்மன் (2011, செப்டம்பர் 30) இறந்துவிட்டார். பொதுவாக மரணத்திற்குப் பின் யாருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுவதில்லை. ஆனாலும், பரிசுக்குத் தேர்வு செய்யும் போது ஸ்டெய்ன்மன் இறந்த விவகாரம் நோபல் தேர்வுக் குழுவுக்கு தெரியாது என்பதால் பெயர் அறிவிக்கப்பட்டது.

இயற்பியல்:

நட்சத்திரக் கூட்டங்களின் விரிவாக்கம் அதன் மூலமான பிரபஞ்சத்தின் விரிவடைந்து வருவது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த சால் பெர்ல் முட்டர், அமெரிக்க ஆஸ்திரேலியரான பிரெய்ன் ஷ்மிட் மற்றும் அமெரிக்கரான ஆடம்ஸ் ரீஸ் ஆகிய மூவருக்கு, இந்தாண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

சால் பெர்ல் முட்டர்
ஆடம்ஸ் ரீஸ்
பிரெய்ன் ஷ்மிட்
கடந்த 1990ல் பிரபஞ்சம் குறித்த ஆய்வு குழு ஒன்றில், சால் பெர்ல் முட்டர் மற்றும் பிரெய்ன் ஷ்மிட்டும் மற்றொரு குழுவில் ஆடம்ஸ் ரீசும் பணியாற்றினர். இந்த ஆய்வில் மிக தொலைவிலுள்ள 50 சூப்பர் நோவாக்கள் எதிர்பார்த்ததைவிட வலுவற்ற அளவிலேயே ஒளியை உமிழ்வதை அவர்கள் கண்டறிந்தனர். இதனால் பிரபஞ்சம் அதிக வேகத்துடன் விரிவடைவதாக முடிவுக்கு வந்துள்ளனர். இதன் வேகம் அதிகரித்தால் பிரபஞ்சம் பனிப்பாறையாக மாறிவிடும் என்பதை மூவரும் கண்டு பிடித்தனர். இதற்காக, இவர்களுக்கு இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்படுவதாக தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.

வேதியியல்:

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி டேனியல் ஷெட்மேன் குவாசிகிரிஸ்டல்களை கண்டுபிடித்த தற்காக 2011ஆம் ஆண்டுக்கான வேதியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இஸ்ரேலின் ஹைபா நகரில் உள்ள இஸ்ரேல் தொழில்நுட்பக் கழகத்தில் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். கடந்த 1984 ஆம் ஆண்டு முதன் முறையாக குவாசிகிரிஸ்டல்கள் குறித்த ஆய்வை வெளியிட்டார். இதன் மூலம் படிகங்களுக்குள் அணுக்களை திரும்ப செலுத்த முடியாது என்பதே இவரின் ஆய்வு முடிவு.

இதற்கு விஞ்ஞானிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், இதன் பிறகு குவாசிகிரிஸ்டல்கள் குறித்த ஆய்வு அதிகமாக நடந்தது. இதன் பிறகு, டேனியல் ஷெட்மேனின் கருத்து ஒப்புக்கொள்ளப்பட்டது. இதற்காக தற்போது வேதியியல் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இலக்கியம்:

சுவீடன் நாட்டின் மனோதத்துவ நிபுணரும், கவிஞருமான டோமஸ் ட்ரான்ஸ்ட்ருமருக்கு, 2011ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. மனித மனத்தின் அற்புதங்கள் குறித்து இவர் அளித்துள்ள இலக்கியப் படைப்புக்காக, இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ள தாக தேர்வுக் குழு தெரிவித்துள்ளது. இவர் எழுதிய, ‘மிஸ்டிக்கல் வெர்சடைல் அண்ட் சேட்’ என்ற கவிதைத் தொகுப்பு, 50 மொழிகளில் மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது.


கடந்த 90ஆம் ஆண்டு, பக்கவாதம் ஏற்பட்டதால் இவரால் சரிவரப் பேச முடியாமல் போனது. இதனால், தனக்குக் கிடைத்த நோபல் பரிசு குறித்து கருத்து கூற டோமஸ் ட்ரான்ஸ்ட்ருமரால் முடியவில்லை. கடந்த பத்து ஆண்டுகளில் இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெறும் 8ஆவது ஐரோப்பியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைதி:

எலன்ஜான்சன் எர்லீப், தமாக்குள் கர்மான், லேமா ஆகிய மூன்று பேருக்கு 2011ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. பெண் உரிமை மற்றும் அமைதிக்காக போராடிய தால் இவர்கள் மூவரும் தேர்வு செய்யப்பட்டதாக நோபல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது. 72 வயதான எலன்ஜான்சன் லைபீரிய அதிபராக உள்ளார். ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அதிபர் இவர். லைபீரியாவின் இரும்பு பெண்மணி என்றும் அழைக்கப்படுபவர்.


லேமாவும் நைபீரிய நாட்டைச் சேர்ந்தவர். இவர், 2003ல் நைபீரியாவில் நடைபெற்ற இரண்டாவது உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்தவர். லைபீரிய பெண்களைத் திரட்டி அமைதி இயக்கம் ஒன்றை தொடங்கினார். இதன் மூலம் பெண்ணுரிமைக்காக அறவழியில் பல போராட்டங்களை நடத்தியுள்ளார். தேர்தல்களில் பெண்களின் பங்களிப்புக்கு உறுதி ஏற்படுத்தி கொடுத்ததில் இவரின் பங்கு அளப்பரியது.

ஏமனைச் சேர்ந்த தமாக்குள் பெண்களின் உரிமைக்காக போராடி வருகிறார். அந்நாட்டில் நடந்த பல்வேறு மனித உரிமை போராட்டம் மற்றும் அதிபருக்கு எதிரான புரட்சியில் முக்கிய பங்கு வகித்தவர். பெண்கள் பத்திரிகையாளர் அமைப்பின் தலைவராகவும் உள்ளார்.

பொருளாதாரம்:

பெரும் பொருளாதார வளர்ச்சியில், பணவீக்கத்தால் ஏற்படும் பகுப்பாய்வு செய்யும் வழிமுறைகளை வழங்கியதற்காக, அமெரிக்க ஆய்வாளர்களான தாமஸ் சார்ஜன்ட் மற்றும் கிரிஸ்டோபர் சிம்சுக்கு இந்தாண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 

பொருளாதார வளர்ச் சியில் கடன்களின் மீதான வட்டி உயர்வு அல்லது குறைப்பு பணவீக்கத்தை எவ்வாறு பாதிக்கிறது என்று இவர்கள் உருவாக்கிய வழிமுறை, இன்றளவும் பெரும் பொருளாதார பகுப்பாய்விற்கான முக்கிய கருவிகளாக உள்ளது என்று நோபல் பரிசு தேர்வுக் குழு  தெரிவித்துள்ளது. நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தாமஸ் சார்ஜன்ட் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், சிம்ஸ் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

செவ்வாய், ஜனவரி 10, 2012

பெண்ணே உன் அழகு என்னவோ?


‘‘நெய் கனிந்து இருளிய கதுப்பின்
கதுப்பின, மணி வயிற்கலாபம்
பரப்பி பளவுடன் மயின் மயில்
குளிக்கும் சாயல், உயங்கு நாய்
நாவின் நாள் எழில் அசைஇ
வயங்கிழை ஊரிய அடியின்,
ஈந்து நிலம் தோயும் இரும்பிடி
தடக்கையின் சேர்ந்து உடன்
செரிந்த குரங்கின் மடமான்
நோக்கி வாழ்தல் விரலியர்’’ - என்கிறது சிறுபாணாற்றுப்படை சங்க இலக்கிய வரிகள் பெண்ணின் அழகை ஆராதிக்கிறது.

இந்த சங்க வரிகளுக்கு ‘எண்ணை பூசிய இருண்ட கூந்தலை மயில்தோகை போல் பரப்பிடும் அளவிற்கு அடர்த்தி கொண்டவன், மயில் போன்ற நளின நடை, நாயின் நாக்கு போன்ற மென்மையான பாதம், யானையின் துதிக்கை போன்ற தொடை கொண்டவள், மான் விழியாள், பிரகாசமான நெற்றியுடைய அழகு மங்கை’ என்பது பொருள்.

‘‘ஆயிதழ் உண் கண் அலர் முக்தாமரை
தாள் தாமரை தோள் தமனியக் 
கயமலர் தம் கைப்பதுமம் கொங்கைக் 
கயமுகை செவ்வாய் ஆம்பில்
செவ் நீர்த் தாமரை’’ - என்கிறது சங்க இலக்கியமான பரிபாடல்.

இந்த சங்க வரிகளுக்கு, ‘மலர்ந்த தாமரையாம் அப்பெண்ணின் மதிமுகம். கை மட்டும் அல்லாது கால்களும் கூட தாமரையாம்.’ நீராடச் சென்ற பெண்கள் குழாமை இப்படி வர்ணிக்கிறது பரிபாடல்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

திங்கள், ஜனவரி 09, 2012

பான்க்ராம் என்றால் என்ன?


a,e,i,o,u ஆகிய அனைத்து vowels-ம் வரும் வார்த்தைகளில் சில... Education (கல்வி), Evaluation (மதிப்பீடு), abstemious (மிகவும் எச்சரிக்கையாக), facetious (ஜாலியாக, ‘ஜோக்’கடித்துப் பேசுவது!).

சரி இந்த வாக்கியத்தின் தனித் தன்மை என்ன தெரியுமா? - The quick brown fox jumps over a lazy dog! விடை: இந்த வாக்கியத்தில் A to Z அத்தனை ஆங்கில எழுத்துக்களும் அடங்கி இருக்கின்றன. இப்படி எல்லா எழுத்துக்களும் வரும் வாக்கியத்துக்கு பான்க்ராம் (Pangram) என்று பெயர். இப்படிப்பட்ட விசித்திரமான விசயங்கள் கொண்ட புத்தகங்கள் நிறைய இருக்கின்றன. தொடக்கத்துக்கு Richard Le Derer எழுதிய Crazy English என்ற புத்தகத்தைப் படிக்கலாம்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

சனி, ஜனவரி 07, 2012

ஆதலால் படியுங்கள்!


‘மகாத்மா’ என்ற பத்திரிகையைத் தொடங்கியவரும் ‘கேசரி’ என்ற மகாராஷ்டிரப் பத்திரிகையையும் ‘மராட்டா’ என்ற ஆங்கிலப் பத்திரிகை யையும் ‘கீதாரகசியம’ என்ற நூலை மராட்டிய மொழியில் எழுதியவரும் ‘சுயராஜ்யம் எனது பிறப்புரிமை’ என்று முழங்கியவருமான சுதந்திரப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் பாரதம் விடுதலை அடைந்த பிறகு நீங்கள் என்ன பொறுப்பை எடுத்துக் கொள்வீர்கள்? உள்துறையா? என்று கேள்வி கேட்டபோது இந்த அரசியலே எனக்குப் பிடிக்காது; பாரதம் விடுதலை அடைந்த பிறகு கால்குலஸ் பற்றி ஒரு கணிதப் புத்தகம் எழுத நேரத்தை ஒதுக்குவேன் என்றார்.


1952-ல் இஸ்ரேலின் முதல் ஜனாதிபதி காலமானபோது நோபல் பரிசு பெற்றவரும் அணுகுண்டைக் கண்டுபிடித்த பிரசித்தபெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை ஜனாதிபதியாகப் பதவியேற்க அழைத்த போது ‘நான் பௌதிக உலகத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்ய விரும்புகிறேன். மனிதர்களை ஆட்சி செய்ய விரும்பவில்லை’ என்றார். சிறுவயதில் வறுமையும் கடனும் வாட்டியெடுக்க பத்திரிகை ஆசிரியராகி விடாப்பிடியாக படித்தும் எழுதியும் பிற்காலத்தில் அமெரிக்காவின் பிரபல நகைச்சுவை எழுத்தாளராகப் புகழ்பெற்றவர் மார்க் ட்வைன்.

அரசியல் சுழியில் சிக்கிக் கொள்ளாமல் கவிஞராகவோ, எழுத்தாளராகவோ இருந்திருந்தால் நிறைந்த மனநிம்மதியுடன் வாழ்ந்திருப்பேன் என்றார் மைசூர் புலி திப்புசுல்தான். தாம் ஆண்ட 7 ஆண்டுகளில் பெரும் பகுதியை போர்க்களத்திலேயே கழித்த இவர், இலக்கியத்தில் ஆர்வம் மிக்கவர். அறிஞர்களுக்கு ஊக்கமளித்து ஏராளமான நூல்களை இயற்றச் செய்தார். மிக உயர்ந்த கவர்னர் ஜெனரல் பதவியை வகித்த ராஜாஜி நான் செய்த பணிகளில் சிறந்ததாக நான் கருதுவது ராமாயணத்தையும் பாரதத்தையும் காந்திஜிக்கு அறிமுகப்படுத்தியதைதான் என்றார்.

புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி ஆய்வு நூலகத்தை ஏற்படுத்தி மகிழ்ந்தவர் முதல்வர் கருணாநிதி. இவர்கள் எல்லாம் படிப்பதையே விரும்பியவர்கள். ஆதலால் படிப்பதை நாமும் பழக்கிக் கொள்வோம்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன். 

செவ்வாய், ஜனவரி 03, 2012

புதிய உலக அதியசங்கள்.!


முன்பு அறிவிக்கப்பட்ட ஏழு அதிசயங்கள் அனைத்தும் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்தவைகளாக இருந்தன. இந்த அதிசயங்களில் எகிப்தின் பிரமிடு மட்டுமே இப்போது உள்ளது. இந்த உலக அதிசயங்களை கிரேக்க எழுத்தாளர் ‘ஆன்டிபேட்டர்’ என்ற தனி நபர் ஒருவராகவே தேர்வு செய்ததாக நம்பப்படுகிறது. இந்நிலையில் இப்போதைய காலகட்டத்தின் அடிப் படையில் உலகின் புதிய 7 அதிசயங்களை தேர்வு செய்வதற்காக புதிய கருத்துக் கணிப்பு உலகம் தழுவிய அளவில் நடத்தப்பட்டது.

தாஜ்மகால்
இதற்கான முயற்சிகளை சுவிட்சர்லாந்து நாட்டை பூர்வீகமாக கொண்ட கனடா நாட்டவரான ‘பெர்னாட் வெப்பர்’ தொடங்கினார். யுனெஸ்கோ அமைப்பு இந்த வாக்கெடுப்புக்கு கண்டனம் தெரிவித்தது. உலக அதிசயங்களை ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுப்பது சரி அல்ல என்றும் கூறியது. ஆனாலும், உலகின் புதிய 7 அதிச யங்களை தேர்வு செய்வதற்காக உலக அளவில் இணையதளம் மூலமாகவும், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் வாக்கெடுப்பு நடந்தது. 

இயேசு நாதர் சிலை
உலகம் முழுவதிலும் இருந்து 10 கோடி பேர் இணையதளம் (www.new7wonders.com/en/) மூலம் ஆன்லைன் வாக்கெடுப்பில் கலந்துகொண்டு வாக்களித்தனர். இந்தியாவிலுள்ள தாஜ்மகால், மதுரை மீனாட்சி கோவில், குதுப்மினார் உள்பட பல கட்டடங்கள் இப்போட்டியில் இடம் பெற்றன. இவற்றில் தாஜ்மகால் உள்ளிட்ட இருபத்து நான்கு கட்டடங்கள் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டன. உலக அதிசயங்களை அறிவிக்கும் நிகழ்ச்சி போர்ச்சுகல் நாட்டின் தலைநகர் லிஸ்பனில் கடந்த ஆண்டு (18-01-2011) நடந்தது. அப்போது ஏழு அதிசயங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. அவை:

1. இந்தியாவின் தாஜ்மகால்
2. சீனப் பெருஞ்சுவர்
3. ஜோர்டானின் பெட்ரா
4. பிரேசிலின் ரியோ டிஜெனீரோ நகரில் 
        மலை உச்சியில் உள்ள பிரமாண்ட இயேசு நாதர் சிலை
5. பெரு நாட்டின் மச்சு பிச்சு
6. மெக்சிகோவின் மயன் கட்டடங்கள்
7. ரோம் நகரின் கொலேசியம்

நவீன ஏழு அதிசயங்களில் ஐரோப்பாவில் இருந்து இடம் பெற்றிருப்பது ரோம் நகரின் கொலேசியம் மட்டும்தான். இந்த ஏழு அதிசயங்கள் அறிவிக்கப்பட்டதும் பிரேசில், பெரு நாடுகளில் மக்கள் தங்கள் நாடுகளைச் சேர்ந்த அதிசயங்கள் அறிவிக்கப்பட்டதை ஆடிப்பாடி கொண்டாடினார்கள்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் ஜி.எஸ்.பாலமுருகன்.

ஞாயிறு, ஜனவரி 01, 2012

ஆங்கிலப் புத்தாண்டு பிறந்த கதை!


ஜனவரி 1-ந் தேதி, ஆங்கிலப் புத்தாண்டாக உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இப்போது நிலவும் இந்த நிலை, காலம் காலமாக இப்படியே இருந்ததா என்றால், இல்லை என்பதுதான் உண்மை. ஜனவரி முதல் தேதியை புத்தாண்டின் முதல் நாளாக பின்பற்றி வருவது சுமார் 500 வருடங் களாகத்தான். அதற்கு முன், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப ஆண்டின் முதல் நாள் மாறியது.


2000 ஆண்டுகளுக்கு முன் மெசபடோனியர்கள், மார்ச் 25-ந் தேதியைத்தான் ஆண்டின் முதல் நாளாகக் கருதினர். அவர்கள் காலத்தில், ஆண்டுக்கு 10 மாதங்கள்தான் இருந்தன. மார்ச் மாதம்தான் ஆண்டின் முதல் மாதமாகவும், மார்ச் 25-ந் தேதிதான் ஆண்டின் முதல் தேதியாகவும் இருந்தன. இதற்கு காரணம், இயேசுவின் தாய் மேரிக்கு, தான் கர்ப்பமுற்றிருந்தது தெரிய வந்தது என்ற காரணத்தால், மார்ச் 25-ந் தேதியை ஆண்டின் முதல் தேதியாக கருதினர் என்ற ஓரு கருத்தும் கூறப்படுகிறது.

புத்தாண்டு மார்ச் மாதம் 1-ந் தேதிதான் பிறந்தது என்று கருதிய ரோமானியர்கள் அதையே ஆண்டின் முதல் நாளாகவும் கருதினர். ரோமானிய மன்னர்களில் கொஞ்சம் விவரமாக யோசித்த நுமா போம்பிலியஸ் என்பவர், 10 மாதமாக இருந்த ஆண்டில், கூடுதலாக இரண்டு மாதங்களைச் சேர்த்து, ஒரு ஆண்டுக்கு 12 மாதங்கள் என்றாக்கினார். அந்த முறைதான் இப்போதும் பின் பற்றப்படுகிறது. எனினும், ரோமானிய மன்னர்களிலேயே சிலர், பழையபடி ஆண்டுக்கு 10 மாதம்தான். அதுவும் மார்ச் மாதம்தான் முதல் மாதம் என்று கூறிவந்தனர். பின்னர் அதே ரோமர்கள், முதல் இரண்டு மாதங்களுக்கு ஜனவரி, பிப்ரவரி என்று பெயர்களை இட்டனர். ரோமர்களின் கடவுளான ஜனஸ் நினைவாகத் தான் ஜனவரி என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

ரோமானிய மன்னர் ஜுலியஸ் சீசர்தான், ஜனவரி 1-ந் தேதியை ஆண்டின் முதல் நாளாக அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். அதை, இயேசு பிறப்பதற்கு 46 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது கி.மு. 46 ஆம் ஆண்டில் அறிவித்தார். அவர் பின்பற்றிய காலண்டர் முறை, ஜுலியன் காலண்டர் முறை என அழைக்கப்பட்டது. அதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள், பழைய மார்ச் 25 ஆம் தேதியை ஆண்டின் முதல் நாள் என்றனர்.

இங்கிலாந்தை ஆண்ட மன்னர்கள், இயேசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25 ஆம் தேதியை புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்று கூறினர். இயேசு பிறப்பில் இருந்துதான் காலண்டர் முறை தொடங்கியது என்றால், அவர் பிறந்த டிசம்பர் 25 ஆம் தேதியில்தானே புத்தாண்டு தொடங்க வேண்டும் என்று சிலர் வாதம் செய்தனர். அதன் பின்னர் டிசம்பர் 25 ஆம் தேதியையே புத்தாண்டாக பின்பற்றினர். இப்படியாக , 1500 ஆம் ஆண்டு வரை, ஆண்டின் முதல் தேதியில் பல குழப்பங்கள் நிலவின.

கி.பி. 1582 ஆம் ஆண்டு, போப் 13 ஆம் கிரிகோரி, ஜுலியன் காலண்டரை ரத்து செய்தார். நான்காண்டுகளுக்கு ஒரு ஆண்டு லீப் ஆண்டு என்று கூறி, அந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்துக்கு 29 நாட்கள் என்று 365 நாட்களையும், 12 மாதங்களுக்குள் மிகச் சரியாக அடக்கினார். அதில் அறிவியல் பூர்வமான உண்மைகள் இருப்பதாக அறிய வந்ததை அடுத்து, உலகம் முழுவதும் கிரிகோரி யன் காலண்டர் முறை பின்பற்றப்பட்டது.

இந்த முறைப்படி, ஆண்டின் முதல் நாள் ஜனவரி 1 என்று நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 500 ஆண்டுகளாகத்தான் எந்த மாற்றமும் இல்லாமல் ஆண்டின் முதல் நாள் ஜனவரி 1-ந் தேதியாக விளங்குவதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் ஜி.எஸ்.பாலமுருகன்.