செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

புதன், ஏப்ரல் 20, 2016

தினமலர் - தேர்தல் களம் பகுதியில் எனது கட்டுரை... (03-04-2016)


'அதிமுக, திமுக: நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு!' - ஓர் வாசகர் குரல்

விகடன் இணையதளத்தில் வெளியான எனது கட்டுரை

முதலமைச்சர் ஜெயலலிதா தனது ஆட்சி முடியும் அந்திமக் காலத்தில், மதுவிலக்கு குறித்து திருவாய் மலர்ந்திருக்கிறார்.
ஐந்து ஆண்டு காலத்தில் எதிர்க்கட்சிகள், பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் என ஒட்டுமொத்த தமிழகமுமே,  'மதுக்கடைகளை மூடுங்கள், மதுவிலக்கு பற்றி அறிவியுங்கள்'  என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டபோதெல்லாம், வாய் திறக்காத ஜெயலலிதா, தேர்தல் வந்துவிட்டதும், மதுவிலக்கு குறித்து பேசாமல் வெற்றியை பெற முடியாது என்றெண்ணி, முதல் நாள் பிரசாரத்திலேயே, 'மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும்' என்று சொல்லியிருக்கிறார். 

இதற்கு அடுத்த நாளே திமுக,  தனது தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்று அறிவித்தது. தேர்தல் நடவடிக்கையாக இருந்தாலும், இரு தலைவர்களின் உறுதிமொழியை வரவேற்கலாம். ஆனால்….

‘’மதுவிலக்கைப் பொறுத்தவரை எனது நெஞ்சார்ந்த குறிக்கோள் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான். பூரண மதுவிலக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பதுதான் எப்பொழுதும் நான் கொண்டுள்ள கொள்கை ஆகும். ஆனால், பூரண மதுவிலக்கை ஒரே கையெழுத்தில் கொண்டு வருவது என்பது இயலாது. இது படிப்படியாகத்தான் கொண்டுவர முடியும். முதலில் சில்லறை மதுபான கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும். பின்னர் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். பின்னர் சில்லறை மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்கள் மூடப்படும். குடிப்பழக்கத்திற்கு உள்ளாகி உள்ளோரை மீட்பதற்கான மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும். இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு எனும் லட்சியத்தை நாம் அடைவோம்’’ என்று நீட்டி முழக்கியிருக்கிறார் முதலமைச்சர் ஜெயலலிதா.

‘மூடு டாஸ்மாக்கை மூடு’ என பாடிய கோவன் நள்ளிரவில் தேச விரோத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிப்ரவரி மாதம்,  திருச்சியில் பூரண மதுவிலக்கு கோரி மாநாடு நடத்திய ஏழு பேர் மீது தேச விரோத வழக்குப் போடப்பட்டது. மதுக்கடைகளுக்கு எதிராக போராடிய சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியது. மதுக்கடைகளை மூடச் சொல்லி போராடிய காந்தியவாதி சசிபெருமாள், காவல்துறையினரின் அலட்சியத்தால் களத்திலேயே பலியானார். இப்படியெல்லாம் போராட்டம் நடந்தபோது, எங்கே படுத்து உறங்கிக் கொண்டிருந்தது ஜெயலலிதாவின் பூரண மதுவிலக்கு கொள்கை?
மதுக்கடைகளை ஒழித்து, மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் ஜெயலலிதாவின் உண்மையான எண்ணம் என்றால், சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கலாமே? கடந்த ஐந்து ஆண்டுகளில், 110விதியின் கீழ் சட்டப்பேரவையில் அறிவித்த 187 திட்டங்களும் ‘நிறைவேற்றப்பட்டதாக’ பெருமிதம் அடைந்த ஜெயலலிதா, அதுபோல், மதுவிலக்கு குறித்து ‘110’ வாசித்து அமல்படுத்திய சாதனையை நிகழ்த்தியிருக்கலாமே? அதையெல்லாம் செய்யாமல், படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த முடியும் என்று கூறும் அவரது பேச்சை எப்படி நம்ப முடியும்? 

ஒரே கையெழுத்தில் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது, படிப்படியாகத்தான் கொண்டுவர இயலும் என்று கூறுவதன் மூலம், அவரின் கடந்த கால மதுவிலக்கு கொள்கை மீது சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. 1991-1996 ம் ஆண்டு தவிர, 2001-2006, 2011-2016 என்று மூன்று ஐந்தாண்டுகளை முழுமையாக ஆட்சி செய்த காலத்தில்,  அவர் நினைத்திருந்தால், எப்பொழுதோ மதுக்கடைகளை மூடியிருக்கலாம். ஆனால், செய்தது என்ன?

1991-ம் ஆண்டில் முதல்முறையாக முதலமைச்சராக பதவியேற்றபோது ஒவ்வொருவரின் பாக்கெட்டிலும் இடம்பெற்றிருந்த, பாக்கெட் சாராயத்தை ஒழிக்க முதல் கையெழுத்திட்ட அவர், அப்போதே படிப்படியாக, மதுவிலக்கை கொண்டு வருவதாக அறிவித்து அந்த ஆட்சிக்காலத்தின் இறுதிக்குள் முழுமையான மதுவிலக்கை கொண்டு வந்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை.
பின்னர் 2001-ம் ஆண்டில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தப் பிறகாவது மதுவிலக்கு கொள்கையை நிறைவேற்றியிருக்கலாம். அதை செய்யாமல், மதுக்கடைகளை அரசுடைமையாக்கி, மது விற்பனையை அதிகப்படுத்தினார். அதன் பிறகாவது அவருக்கு ஞானோதயம் வந்ததா என்றால் இல்லை. 2011-ம் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு 300 க்கும் மேற்பட்ட புதிய மதுக்கடைகளையும், உயர்தர எலைட் மதுக் கடைகளையும் திறந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை, போராடியவர்களை கைது செய்தார். 

இப்படி 15 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்து மதுவிலக்கை கொண்டுவர முடியாத ஜெயலலிதா, இப்போது தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கை கொண்டுவருவேன் என்று வாக்குறுதி தருகிறார். அவரது வாக்குறுதியை ‘தண்ணியில்’  எழுதி வைத்து, வெறிக்கப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். 

ஜெயலலிதா அவர்களே...தேர்தல் மட்டும் தற்போது வரவில்லை என்றால், இந்த அறிவிப்பைக் கூட வாய்திறந்து சொல்லியிருக்க மாட்டீர்கள். சட்டப்பேரவையில் மதுவிலக்கு குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோதெல்லாம், அத்துறையின் அமைச்சரை விட்டு பதில் தர வைத்த நீங்கள், தற்போது மதுவிலக்கு குறித்து பேசுவது முரண்பாட்டின் மொத்த உருவமாகதான் பார்க்க முடிகிறது. 

இதுமட்டுமா? மதுவிலக்கை அமல்படுத்தினால் வருமானம் போய்விடும் என்றும், மதுவிலக்கை அமல்படுத்தும் எண்ணமே இல்லை என்றும் சட்டப்பேரவையில் வெவ்வேறு காலக்கட்டங்களில் தடாலடியாக அறிவித்தவர், படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று கூறியவர் ஜெயலலிதா அரசின் அமைச்சர் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.

சரி, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதே,  அப்பொழுதாவது மதுக்கடைகளை அகற்றி, உங்கள் மதுவிலக்கு கொள்கையை நிறைவேற்றியிருக்கலாம். ஆனால், அதை செய்ய மனமில்லாமல், நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு வரைக்கும் அதிமுக அரசு சென்றது என்றால், அது நியாயமான செயலா? 

மதுவிலக்கு கொள்கைதான் நெஞ்சார்ந்த குறிக்கோள் என்று கூறும் ஜெயலலிதா, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், ரூ.1.90 லட்சம் கோடிக்கு மது விற்பனையை செய்திருக்கிறார். இதை எப்படி ஒரே கையெழுத்தில் விட்டுகொடுக்க மனம் வரும்? அதனால்தான் படிப்படியாக மதுவிலக்கு என்று அறிவித்து, மக்களை நம்பவைத்து, வாக்கு அறுவடை செய்து, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடன் வருமானம் போய்விடும், அதனால் மதுவிலக்கு சாத்தியமில்லை என்று அறிவித்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. மதுவிலக்கை அமல்படுத்தினால், அண்டை மாநிலங்களில் போய் குடிப்பார்கள், கள்ளச் சாராயம் பெருகிவிடும் என்றெல்லாம் அவிழ்த்துவிடுவார்கள்.
திமுகதான் மதுக்கடைகளை திறந்தது என்று அதிமுகவும், அதிமுகதான் மதுவிலக்கை ரத்து செய்தது என்று திமுகவும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன. 1971ல், கருணாநிதி தலைமையிலான  திமுக ஆட்சியில் மதுவிலக்கை நீக்கி, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மது வகைகள், சாராயம் மற்றும் கள் விற்பனைக்கான கடைகள் மாநிலம் முழுவதும் திறக்கப்பட்டன. பின்னர், அதே ஆட்சிக் காலத்தில், 1974 ல் மீண்டும் மதுக்கடைகளை மூடி, மது விலக்கை கருணாநிதி நடைமுறைப்படுத்தினார். 

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் சட்டமுன்வடிவு,  சட்டப்பேரவையில் 22-8-1974 அன்று நிறைவேற்றப்பட்டது. அதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க அரசு, 1981ல் கள், சாராய விற்பனைக்காக, மதுவிலக்கை ரத்து செய்தது. தொடர்ந்து, 1991ல் பாக்கெட் சாராயத்தை ஒழித்த ஜெயலலிதா, பின்னர் மது விற்பனையை அரசுடைமையாக்கினார்.
சசிபெருமாள் மரணத்திற்கு பிறகு, தமிழகத்தில் மதுக்கடைகளுக்கு எதிரான ஒரு கொந்தளிப்பான நிலை ஏற்பட்டவுடன், திமுகவுக்கு ஞானோதயம் வந்தது. அதன் எதிரொலியாக தற்போது தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்று அறிவித்திருக்கிறது. 5 முறை முதலமைச்சராக இருந்தபோது எதையும் செய்ய மனமில்லாத கருணாநிதி, தற்போது ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்பதற்காக, மதுவிலக்கு குறித்து பேசுகிறார். இதை எப்படி நம்புவது? சட்டப்பேரவையில் மதுவிலக்கு பற்றி பேசினால் ஜெயலலிதா வாய் திறப்பதில்லை. அவருக்கு பதிலாக நத்தம் விஸ்வநாதன் பதில் கொடுப்பார். அதேபோல்தான் கடந்த காலங்களில் கருணாநிதியும் செயல்பட்டிருக்கிறார். 

2007-ம் ஆண்டு சட்டப்பேரவையில் கள்ளச் சாராயத்தை ஒழிக்க வேண்டுமென பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பேசியபோது, ''நான் அவர்களுக்கெல்லாம் சொல்வது... அறவே கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியாததற்குக் காரணம், மதுவிலக்குத் திட்டத்தில் நாம் மற்ற நாடுகளோடு போட்டி போடுவது என்றால், அவர்களை விட இன்னும் நல்ல சரக்குகளை இங்கே உற்பத்தி செய்ய வேண்டும் என்பதிலேதான் வெற்றி பெற முடியுமே தவிர, வேறு வழியிலே வெற்றி பெற முடியாது என்பதற்கு இன்றைய உலக நிலை, பண்பாடு, உலகக் கலாச்சாரம் சாட்சியாக இருக்கிறது’’ என்று கருணாநிதி கூறினார்.

மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வைகோ 1,500 கி.மீ பாதயாத்திரை மேற்கொண்டார். காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், வயது, உடல் நலம் பற்றி சிறிதும் கவலைக் கொள்ளாமல் சென்னை முதல் குமரி வரை பாதயாத்திரை மேற்கொண்டார். காந்தியவாதி சசிபெருமாள், ஒவ்வொருவரின் காலில் விழுந்து குடிக்காதீர்கள், குடிக்காதீர்கள் என்று கெஞ்சினார். பெண்கள், மாணவிகள், மாணவர்கள், சிறுவர்கள் என பலரும் மதுக்கடைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக போராடி வந்தனர். ஆனால், அதிமுக மற்றும் திமுக அரசுகள் சாராய விற்பனையில் ஒரே கொள்கையை கடைப்பிடித்து, கூட்டு கொள்ளையடித்து வந்திருக்கின்றன.

மக்களை குடிகாரர்களாக மாற்றி, ஒரு தலைமுறையையே சீரழித்து விட்டன. பள்ளிக்கு போகும் மாணவ – மாணவிகளை குடிக்கும் நிலைக்கு இரு அரசுகளும் மாற்றிவிட்டன. அரசே முன்னின்று மது விற்பனையை செய்து, மக்களின் வாழ்க்கைத் தரத்தை நிர்மூலமாக்கி, கஜானாவை பெருக்கிக் கொள்கிறது. மதுபோதையில் மக்களை தள்ளாட வைத்து, அதில் வரும் வருமானத்தை, இலவசம் எனும் ஊறுகாயாக தந்து மக்களை எப்போதும் ஏமாற்றியே வந்திருக்கிறது அதிமுகவும், திமுக வும். குடிப்பழக்கம் மட்டுமல்ல, அதிமுகவும், திமுகவும் நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு!

- ஜி.எஸ்.பாலமுருகன் (மயிலாடுதுறை)

சனி, ஏப்ரல் 09, 2016

நம்பி வந்தவர்களுக்கு துரோகம் செய்யாதீர்கள் திரு வைகோ அவர்களே...!

விகடன் இணையதளத்தில் வெளிவந்த எனது கட்டுரை

பொதுவாழ்வில் ஈடுபட்டு ஜனநாயகத்தை தழைத்தோங்க செய்யவேண்டும், சமூகத்திற்கும், மக்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணிய காலங்கள் மறைந்து, அரசியலில் காலடி எடுத்து வைத்தவுடன் ஊழல் செய்து கோடி கோடியாய் சம்பாதிக்க வேண்டும், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற மனநிலை இன்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையை இன்றைய தமிழக தேர்தல் களம் நமக்கு நன்கு உணர்த்துகிறது.
மக்கள் நலனுக்கான கூட்டணி என்று தொடக்கத்தில் கூறி வந்த, அதன் தலைவர்கள் தற்போது, எந்தப் பாதையை நோக்கிச் செல்கிறோம் என்பதை அறியாமல் ஒவ்வொரு நாளையும் கடந்து செல்கிறார்கள். அதிமுகவும், திமுக.வும் வேண்டாம் என்றும், தமிழகத்தில் நல்லாட்சி ஏற்பட வேண்டும் என்ற வேட்கையுடன் உருவான மக்கள் நலக் கூட்டணியையும், அதன் தலைவர்களையும் பொதுமக்களாகிய வாக்காளர்கள் விசித்திரமாக பார்க்கிறார்கள்.
கேப்டன் விஜயகாந்த் அணியின் ஒருங்கிணைப்பாளரான வைகோ, பெரியண்ணன் தோரணையில் எதிர்க்கட்சிகளை மிகவும் கீழ்த்தரமாக வசைப்பாடுகிறார். இதற்கு ஊடகங்களும் விதிவிலக்கல்ல. ஆதாரமில்லாமலும், அருவறுக்கத்தக்க வகையிலும் தொடர்ந்து கூறி வரும் வைகோவின் குற்றச்சாட்டுகளில் எந்தளவிற்கு காழ்ப்புணர்ச்சியும், சுயநலமும் கலந்திருக்கிறது என்பதை, சமூக வலைத்தளங்களில் பொதுமக்களால் விமர்சிக்கப்படுதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
பெரியார், அண்ணாவின் பாசறையில் வளர்ந்த வைகோ, ’கருணாநிதி நாகூசும் வகையில் பேசுகிறார் என்றால், வைகோ எப்படிப்பட்ட அரசியல்வாதியாக இருக்க முடியும் என்ற கேள்வி, அவரது கட்சியினர் இன்றி, பிற கட்சிக்காரர்களைத் தாண்டி, நடுநிலையாளர்களிடம் எழுகிறது.
திரு வைகோ அவர்களே, இந்த தேர்தல் களத்தில் நீங்கள் ஆற்றி வரும் அரும்பணிகளை பார்க்கும்போது,உங்களோடு கைகோர்த்துள்ள பிற கட்சிகளை நீங்கள் கூண்டோடு காலி செய்யப் போகிறீர்கள் என்பது, விஜயகாந்துக்கோ, இடதுசாரிகளுக்கோ, திருமாவளவனுக்கோ தெரியாமல் போகலாம். உண்மையை உணரும்போது, அவர்கள் உங்களை கைவிட்டுவிடுவார்கள்.
எல்லாவகையிலும் சாதகமான திமுக கூட்டணியை விட்டு விஜயகாந்தும், உங்களின் அனுபவம் நிர்வாகத்திறமை இவற்றை நம்பி மக்கள் நலக்கூட்டணியில் உள்ள இதர கட்சிகளும் உங்களுடன் கூட்டு சேர்ந்திருக்கின்றன. அவர்களுக்கு துரோகம் இழைக்காதீர்கள் வைகோ.


அரசியலில் வெற்றியோ, தோல்வியோ, தொழிலாளர் வர்க்கத்திற்காக, விளிம்பு நிலை மக்களுக்காக, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரலுக்கு குரல் கொடுத்து வரும் இடதுசாரிகளுக்கோ, திருமாவளவனுக்கோ விஜயகாந்துக்கோ வெற்றி தேவைப்படும். ஆனால் கடந்த காலங்களில் நீங்கள் அந்த இலக்கை நோக்கி ஓடியவரில்லை. உங்களின் பேச்சும் செயலும் உங்களை நம்பி வந்த அவர்களுக்கு வெற்றியை கடினமாக்குகிறது.
ஆனால் உங்களுக்கு வெற்றி இப்போதைக்கு தேவையில்லை. பக்குவமும், பிறரை மதித்து, அனுசரித்துப் போகும் குணமும்தான் தேவை. கால்போன போக்கில் போகாதீர்கள். மனம் போன போக்கில் செயல்படாதீர்கள். எதிர்க்கட்சிகளை கருத்து ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் விமர்சித்து தேர்தல் கால இலக்கையும், அரசியல் பயணத்தையும் தொடருங்கள் வைகோ. அதைவிடுத்து, ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதும், பிறர் மீது எரிந்து விழுவதும், இலக்கில்லாமல் பயணிப்பதும் எஞ்சிய அரசியல் வாழ்க்கைக்கு ஒத்து வராது.
-ஜி.எஸ்.பாலமுருகன், (மயிலாடுதுறை)
http://www.vikatan.com/news/vasagar-pakkam/62089-control-yourself-mr-vaiko.art

எதிர்க்கட்சி அரசுகளே இருக்கக் கூடாதா மோடி?`


மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, ‘‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’’ என்பது தன் நோக்கமென்று முழங்கினார் நரேந்திர மோடி. பிரதமர் ஆனதும் இதை நிறைவேற்றுவதில் தீவிரமாக இருக்கிறார் என்பதை அவரது அண்மைக்கால செயல்பாடுகள் வெளிச்சம்போட்டு காட்டுகின்றன. அருணாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் முதலமைச்சர் நபம் துகிக்கு எதிராக அக்கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தியதால் ஏற்பட்ட குழப்பத்தில், குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. சில வாரங்களுக்குப் பிறகு பா.ஜ.க ஆதரவுடன் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் தலைவர் கலிக்கோ புல் முதலமைச்சரானார். தற்போது 6 மாத இடைவெளிக்குப் பிறகு உத்தரகண்ட் மாநிலத்தில் கைவைத்திருக்கிறார் மோடி.
உத்தரகண்டில் என்ன பிரச்னை?
உத்தரகண்ட்டில் முதலமைச்சராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் விஜய் பகுகுணா, உட்கட்சி குழப்பம் காரணமாக பகுகுணா பதவி விலகி, 2014 பிப்ரவரி 1ஆம் தேதி ஹரீஷ் ராவத் முதலமைச்சராகப் பதவியேற்றார். எனினும் ஆரம்பம் முதலே விஜய் பகுகுணாவுக்கும், ஹரீஷ் ராவத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. இந்நிலையில், கடந்த 18ஆம் தேதி சட்டப்பேரவையில் நிதி ஒதுக்கீடு மசோதா மீதான வாக்கெடுப்பின் போது, விஜய் பகுகுணா தலைமையில், நிதி அமைச்சர் ஹரக் சிங் ராவத், அம்ரிதா பத்ரா, குன்வார் பிரணவ் சிங், ஷைலா ராணி ராவத், பிரதிப் பத்ரா, சுபோத் உனிவால், சைலேந்திர மோகன் சிங்கால், உமேஷ் சர்மா, விம்லால் ஆரியா ஆகிய 9 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுடன் கைகோர்த்து, மசோதா மீது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தினர்.
இதையடுத்து, அடுத்தடுத்த நாட்களில் அரசுக்கு எதிரான நெருக்கடி அதிகரித்ததால், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 9 பேரின் பதவியையும் கட்சித் தாவல் சட்டப்படி பேரவைத் தலைவர் பறித்து உத்தரவிட்டார். தொடர்ந்து, ஒரு நியமன எம்.எல்.ஏ உட்பட காங்கிரஸூக்கு 27 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருந்த நிலையில், முற்போக்கு ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவு அளிக்க முன்வந்தனர். மேலும், அதிருப்தி அணியைச் சேர்ந்த விம்லால் ஆரியா என்ற எம்.எல்.ஏ. அரசை ஆதரிப்பதாக கூறினார். இதனால் பேரவையில் எளிதாக காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றுவிடும் என்ற நிலை இருந்தது.
மத்திய அரசு திடீர் நடவடிக்கை


பெரும்பான்மையை நிரூபிக்கும்போது பேரவையில் அமளி நடக்க வாய்ப்பு உள்ளதாக ஆளுநர் கே.கே.பால் அறிக்கை அளித்தார். இதையடுத்து அவசரம் அவசரமாக பிரதமர் மோடி தலைமையில் கூடிய அமைச்சரவையில், மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு ஒரு நாள் முன்னதாக, அரசியல் சட்டத்தின் 356ஆவது பிரிவின் கீழ், கடந்த 27ஆம் தேதி பேரவையை முடக்கி வைத்து, குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
மத்திய காங்கிரஸ் ஆட்சியில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தபோது, அக்கட்சி குதிரை பேரத்தை ஊக்குவிக்கிறது என்றும், ஜனநாயக படுகொலை நடத்துவதாகவும் குற்றம்சாட்டிய பா.ஜ.க., காங்கிரஸ் கட்சி செய்ததையே இப்போது பா.ஜ.க.வும் செய்கிறது. காங்கிரஸ் கட்சி, தனது முடிவை அல்லது செயல்பாட்டை எதிர்க்கும் முதலமைச்சருக்கு எதிராக 356ஆவது பிரிவை பயன்படுத்தியது போன்றே, பா.ஜ.க.வும் அருணாச்சலை தொடர்ந்து உத்தரகண்ட்டிலும் செயல்படுத்தியது.
356ஆவது பிரிவு என்ன சொல்கிறது?
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 356ஆவது பிரிவு குடியரசுத்தலைவர் ஆட்சியை குறிக்கிறது. அதாவது, இந்தியாவில் மாநில அரசு ஒன்று கலைக்கப்பட்டு அல்லது இடைநிறுத்தப்பட்டு மத்திய அரசின் மேற்பார்வையில் இயங்குவதைக் குறிக்கிறது. இவ்விதிபடி ஓர் மாநில அரசு இயங்காமல் இருக்கும்போது, அந்த அரசை கலைக்கவும் மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் பெரும்பாலும் எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்காகவே 356ஆவது பிரிவு பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக கூறப்படுவது உண்டு. இதற்கு உச்சநீதிமன்றம் கடிவாளம் போட்டது.
எஸ்.ஆர்.பொம்மை வழக்கு
கர்நாடகத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால், முதலமைச்சராக இருந்த ஜனதா கட்சியைச் சேர்ந்த எஸ்.ஆர்.பொம்மையின் அரசு கலைக்கப்பட்டு, 1989ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி பிரதமர் ராஜீவ் காந்தியின் பரிந்துரையின்பேரில், குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பொம்மையின் வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத்தின் குல்தீப் சிங் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, பொம்மையின் அரசு கலைக்கப்பட்டது செல்லாது என்று அறிவித்தது. 356ஆவது பிரிவை பயன்படுத்துவதில் மத்திய அரசு கடைப்பிடிக்க வேண்டிய சட்ட விளக்கங்களையும் தெளிவாக வரையறுத்தது உச்சநீதிமன்றம். ஆனால், அதையெல்லாம் மத்திய பா.ஜ.க அரசு அருணாச்சலிலோ, உத்தரகண்ட்டிலோ கடைப்பிடிக்கவில்லை.
உத்தரகண்டில் பா.ஜ.க.வின் நோக்கம் என்ன?


உத்தரகண்ட் மாநிலங்களவை எம்.பி.யாக, பா.ஜ.க.வைச் சேர்ந்த தருண் விஜய் உள்ளார். இவர் அடிக்கடி தமிழுக்காக குரல் கொடுப்பவர். இவரது பதவிக் காலம் இன்னும் சில மாதங்களில் முடிவடைகிறது. காங்கிரஸ் அரசு, உத்தரகண்டில் நீடித்தால் தருண் விஜய் மீண்டும் எம்.பி.யாவது சாத்தியமில்லை. இப்பின்னணியில்தான் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தூண்டிவிட்டு அரசியல் குழப்பத்தை பா.ஜ.க அரங்கேற்றுவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
நீங்கள் செய்வது சரிதானா மோடி?
காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் இருக்கலாம். தலைமையோடு பிரச்னை ஏற்படலாம். பதவிக்காக அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வை ஆதரிக்கலாம். இதையெல்லாம் காரணமாக வைத்து, ஜனநாயகத்தின் மீதும், அரசியல் சாசனத்தின் மீதும் நம்பிக்கை கொண்ட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்ப்பது, அரசியல் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்துவது, சட்டத்துக்கு விரோதமானது மட்டுமல்ல; அரசியல் காழ்ப்புணர்ச்சியும்கூட.
இதுபோன்றதொரு நிலை எங்கள் மாநிலத்திலும் தொடரும் என்று, காங்கிரஸ் ஆளும் ஹிமாச்சல் பிரதேச முதலமைச்சர் வீரபத்ர சிங், தனது கட்சித் தலைவர் சோனியாவிடம் புலம்பும் அளவுக்கு ஆளும் பா.ஜ.க அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் நடந்துக் கொள்வதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள இயலாது. உத்தரகண்ட் நடவடிக்கையை ‘ஜனநாயக படுகொலை’ என்று காங்கிரசும், எதிர்க்கட்சிகளும் கூறும் குற்றச்சாட்டில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது. காங்கிரஸ் ஆளும் ஒவ்வொரு மாநிலத்தையும் குறிவைத்து, குழப்பத்தையும், அரசியல் நெருக்கடியையும் ஏற்படுத்துவதை பார்த்தால், மோடியின் பின்னணியில் உள்ள ’காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்ற ரகசியத்தை புரிந்து கொள்ள முடிகிறது.
மோடியின் விரோதப் போக்கு தொடரும்?
அருணாச்சல், உத்தரகண்ட்டை தொடர்ந்து, காங்கிரஸ் ஆளும் பிற மாநிலங்களிலும் அடுத்தடுத்து அரசியல் குழப்பம் நிகழ இருக்கிறது. ஹிமாச்சலில் முதலமைச்சர் வீரபத்ர சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், வீரபத்ர சிங் சி.பி.ஐ மற்றும் அமலாக்கப் பிரிவின் விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். இதை வைத்து குழப்பத்தை ஏற்படுத்த மோடி அரசு காய் நகர்த்தி வருகிறது. இதேபோல், மணிப்பூர் முதலமைச்சர் இபோபி சிங், மேகாலயா முதலமைச்சர் முகுல் சங்கமா, மிசோரம் முதலமைச்சர் லால்தன் ஆகியோரின் அரசுகளுக்கு எதிராக, அந்தந்த மாநில அரசியல் நிலவரங்களை வைத்து குழப்பம் செய்திட பா.ஜ.க திட்டம் வகுத்து வருகிறது.
கர்நாடக காங்கிரசுக்கும் சிக்கல்?
காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் ஒரே பெரிய மாநிலம் கர்நாடகம்தான். அங்கு, மொத்தமுள்ள 124 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 65க்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிராக உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சோனியாவிடம் முறையிட்டிருக்கும் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, சித்தராமையாவை உடனடியாக நீக்காவிட்டால், உத்தரகண்ட் நிலைமை கர்நாடகாவிலும் நடைபெறலாம் என்று கூறியிருக்கிறார். இப்படி காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகளை அலற வைத்து மகிழ்ச்சிக் கொள்வதிலும், அதிகாரத்தை கைப்பற்றுவதிலும் மோடிக்கு என்னதான் சுகமோ? இந்தியாவில் எங்கும் எதிர்க்கட்சிகளின் அரசுகள் இருக்கக் கூடாது என்று நினைத்தால், மக்கள் மத்தியில் பா.ஜ.க.வுக்கோ, நரேந்திர மோடிக்கோ நல்ல பெயரை பெற்றுத் தராது!
-ஜி.எஸ்.பாலமுருகன், மயிலாடுதுறை.