மாம்பழம் சின்னத்தை தக்க வைக்கவே, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ், சமுதாய கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில், பா.ஜ.,வுடன் கட்டாயம் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கருத்தும், அக்கட்சியில் வலுத்து வருகிறது.
தேர்தல் கமிஷனின் அங்கீகாரத்தை, அரசியல் கட்சிகள் பெற, பல நிபந்தனைகள் உள்ளன. ஒரு கட்சி மாநில கட்சிக்குரிய, அங்கீகாரத்தைப் பெற வேண்டும் எனில், லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில், 6 சதவீத ஓட்டுகளைப் பெறுவதோடு, குறிப்பிட்ட இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
சின்னம் பறிபோகும்:
தேர்தல் கமிஷனின் இந்த விதியை, 2009 லோக்சபா தேர்தலில், பூர்த்தி செய்ய, பா.ம.க., உட்பட, ஆறு மாநில கட்சிகள் தவறி விட்டன. அதற்கு காரணம், தேர்தலில், அந்தக் கட்சிகளுக்கு கிடைத்த படுதோல்வியே. அதனால், புதுச்சேரியில் பா.ம.க.,வின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பான அறிவிப்பை, 2010ல், தேர்தல் கமிஷன் வெளியிட்டது. மேலும், 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட பா.ம.க.,வால், மூன்று தொகுதிகளில்மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இருப்பினும்,அக்கட்சி, மாநில அளவில், 5.2 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றது.
வரும் லோக்சபா தேர்தலில், 6 சதவீதத்திற்கு அதிகமான ஓட்டுகள் அல்லது குறிப்பிட்ட இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே, பா.ம.க.,விற்கு மாம்பழம் சின்னம் சொந்தமாகும். இல்லையெனில், பா.ம.க.,வின் மாம்பழம் சின்னத்தை, தேர்தல் கமிஷன் பறிக்க வாய்ப்புள்ளது. இந்த இக்கட்டான தருணத்தில், வரும் தேர்தலில், ஏதாவது ஒரு அரசியல் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால், குறைவான தொகுதிகளில் மட்டுமே, பா.ம.க., போட்டியிட முடியும். அதனால், ஓட்டு சதவீதத்தை அதிகரித்து காட்ட முடியாது.
அதேநேரத்தில், ஜாதி அமைப்புகளை இணைத்து, தற்போது உருவாக்கியுள்ள, சமுதாயகூட்டணி சார்பில், மாநிலம் முழுவதும் உள்ள தொகுதிகளில், பா.ம.க., சார்பில், பலர் போட்டியிட்டால், தேர்தல் கமிஷன் இலக்கான, 6 சதவீதம் ஓட்டுகளை பெற முடியும் என்பதே, ராமதாசின் கணக்கு.அதாவது, பா.ம.க., தனித்துப் போட்டியிட்டால், வன்னியர்களின் ஓட்டுகளை மட்டுமே பெற முடியும்; மற்ற ஜாதியினர் ஏறிட்டுப் பார்க்க மாட்டார்கள். சமுதாய கூட்டணி எனில், மற்ற ஜாதியினரும், பா.ம.க., சார்பில், தேர்தலில் நிற்பர். ஏராளமான வேட்பாளர்கள், பா.ம.க.,வின் மாம்பழம் சின்னத்தில் நிற்கும் போது, ஓட்டு சதவீதம் அதிகரிக்கும், அதனால், சின்னத்தை தக்க வைத்துக் கொள்ளலாம் என்பதும், அவரின் மற்றொரு கணிப்பு.
தந்தைக்கு எதிராக:அதேநேரத்தில், 'வரும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே, கட்சியினரை தக்கவைக்க முடியும்' என, பா.ம.க., இளைஞர் அணி செயலர் அன்புமணி நினைக்கிறார். பா.ம.க., சார்பில், வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்களின் மனநிலையும் அதுவாகவே உள்ளது. அதனால், இந்த விஷயத்தில், தந்தை ராமதாஸ் முடிவுக்கு எதிராக, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்கவும், விஜயகாந்தின், தே.மு.தி.க., அந்தக் கூட்டணியில் சேர்ந்தாலும், ஆதாயம் கருதி, அதை ஏற்றுக் கொள்ளவும், அன்புமணி திட்டமிட்டுள்ளதாகக் தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக