தனக்கு நடந்த பாராட்டுக் கூட்டத்தில் பேசி முடித்து இறங்கிய நண்பர், வருத்தத்துடன் சொன்னார்: “நான் வெற்றி பெற்ற பிறகு இவ்வளவு பேரும் என்னைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், நான் வெற்றி பெறப் போராடிக் கொண்டிருந்த தருணத்தில், யாருமே என்னைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், இன்று பாராட்டுகிறார்கள். நியாயப்படி தொடக்ககால கட்டத்தில் தானே எனக்கு அங்கீகாரம் தேவை.”
மற்றொரு நண்பர் இதை மறுத்துவிட்டு விளக்கிச் சொன்னார்: “யார் முதலில் வருகிறார்களோ, அவர்களுக்குத்தான் முதல் பரிசு என்பதால்தான் போட்டியில் கலந்து கொள்கிறவர்களுக்கு வேகமே வருகிறது. அதற்கு பதிலாக, எல்லோரும் உற்சாகமடையட்டும் என்று,'ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிறவர்களுக் கெல்லாம் பரிசு’ என்று அறிவித்தால், யாருமே ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு ஓட மாட்டார்கள். அப்படியே ஓடினாலும், ஓடுகிறவரை எல்லோரு மாக சேர்ந்து இழுத்துப்பிடித்து, ‘அதான் பந்தயத்தில் கலந்து கொண்டாலே பரிசாமே! ஏன் இவ்வளவு வேகம்?’ என்று உட்கார வைத்துவிடுவார்கள்.
ஓட நினைத்தவர் இப்போது வேகமாக நடக்க ஆரம்பிப்பார். அதற்கும் இரண்டு பேர், ‘கலந்துகொண்டாலே பரிசு என்றாகிவிட்டது. பிறகு எதற்கு இவ்வளவு வேகம்?’ என்று தடை சொல்வார்கள். இப்போது அவர் மிக மெதுவாக நடக்க ஆரம்பிப்பார். அப்போதும் விடமாட்டார்கள். ‘எதற்காக நடந்து கொண்டிருக் கிறீர்கள்? கலந்து கொள்வது என்பதற்கு டிராக்கில் நின்று கொண்டிருந்தாலே கூட போதுமானது’ என்று நடப்பதையும் நிறுத்திவிடுவார்கள்.
இன்னொரு சோம்பேறி சொல்வார், ‘கலந்து கொள்வது என்றால் டிராக்கில் இருந்தாலே போதும். பிறகு எதற்கு நிற்கிறீர்கள்?’ என்று சொல்லி உட்காரவும் வைத்துவிடுவார்கள். வெற்றி பெற்றால்தான் பரிசு என்பதனால்தானே நாம் வெகுவேகமாக ஓடச் செய்கிறோம். எனவே, அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று வருந்தாதீர்கள். தொடக்க அங்கீகாரத்திலேயே திருப்தி அடைந்து விட்டால் ஓடுவதற்கான உத்வேகத்தை நீங்கள் ஒருநாளும் பெறவே மாட்டீர்கள்.” எனவே, தொடக்க காலத்தில் கிடைக்கும் அவமானத்தை சகித்துக் கொண்டால், எதிர்காலத்தில் வெற்றியைப் பெறலாம்.
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக