கருத்துப்படம் வெளியிட்டவர் கைது, நூலகங்களில் நாளிதழ்களுக்குத் தடை, பாடப் புத்தகங்களில் மார்க்ஸ், ஏங்கல்ஸ் கட்டுரைகள் நீக்கம், தனியாக நாளிதழ்கள், டி.வி. தொடங்க முடிவு என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி செய்வது எல்லாம் சமீப காலமாக அடாவடியாக மாறிக் கொண்டிருக்கின்றன. என்னதான் பிரச்சனை கருத்துப்படம் வெளியிடப் பட்டதில்.?
ஜாத்வபூர் பல்கலைக்கழகத்தின் வேதியியில் துறை பேராசிரியர் மொகாபத்ர வரைந்தது உண்மையில் கார்ட்டூன் எனப்படும் கேலிச் சித்திரம் அல்ல. அதில் இடம் பெற்றுள்ளவை மம்தா பானர்ஜி, ரயில்வே அமைச்சர் முகுல் ராய், முந்தைய அமைச்சர் தினேஷ் திரிவேதி ஆகியோரின் புகைப்படங்கள் மட்டுமே. இந்தப் படங்களில் சத்யஜித்ரே இயக்கிய ‘சோனார் கெல்லா’ என்ற படத்தின் வசனத்தை அப்படியே மறுபதிவு செய்துள்ளார் பேராசிரியர். இதனை தன் சமூக வளைதளப் பக்கத்துக்கு வந்திருந்த நண்பருடன் பகிர்ந்து கொண்டார்.
ரயில்வே பட்ஜெட்டில் தினேஷ் திரிவேதி, பயணக் கட்டணங்களை உயர்த்தியதால் அவரை நீக்கிவிட்டு முகுல் ராயை அமைச்சராக நியமித்தார் மம்தா. இதனையொட்டி அவர் அந்த படத்தின் கருத்தை இந்த கேலிச் சித்திரத்தில் சேர்த்து வெளியிட்டு இருக்கிறார். அவ்வளவே.! அப்படி என்ன அந்த படத்தில் கூற்பட்டுள்ளது என்று கேட்கிறீர்களா? ஒன்றுமில்லை. இவ்வளவுதான்.!
சத்தியஜித்ரே இயக்கிய சோனார் கெல்லா (தங்கக்கோட்டை) திரைப்படத்தில், தான் முந்தைய ராஜகுலத்தில் பிறந்ததாக, தங்கக்கோட்டையில் வாழ்ந்ததாக பழம் நினைவுகளைப் பெற்றிருக்கும் முகுல் என்ற சிறுவனை ஆய்வுக்காக ராஜஸ்தான் அழைத்துச் செல்கிறார் ஒரு மனோதத்துவ டாக்டர். தங்கக் கோட்டை என்பதைப் புதையல் என்று புரிந்து கொண்டு பின்தொடரும் இரண்டு திருடர்கள், டாக்டரை மலையிலிருந்து தள்ளிவிடுகின்றனர். அப்போதைய உரையாடலை மொகபத்ர பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
‘முகுல், தங்கக் கோட்டையை பார்த்தாயா?’ இது அந்தப் படத்தில் வரும் ஒரு திருடனின் வசனம். இது கேலிப்படத்தில், மம்தா முகுலிடம் கேட்பதாக உள்ளது. ‘அந்த ஆளு (டாக்டர்) கெட்டவன்’ என்று முகுல் சொல்ல, ‘அவன் காணாம போயிட்டான்’ என்று மம்தா சொலகிறார். பேராசிரியர் மொகாபத்ராவின் கேலிப் படத்தில் இடம் பெற்ற வசனம் இவ்வளவுதான்.
தமிழகத்தில் நாமும் ‘திருவிளையாடல்’ திரைப்படத்தில் இடம் பெறும் தருமி வசனத்தை சற்று மாற்றியும் மாற்றாமலும் பல வகையாகப் பயன்படுத்துவதைப் போல, ‘நாயகன்’ படத்தில் வரும் ‘நீங்க நல்லவரா கெட்டவரா’ வசனத்தை வைத்துக் கேலி செய்வதைப் போல, ‘ஒரு பழம் இங்க, இன்னொரு பழம் எங்க’ என்கின்ற செந்தில் - கவுண்டமணி காமெடியை வைத்து அரசியலை விமர்சிப்பது போல, இதுவும் ஒரு வகையான கேலி, அவ்வளவே...
Jadavpur University professor Ambikesh Mahapatra |
2001 தேர்தலில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்த போது, ‘மம்மி ரிட்டர்ன்ஸ்’ திரைப்பட விளம்பர போஸ்டரில் முதல்வரின் படத்தைக் கணினி மூலம் பொருத்தி அனுப்பப்பட்ட இமெயில் பலருக்கும் வந்தது. தற்போது, தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு படுபயங்கரமாக இருக்கிறபோது, பலருக்கும் வந்த குறுந்தகவல் இது: ‘ஆத்தா மிக்ஸி கொடுத்தா கிரைண்டர் கொடுத்தா கம்யூட்டர் கொடுத்தா... கரண்ட் கொடுக்கலியே...’ ஒரு மனக் கொதிப்பான வேளையில், அதை மறக்கச்செய்து, ஒரு மெல்லிய சந்தோஷத்தை விரித்து, நம்மை இலகுவாக்கிக்கொள்ள உதவுபவை இத்தகைய கேலிகள் - இதை விமர்சனம் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது.
இது ஒரு மனவெளிப்பாடு. படைப்பாற்றல் கொண்ட நபர் இதை நுட்பமான கேலிச் சித்திரமாக்குகிறார். அவ்வளவே.! இதற்காக அவர் கைது என செல்வது ஏற்கக் கூடியது அல்ல. மிகச் சாதாரண கிண்டலைப் பொறுத்துக்கொள்ளும் மனவலிமை இல்லாத முதலமைச்சர் மம்தா பானர்ஜி தன்னை இன்னும் மோசமாகக் கேலிக்கு உரிதாக்கிக் கொண்டிருக்கிறார். சிரித்து ஒதுக்கத் தெரியாமல் சிரிப்புக்கு ஆளாகியிருக்கிறார். இதற்கு முன் 1987-ல் ஆனந்த விகடன் அட்டையில் அரசியல்வாதிகளை தோலுரித்த ஒரு கார்ட்டூனுக்காக விகடன் ஆசிரியரைக் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவமும்... அதைத் தொடர்ந்து மேற்குவங்கத்தில் பேராசிரியர் ஒருவர் கைதும் என தொடர்கிறது.
ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ‘1984’ நாவலில் பெரிய அண்ணன் என்ற சர்வாதிகார கதாபாத்திரம் மிகப்பிரபலம். மேற்குவங்க மக்கள் மம்தாவை ‘பெரிய அக்கா’ என்கிறார்கள். நடப்பதையெல்லாம் பார்த்தால் பெரியண்ணன் மனோபாவ மாகத்தான் தெரிகிறது.!
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் மக்கள் பாலா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக