எரிசக்தித் தேவை அதிகரித்துக் கொண்டே போவதால், மிகப்பெரிய அளவில் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பது உண்மையே. இந்த நேரத்தில் கூடங்குளம் அணுஉலையைத் திறக்கக்கூடாது என்கிற போராட்டம் வலுப்பெற்றிருப்பது ஆபத்தானது. இந்தப் போராட்டத்தை அணுஉலைக்கு எதிரான போராட்டமாகத் தனித்துப் பார்க்கக்கூடாது. போராட்டத்துக்காக வெளிநாடுகளில் இருந்து நிதி குவிந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதைப் பற்றி பிரதமரே கூறியிருக்கும்போது, அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியுமா?
கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பானது என்று முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் உள்ளிட்ட பல விஞ்ஞானிகளும் நிபுணர்களும் சான்றளித்திருக்கிறார்கள். அப்படியிருந்தும் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியாமல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி திணறிக் கொண்டிருக்கிறது. கிளர்ச்சியில் ஈடுபட்டிருக்கும் சிறிய குழுவுக்காக மிகப் பெரிய பணி பாதிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்தத் திட்டத்தில் செய்யப்பட்டிருக்கும் முதலீட்டின் மதிப்பு ரூ.14 ஆயிரம் கோடி.! அணு உலை செயல்பட அனுமதித்தால் தயாரிப்பைத் தொடங்கிவிட முடியும். நாட்டின் தேவையை உணர்ந்து, போராட்டக் குழுவினரிடையே மனமாற்றம் ஏற்பட்டு கூடங்குளம் அணுஉலைகள் விரைவில் செயல்பட வேண்டும் என்பதே நமது விருப்பம். இதற்கு அவர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
நல்லது, கெட்டது, மிக மோசமானது என எல்லாவற்றையும் கொண்டதுதான் வாழ்க்கை. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். நாட்டில் இருக்கும் 42 ஆயிரம் தன்னார்வ அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வருகிறது. இவற்றில் பெரும் பாலான அமைப்புகள் செயற்கரிய பணிகளைச் செய்து வருவதை யாரும் மறுக்க முடியாது.
தன்னலம் கருதாமல் ஏழை எளியவர்களுக்காகவும், பெண்களுக்காகவும், சுற்றுப்புறத்தைப் பாதுகாப்பதற்காகவும் பல அமைப்புகள் செயல்பட்டு வருவதை மறுக்க முடியாது. ஆனால், எல்லா அமைப்புகளும் அப்படிப்பட்டவையல்ல. தேசியப் பாதுகாப்பு தொடர்பான விசயங்களில் கிளர்ச்சி செய்து வரும் அமைப்புகளை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். அதுதான் தற்போது கூடங்குளம் அணுஉலை போராட்ட விசயத்திலும் நடைபெற்று வருகிறது.
எரிசக்தி மற்றும் உணவுப்பாதுகாப்பு ஆகியவை நமது வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவை. ஆனால், ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி, மின்சக்தி திட்டங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாகத் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றன. மின்தேவை அதிகரிப்பது தவிர்க்கவே முடியாது என்று தெரிந்திருந்தும், நமது நாட்டின் மின்சாரம், நிலக்கரி, அணுசக்தித்துறை அமைச்சர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சரி போனது போகட்டும்.
தற்போது கூடங்குளம் அணுஉலைக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தி, அணுஉலைகளை திறந்து தமிழகத்தின் நிலவும் கடும் மின்தட்டுப்பாட்டை கொஞ்சம் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பம்.
கட்டுரையாளர். அருண் நேரு. கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக